சேர மன்னர் வரலாறு - பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்
குட்டநாட்டு வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட வேந்தர்களுள் மிகவும் பழையோனாக இவ்வுதியன் சேரலாதன் காணப்படு கின்றன. புறநானூறு இவனைப் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று குறிக்கின்றது. சேரலாதன் என்பதைப் பொதுவாகக் கொண்டு, பெருஞ்சேரலாதன், நெடுஞ்சேர லாதன் என்று பெயர் தாங்கியோர் பலர் உள்ளனர். அது நோக்க, சேரலாதன் என்பது சேர வேந்தர் குடிப்பெயர் என்று தெளியக் காணப்படும். சேரல் ஆதன் என்பது சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படுகிறது. படவே, சேரலாதன் என்ற பெயருடையோர், சேரமான் ஆதன் என்பான் வழி வந்தவர் என்பது இனிது விளங்கும். இச் சேர மானும் உதியன் சேரலாதன் எனப்படுவதால் இவன் ஆதன் வழி வந்தவன் என்பது பெறப்படும் அந்த ஆதனைப்பற்றி இதுகாறும் ஒன்றும் தெரிந்திலது. ஆதன் அவினி யென்றொரு சேரமான் ஐங்குறு நூற்றிற் காணப்படுகின்றான். அந்த அவினியும் ஆதன் வழிவந் தோனாகத் தெரியினும், அவ்வாதன் சேரமானாகிய ஆதன் அல்லன் என்பது அவன் சேரல் ஆதன் எனப் படாமையால் விளங்குகிறது.
இச் சேரலாதன் பெருஞ்சோற்றுதியன் எனப் புறநானூற்றைத் தொகுத்த சான்றோரால் குறிக்கப் படுவன், மாமூலனார் முதலிய சங்கச் சான்றோர் உதியஞ்சேரல் என்றும் உதியன் என்றும் வழங்கு கின்றனர். இவன் காலத்தே குட்டநாட்டுக்குத் தெற்கில் வேளிர் பலர் வாழ்ந்தனர். அவர் வாழ்ந்த நாடு வேணாடு எனப்படும். மேனாட்டு யவனர் குறிப்புகள், கொல்லத்துக்குத் தென் பகுதியில் ஆய்வேள் வழியினர் ஆட்சி செய்தனர் என்றே குறிக்கின்றன. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேடும்[1] இந் நாட்டு வேளிரை ஆய்வேள் என்று குறிக்கின்றது. இப் பகுதியிலிருந்து இனிய அரசு புரிந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்பதும் இக் கருத்தை வற்புறுத்தும். இவ் வேணாட்டின் தெற்கெல்லை தெக்கலை எனவும், வடக்கெல்லை வக்கலை எனவும் இப்போது வழங்குகின்றன. இக் கருத்தை அறியாமையால் சிலர்[2] வேணாடு என்பது வானவனாடு என்பதன் திரிபாகக் கூறுகின்றனர்.
இவ் உதியன் காலத்தில் வேணாட்டில் வெளியன் என்னும் வேளிர் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மகள் வேண்மாள் என்பவளை உதியன் மணந்து கொண்டான்; இத் திருமணத்தின் பயனாக உதியஞ்சேரலுக்கு மக்கள் இருவர் தோன்றினர். முன்ன வனுக்கு நெடுஞ்சேரலாதன் என்றும் பின்னவனுக்குக் குட்டுவன் என்றும் பெயரிட்டான். இருவரும் அரசர்க்கு வேண்டப்படும் கலைப்லவும் இளமையிலேயே நன்கு பயின்று வந்தனர்.
