சேர மன்னர் வரலாறு - சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ
அவருடைய பாட்டுகளில் முன்னர்க் காட்டிய அறங்களே யன்றி, மூவெயில் முருக்கிய முக்கட் செல்வனும், அரக்கு மனையில் அகப்பட்டு வருந்தும் பாண்டவரும், அவரை விரகிற் கொண்டேகும் வீமனும், மீனக் கொடியுடைய காமனும் பிறரும் காட்சி தருகின்றனர். கான மரங்கள் ஞானம் நல்குகின்றன. கான்யாற்றின் கரை மரங்கள் தீதிலான் செல்வத்தைச் சிறப்பிக்கின்றன. இளவேனிலில் மரங்களும் கொம்பும் கிளையும் கொடியும் புதலும், உணர்ந்தோர் ஈகை, நல்லவர் நுடக்கம், ஆன்றவர் அடக்கம் முதலிய நற் காட்சிகளை[29] மனக் கண்ணிற் காட்டுகின்றன. இயற்கைக் கவிஞர் என ஏனை. நாட்டுப் புலவர்களை ஏத்தித் திரியும் அறிஞர் அவரை அறிந்திலரே! என்னே அவரது இயல்பிருந்தவாறு!
இதோ, கோங்கமரஞ் செறிந்த காடு தோன்றுகிறது; கார்த்திகை விளக்கீடு கடுங்கோவின் நினைவுக்கு வருகிறது. அதனைத் தமிழ்மகள் ஒருத்திக்குக் காட்டுவார் போன்று, “கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை, அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள், செல்சுடர் நெடுங்கொடி போலப், பல்பூங்கோங்கம் அணிந்த காடே[30]” என்று இசைக்கின்றார். கார்த்திகை விளக்கீடு காட்சிக்கு இனிது என்பதை, இடைக்காலத்தில் இருந்த திருஞானசம்பந்தரும், “தொல் கார்த்திகை நாள், தளத்தேந்திள (முல்லைத்) தையலார் கொண்டாடும், விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்[31]” என்று பாடியுள்ளார்; - கார்த்திகையைக் கைவிட்டுத் தீபாவளியைத் தீவளியாக்கி இருளிரவில் தோசை தின்றுழலும் இக்காலத் தமிழர்களுக்கு இதன் அழகு எங்ஙனம் தெரியப் போகிறது?
இவருடைய பாட்டுகளில் ஈடுபட்டுப் பேரின்பம் துய்த்த நற்றிணையுரைகாரரான திரு. நாராயணசாமி ஐயர்[32]. “தலைமகளைத் தலைமகன் காண்பது, தான் வழிபடு தெய்வத்தைக் கண்ணெதிரில் வரப்பெற்றாற் போன்றது என்று கூறுகின்றார்; இதில் தலைமகளை இனிது கூறி நடத்திச் செல்வது வியக்கத் தக்கது” என்றும் “பிரிவு உணர்த்தியவழித் தோழி நாம் முன்பு வந்த கொடிய சுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரே உள்ளது போலச் சுழலா நிற்கும் என இறும்பூதுபடக் கூறுகின்றார்” என்றும், “பிரிவுண்மை அறிந்த தலைவி தலைவனை மயக்கும் தன்மையுடைய கோலத்தோடு வந்து அவன் மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரை விழைவிக்கும் திறந்ததாகும்” என்றும், “பிரிவோர் பழியுடையரல்லர்; அவரைப் பிணிக்க அறியாத தோள்களே தவறுடையன எனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியா நிற்பர்” என்றும் கூறி மகிழ்ச்சி கொள்வர்.
“இரவலர் வரா வைகல் பல ஆகுக” என்றாற் போலும் சொற்றொடர்களால் பெருங்கடுங்கோ ஈகையிலும் சிறந்து விளங்கினார் என்பது தெளிவாகிறது. மேலும், பெருஞ்செல்வமும், செல்வத்துக்கேற்ற புலமைச் செல்வமும், கொடை நலமும் சிறக்கப் பெற்ற இச் சேரமான் தன்னை நாடி வந்த பரிசிலரை நன்கு சிறப்பித்திருப்பர் என்பது சொல்லாமலே விளங்குவ தொன்றன்றோ!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ - History of Chera - சேர மன்னர் வரலாறு - என்றும், விளக்கீடு, கார்த்திகை