சோழர் வரலாறு - சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்
கோவில்கள்
தமிழ் நாட்டில் வியத்தகு முறையில் கற்கோவில்கள் பலவற்றை அமைத்த பெருமை சோழர்க்கே உரியது. கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங்கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில் சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப் படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதி செய்துகொண்டு புதிதாக அமைந்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக் கலை உணர்வை அறியலாம்[1]. ஒவியங்களைக்[2] கொண்டு, சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம். கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கிப் பல்லவர் காலக் கட்டடக் கலை சோழர் காலத்தில் எங்ஙனம் தொடர்புற்று வளர்ந்து வந்தது என்பதை உணரலாம். எண்ணிறந்த பாடல்பெற்ற கோவில்கள் சோழர்களால் கற்கோவில்களாக மாற்றப்பட்டன. பெருஞ்சிறப்பும் பெற்றன, இக்கோவில்களை முற்றப் பரிசோதித்துச் சோழர்காலச் சிற்ப-ஒவிய-கட்டடக் கலைகளின் வளர்ச்சியைச் சிறந்த முறையில் ஆராய்ந்து நூல் எழுதினோர் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும். சுருங்கக்கூறின், இன்று சோழர் வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்வன - வரலாற்றுக்கு மூலமாக அமைந்துள்ளன - கோவில்களே ஆகும்.
சோழர் காசுகள்
சோழர், பல்லவர்களைப் போலவே, பொன், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் ஆன காசுகளை வெளியிட்டனர். அவற்றுள் பல இப்பொழுது கிடைத்துள்ளன. பொற் காசுகள் சிலவே, வெள்ளிக் காசுகள் சில: செப்புக் காசுகள் பல. செப்புக் காசுகள் பல வடிவங்களிற் கிடைத்துள்ளன. எல்லாக் காசுகளும் சோழர் அடையாளமான புலி பதியப் பெற்றவை; புலிக்கருகில் சேர, பாண்டியர் குறிகளான வில்லும் கயலும் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் இவற்றை வெளியிட்ட அரசன் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. சில காசுகளில் இவையே பின்புறத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. வேறு சில காசுகள் ‘ஈழக்காசு’ எனப்படுவன. அவற்றில் ஒரு முரட்டு மனிதன் ஒரு பக்கத்தில் நிற்பது போலவும் மற்றொரு பக்கத்தில் இருப்பது போலவும் காணப்படுகிறான். கல்வெட்டுகளையும் காசுகளில் உள்ள எழுத்துகளையும் கொண்டு இக்காசுகள் இன்ன அரசன் காலத்தவை என உறுதிப்படுத்தலாம். ஈழக்காசு என்பன இராசராசன் காலம் முதல் முதற் குலோத்துங்கன் காலம் வரை வழக்கில் இருந்தமை கல்வெட்டுகளால் தெரிகிறது. சோழர் ஈழநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட போது ஈழக்காசை வெளியிட்டனர் என்பது இதனால் அறியக்கிடக்கிறது அன்றோ?
- ↑ 1. 123 of 1900; Ep Ind. Vol. 7, pp. 145-146.
- ↑ 2. தஞ்சைப் பெருவுடையார் கருவறைச் சுவர் மீதுள்ள சோழர்கால ஒவியங்கள் முதலியன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள் - History of Chola - சோழர் வரலாறு - சோழர், காசுகள், அறியலாம், கொண்டு, கோவில்கள்