முடிவேந்தர்க்கு மகட்கொடை வழங்கும் முறைமை தமிழகத்தே வேளிர்பால் இருந்தமையின், அவ் வேளிர்களைத் தங்கள் நாட்டை யடுத்துள்ள பகுதிகளில் இருந்து வருமாறு செய்வது பண்டை வேந்தர் மரபு. பாண்டி நாட்டை அடுத்துள்ள பறம்புநாட்டிலும், சோழ நாட்டை அடுத்துள்ள கொல்லி நாட்டிலும், தொண்டை நாட்டை அடுத்துள்ள மலையமான் நாட்டிலும், பிறவிடங்களிலும் வேளிர்கள் இருந்து வந்தமை சங்க இலக்கியம் பயில்வோர் நன்கறிந்தது இவ்வாறே சேரமன்னர்கள் தெற்கில் ஒரு வேணாடு கொண்டது போல் வடக்கில் வானவாசி நாட்டிடையே ஒரு வேணாட்டைக் கொண்டனர். அவ் வேணாடு இடைக்காலத்தே வேளகமாயிருந்து இப்போது பெல்காம் (Belgaum) என வழங்குகிறது. மேலும், மகட் கொடை வழங்கும் வேளிர் தங்கள் நாட்டை அடுத்திருந்து, தமிழ் வேந்தர்க்கு ஒரு சிறந்த அரணாகவும் விளங்கிற்று. “பெண்ணைக் கொடுத்தோமோ கண்ணைக் கொடுத்தோமோ” என்பது தமிழரிடை நிலவும் பழ மொழி. மகட்கொடை புரிந்த வேளிர் தம் மகளது வாழ்வு குறித்து அவர்களை மணந்து கொண்ட முடி வேந்தர்க்குத் தக்க பெருந்துணைவராய் இருந்தனர்.
மகட்கோள் முறையால் வேணாட்டவரோடும், வானவாசி, நாட்டவரோடும் வரம்பறுத்துக் கொண்ட வகையால், வானவாசிகளோடு முரண் கெடுத்து இனிய அரசுமுறை நடத்திவந்த சேரவேந்தர்க்குத் தாம் வாழ்ந்த நாட்டிடம் “சிறிது” என்ற உணர்வு தோன்றி அவர்கள் உள்ளத்தை அலைத்துக்கொண்டிருந்தது. உதியஞ்சேரல் காலத்தில் தென்பாண்டி நாட்டையாண்ட வேந்தர் செவ்விய அரசுபுரியும் திறமிலராக இருந்தனர். வேணாட்டு வேளிர்கள் தனக்குரியராய் இருந்தமையின், அவர் நாட்டுக்குத் தெற்கிலுள்ள தென்பாண்டி நாட்டைத் தன் நாட்டோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற வேட்கை சேரமானுக்கு உண்டாயிற்று. அதனை நிறைவேற்றிக் கோடற்குரிய செவ்வி தோன்றியதும் உதியஞ்சேரல் தென்குமரியைச் சூழ்ந்திருந்த தென்பாண்டி நாட்டை வென்று தென்கடற் கொடியைத் தன்னாட்டுக்கு எல்லையாகக் கொண்டான். அந் நாட்டுக் கீழ் கடற்கரையும் சேரர்க்குரிய தாயிற்று. இதனால் சான்றோர் இவனை, “நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்[3]” என்று பாராட்டினர். இச் செய்தியை நினைவிற் கொண்டே பின் பொருகால் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடப் புக்குந்த கபிலர், “இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்காவுள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேரலாதன்[4]” என்று பாடினர். இதனால் உதியனது புகழ் தமிழகம் முழுவதும் பரவிற்று. பல இடங்களில் ஊர்கள் நிறுவப் பெற்றன. நாட்டில் செல்வப் பெருக்கும் நல்வாழ்வும் சிறந்தன. இச் சிறப்புப் பற்றி நாட்டில் உதியம் பேருர், உதியஞ்சேரி என்ற பெயருடைய ஊர்கள் உண்டாயின. அவற்றுட் சில இன்றும் நின்று உதியஞ் சேரலின் உயிர்ப் புகழை நினைப்பித்துக் கொண்டிருக்கின்றன.
- ↑ 1. EP. Indi. vol. xvii. No. 16. p. 303.
- ↑ 2. k. P. P. Menon’s History of kerala. Vol ii.
- ↑ 3. அகம் 65.
- ↑ 4. புறம் 8.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேரலாதன், ஆதன், என்பது, நாட்டை, வேளிர், வேணாடு, என்றும், உதியன், உதியஞ்சேரல், தென்பாண்டி, வேந்தர், அடுத்துள்ள