சோழர் வரலாறு - சோழரது இருண்ட காலம்
கோச்செங்கணான் காலம்: வேள்விக்குடிப் பட்டயப் படி, சங்க காலத்திற்குப் பிறகு பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், சோழநாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்ததத்தர் குறித்த அச்சுதனுக்கும் பிறகு சோழநாட்டை ஆண்ட களப்பிரர் இன்னவர் என்பது தெரியவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையில், 'குமார விஷ்ணு' என்ற பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான். அவன் மகனான புத்தவர்மன் கடல் போன்ற சோழர் சேனைக்கு 'வடவைத்தீப் போன்றவன்' என்று வேலூர்ப் பாளையப் பட்டயம் பகர்கின்றது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக் கருதப்படும் முதலாம் நந்தி வர்மன் என்பவன் காஞ்சிபுரத்திலிருந்து பட்டயம் விடுத்துள்ளான்[15]. ஏறத்தாழ கி.பி. 575-இல் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் மீண்டும் காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர், களப்பிரர் முதலியோரை வென்று காவிரிக்கரை வரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பது வேள்விக் குடிப்பட்டயமும் கசாக்குடி பட்டயமும் குறிக்கும் செய்தியாகும்[16]. இக்குறிப்புகளால் முன்சொன்ன குமாரவிஷ்ணுவுக்குப் பிறகும் சிம்மவிஷ்ணுவுக்கு முன்பும் காஞ்சி பல்லவர் வசம் இல்லாது அடிக்கடி கை மாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுதவிக்கந்தர்க்குப் பிறகு, சிம்ம விஷ்ணு சோணாட்டை வெல்லும் வரை களப்பிரரே சோணாட்டை ஆண்டனர் என்பதற்குரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக் காண்கையில், சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்டவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என்பது கூறப்படவில்லை. கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இடையில் புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனையோடு போரிட வேண்டியவன் ஆனான்; 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு சோழரை வென்றான். இவற்றுடன் புத்தவர்மன் போரைக் காணின் அச்சுதக்களப்பிரனுக்குப் பிறகு (கி.பி. 5ஆம் நூற்றாண்டில்) சோழர் கடல் போன்ற சேனையை வைத்திருந்தனர்; அவர் பல்லவருடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ஙனம் கடல் போன்ற சேனையை வைத்துக் கொண்டிருந்த சோழன் சங்ககாலத்திற்கும் பிற்பட்டவனாகக் கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் அரசர் பலரை முறியடித்தவன்; பெரிய யானைப்படை, குதிரைப் படைகளை உடையவன் என்பன களவழியாலும் திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. அச்சோழன், தன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட களப்பிரரை அடக்கிப்பின் வடபுலத்திருந்த புத்தவர்மனுடன் போரிட்டு வெற்றி கொண்டனன் போலும்! அவனை "வடபுலக்கோன்’ என்று திருமங்கையாழ்வார் குறித்தமை இதுபற்றிப் போலும்! இங்ஙனம் கொள்ளின், கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனலாம். கோச்செங்கணான் மீது பாடப்பெற்ற களவழியின் காலம் ஏறத்தாழக் கி.பி. 450-600 என்ற இராவ் சாஹிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்தும்[17] இந்த முடிவிற்கு அரண் செய்தல் இங்குக் கருதத்தகும்.
புகழ்ச்சோழர் காலம்: நடுவுநிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும் ஆராய்ந்தும் இம்முடிவு கொள்ளப்படின், இக்கோச்சோழனை அடுத்து, மேற்சொன்ன இடைக்காலத்தில் இருந்தவராகப் (பெரிய புராணம் கூறும்) புகழ்ச்சோழரை எடுத்துக் கொள்ளலாம். இவர் பெயர் சங்க நூல்களில் இல்லாததாலும் சிம்ம விஷ்ணுவுக்குப் பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும், இந்த இடைக்காலமே புகழ்ச் சோழர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பொருத்தமே ஆகும்[18]. அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும் கோச்செங்கணான், புகழ்ச்சோழர் போன்ற சோழப் பேரரசரும் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர் சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை!
கோச்செங்கணான், புகழ்ச்சோழர், களப்பிர அரசர்களாகிய கூற்றுவ நாயனார்[19] (அச்சுத விக்கந்தன்?) இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி.450-550) கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்டபாகம் எனப்பட்ட காலத்தின் ஒருபகுதி வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். 'இவ்விருண்ட காலம்-பல்லவர் காஞ்சியைத் துறந்து தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம்- சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும்' என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்[20] பேரளவு உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும்.
கி.பி. 600 முதல் 850 வரை: (1) ‘பல்லவன் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) காவிரி பாயப் பெற்ற வளமிக்க சோழநாட்டைக் கைப்பற்றினான். அவன் இம்முயற்சியில் தன்னை எதிர்த்த களப்பிரர், சோழர், பாண்டியர் முதலிய தென்னாட்டரசரை வென்றான்’ என்று வேலூர் பாளையச் செப்பேடுகள் செப்புகின்றன[21].
(2) சோழரை வென்றதாகச் சாளுக்கியர் பட்டயம் கூறுகிறது. இவர்கள் ரேனாண்டுச் சோழராக இருத்தல் வேண்டும்[22]
(3) சிம்மவிஷ்ணு மகனான மஹேந்திரவர்மன் சோணாட்டின் பேரழகைக் கண்டுகளிக்கச் சிவனார்க்குத் திருச்சிராப்பள்ளி மலைமீது குகைக்கோவில் அமைத்ததாகக் கல்வெட்டிற் கூறியுள்ளான். அம்மலை சோணாட்டின் தலைமுடி என்று கூறப்பட்டுள்ளது[23]. (4) இரண்டாம் புலிகேசி பல்லவரைக் கச்சிநகர்க் கோட்டைக்குள் புகவிட்டுச் சோழர், பாண்டியர், சேரர்க்கு நன்மைவரச் செய்தான் என்று அய்ஹோளே கல்வெட்டுக் கூறுகிறது. அதன் காலம் கி.பி. 634 ஆகும்[24].
- ↑ 15. Ep. Indica, III. y. 145.
- ↑ 16. Ibid. Heras's ‘Studies in Pallava History,’ p. 20
- ↑ 17. பல்கலைக்கழகப் பதிப்பு - திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும், பக்.10-11, 75
- ↑ 18. C.V.N. Aiyar’s origin and Development of Saivism in S. India.’ p.183.
- ↑ 19. Ibid pp. 180-181.
- ↑ 20. Ind Ant. 1908. p. 284.
- ↑ 21. S.H. I. II. p.208.
- ↑ 22. Ibid pp. 180-181.
- ↑ 23. S,I.I. Vol.I. pp. 33-34.
- ↑ 24. Ep. Indica, Vol. 6, p.6.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழரது இருண்ட காலம் - History of Chola - சோழர் வரலாறு - காலம், சோழர், பல்லவர், கோச்செங்கணான், களப்பிரர், பிறகு, நூற்றாண்டின், சிம்ம, புத்தவர்மன், விஷ்ணு, என்பது, கைப்பற்றினான், புகழ்ச்சோழர், போலும், பட்டயம், கடல், 5ஆம், அவன்