சோழர் வரலாறு - சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
இலக்கியம்
மேல்நாட்டு இலக்கியங்கட்கும் நம்நாட்டு இலக்கியங்கட்கும் சிறந்த வேறுபாடு உண்டு. மேல்நாட்டு இலக்கியம் சமயச் சார்புடையதாக இராது. அதனால் அது வரலாற்றுக்குப் பெருந்துணை செய்கிறது. ஆனால்
இந்திய நாட்டின் வரலாறு சமயக் கடலுள் ஆழ்ந்து புனைந்துரைக்கப்பட்ட பல கதைகளில் மறைப்புண்டு கிடக்கிறது கொடுமையாகும். இதனால், ‘இலக்கியங்களை நம்பி வரலாற்றுக் கட்டடம் அப்படியே கட்டலாகாது[3] என்ற சாத்திரீய முறையில் ஆராய்ச்சி நடத்தும் அறிஞர் அறைந்துள்ளனர். இராமாயணம், பாரதம் போன்ற வடமொழிப் பெருநூல்கள் பலமுறை பல மாறுதல்கள் அடைந்துள்ளன என்பதை அறிஞர்கள் நன்கு காட்டி விளக்கியுள்ளனர். ஆதலின், தமிழில் உள்ள திருவிளையாடல் புராண நூல்கள், பரணி, உலா, பெரிய புராணம் முதலிய்வற்றில் வரலாற்று முறைக்கு ஏற்பனவற்றையே கோடல் ஆராய்ச்சியாளர் கடனாகும்.
பிற்காலச் சோழர் காலமே தென்னாட்டில் இலக்கிய இலக்கண நூல்கள் பெருகிய காலம் ஆகும். சைவத் திரு முறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி இக்காலத்திற்றான் வாழ்ந்தவராவர். ஒன்பதாம் திருமுறையைப் பாடிய அடியார் பலர் வாழ்ந்த காலமும் இதுவே. பன்னிரண்டாம் திருமுறை ஆகிய திருத்தொண்டர் புராணம் என்னும் வரலாற்றுச் சிறப்புடைப் பெரு நூல் இக்காலத்தேதான் எழுதப்பட்டது. ‘சேக்கிழார் தம் மனம் போனவாறு நம்பிகள் அந்தாதியில் இல்லாதவற்றையும் சேர்த்து விரித்து நூல் செய்துள்ளார். அவர் கூறும் நாட்டு நிலை அவர் காலத்ததே என்று வரலாற்றாசிரியர் சிலர் வரைந்துள்ளனர். தென்னாட்டு வரலாறு சம்பந்தப்பட்டவரை, சேக்கிழார் பெருமான் பெரும்பான்மை பிழைபடாது எழுதியுள்ளார் என்பதை பெரிய புராணத்தை அழுத்தமாகப் படித்தவரும் பல்லவர் முதலிய பல மரபு அரசர் தம் கல்வெட்டுகளை நுட்பமாக ஆய்ந்தவரும் நன்கு அறிதல் கூடும். சேக்கிழார், தாம் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதை அறவே மறந்தவராய் - அவ்வந் நாயன்மார் காலத்தவராக இருந்து நாட்டு நடப்பும் பிறவும் நன்கறிந்தவராய்ப் பாடியுள்ள முறையை வேறு எந்தத் தமிழ் நூலிலும் காண இயலாதே! சேக்கிழார் பெருமான் புராணம் பாட வந்த பிற்கால ஆசிரியர் போன்றவர் அல்லர். அவர் சிறந்த புலவர், சோழர் பேரரசின் முதல் அமைச்சர்; சிறந்த சிவனடியார்; தமிழகம் முழுவதையும் நன்கு அறிந்தவர்; தொண்டை நாட்டினர்; பல்லவ அரசர் கல்வெட்டுகளையும் சோழர் கல்வெட்டுகளையும் இக்காலத்தில் நமக்குக் கிடைக்காத பல நூல்களையும் செப்புப் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் நன்கு படித்தவர் என்பன போன்ற பல செய்திகள் அவர் தம் புராணத்துள் காணப்படுகின்றன. வரலாற்றாசிரியர் ‘இருண்ட காலம்’ என்று கூறி வருந்தும் காலத்தைப் பற்றிய பல உண்மைச் செய்திகளைத் தம் காலத்திருந்த மூலங்களைக் கொண்டு சேக்கிழார் குறித்துச் செல்லலை வரலாற்றுப் பண்புடைய உள்ளத்தினர் நன்குணர்தல் கூடும். ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் இன்னும் வெளி வராத இக்காலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளைக் கொண்டு பார்ப்பினும், ‘சேக்கிழார் சிறந்த கல்வெட்டுப் புலவர்-வரலாற்றுக்கு மாறாக நூல் செய்யாத மாபெரும் புலவர்.அவருக்கிணையாக இத்துறையில் தமிழ்ப் புலவர் எவரும் இலர். ஆதலின், அவரது நூலைச்[4] சான்றாகக் கொள்ளலாம்’ எனத் துணிந்து கோடலில் தவறுண்டாகாது.
- ↑ 3. A. A. Macdonell’s ‘A History of Sanskrit Literature', pp.282-288. J. Muir's ‘Original Sanskrit Texts’, Vol.IV pp. 441–491.
- ↑ 4. Vide the Author's ‘critical study of Sekkizhar and his historical material.’
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள் - History of Chola - சோழர் வரலாறு - சிறந்த, சேக்கிழார், புலவர், நன்கு, அவர், கல்வெட்டுகளையும், சோழர், என்பதை, புராணம், நூல்