சேர மன்னர் வரலாறு - பல்யானைச் செல்கெழு குட்டுவன்
அகப்பாவை வென்றது முதல் குட்டுவனது புகழ் நாடெங்கும் பரவியிருந்தமையின் நாட்டில் மக்கள் வாழ்வு இனிது இயங்கிற்று. போர் இல்லாமையால் மறவர் தத்தம் மனைகளில் இருந்து தமக்குரிய தொழில் செய்து வந்தனர்; வினை கருதியும் பொருள் கருதியும் பிரியும் பிரிவு, அவர்தம் வாழ்க்கையில் நிகழாமையால், ‘புலம்பா உறையுள்’ வாழ்க்கையே மலிந்திருந்தது. தானை மறவர் சிலர் வெறிதே மடிந்திருந்தனர். பிற நாடுகள் பெருவறம் கூர்ந்து வருந்துங் காலத்தும், குட்ட நாட்டிற் பாயும் பேரியாறு, விடரளை நிறையப் பெருகிப் புலங்களில் பரந்து நீர் நிரம்புமாறு காட்டுப்பூக்களைச் சுமந்து வந்து பாய்வதில் தப்பாதாயிற்று. அதனைத் தடுத்து நிறுத்தி வயல்களில் தேக்குங்காலத்து, உழவர் செய்யும் பூசல் ஒன்றே நாடு எங்கணும் விளங்கித் தோன்றிற்று. இதனால் குட்டுவன் நாடே திருவுடையது எனப்படுவதாயிற்று. கோதமனார் இந்த நலத்தை அழகியதொரு பாட்டாகப்[5] பாடி வேந்தனை இன்புறுத்தினார்.
இவ்வாறு இருக்கையில் சேர நாட்டுக்குக் கிழக்கில் உள்ள கொங்கு நாடு குட்டுவனது முன்னோர் காலத்தே சேர வேந்தர் ஆட்சியில் இருந்த தெனினும், அங்கே இருந்து நாடு காவல் புரிந்த வேந்தர் சிலர், அயலில் இருந்த குறுநிலத்தவர் சிலரைத் துணையாகக் கொண்டு பாலைக்காட்டு வழியாகக் குட்ட நாட்டிற் புகுந்து குறும்பு செய்தனர். குட்டுவரும் பூழியரும் நிறைந்த பெரும்படை யொன்றைக் கொண்டு குறும்பு செய்து போந்த கொங்கரைக் குட்டுவன் வெருட்டிச் சென்று, மேல் கொங்கு கீழ் கொங்கு எனப்படும் இரு கொங்கினையும் கைப்பற்றித் தன் அரசியல் ஆணைவழி நிற்கச் செய்தான். அப்போது கீழ் கொங்கு நாட்டில் இப்போது தாராபுரம் எனப்படும் ஊர் வஞ்சி என்ற பெயருடன் சிறப்புறுவதாயிற்று. அந் நாளில் கொங்கு நாடு நீர் வளங்குன்றி முல்லை வளமே சிறந்து நின்றது. அதனால், அங்கு வாழ்ந்தவர் அனைவரும் ஆ காத்து ஓம்பும் ஆயர்களாகவே இருந்தனர். கொங்கு நாட்டில் காவிரியின் வடகரையில் வாழ்ந்த மழவர் பலர் தெற்கில் கீழ் கொங்கு நாட்டில் வந்து குடியேறியிருந்தனர் அவர்கள் மறப்பண்பு சிறந்து நின்றமை அறிந்து, கீழ் கொங்கு நாட்டில் வாழ்ந்த வேளிர் பலர், அவர்களைத் தமது படை மறவராகக் கொண்டிருந்தனர். கொங்கு நாட்டைக் குட்டுவன் அகப்படுத்தி, அங்கு வாழ்ந்த மழவரும் அவன் ஆணை வழி நிற்பாராயினர். அவர்கள் போர்த்துறையில் சிறந்து குட்டுவன் பாராட்டும் சிறப்பு எய்தியதனால் குட்டுவன் “குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை[6]” என்ற சிறப்பை எய்தினான்.
இவ்வாறு குட்டுவரும் பூமியரும் கொங்கரும் மழவரும் ஆகிய பலவகை மறவர், தானை வீரராக மலிந்த பெரும்படை கொண்டு குட்டுவன் விளக்க முறுகையில் ஆங்காங்குச் சிற்சில தலைவர்கள் நின்று சிறு குறும்பு செய்தனர். அறியாமை காரணமாக அவர்கள் போர் தொடுத்தாராயினும், குட்டுவன், தன் பெரும் படை கொண்டு அவர்களை வலியழிப்பதில் சிறிதும் தாழாது ஒழுகினான். ஒருகால் குறுநிலத் தலைவன் ஒருவன் குட்டுவனைப் பணிந்தொழுகாது பகைத்தான். குட்டுவன் விடுத்த படை அவனது நாடு நோக்கிச் சென்றது. தூசிப்படை முற்படச் சென்று பகை வேந்தனது அரண்களை அழித்துச் செல்ல, குட்டுவன் அதன்பின் அணிவகுத்துச் செல்லும் தானைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். பகைவன் படைத்திரள், குட்டுவனது தூசிப் படைக்கு எதிர் நிற்கமாட்டாது உடைந்து கெட்டது; அப் பகைவர் நாட்டில் வாழ்ந்த மக்களும் படைவரவு கண்டு அஞ்சி வேறு இடங்கட்கு ஓடிவிட்டனர்; ஊர்கள் பல அழிந்தன; அழிந்த இடங்களில் காட்டு விலங்குகள் வாழலுற்றன. பகைவர் செய்த குறும்பினை அடக்கி வெற்றி காணும்போதெல்லாம் குட்டுவன் தன் தானை வீரரைக் கூட்டி விழாக் கொண்டாடித் தானை மறவர்க்கும் பிறருக்கும் பெருங்கொடை வழங்கினன்.
சிற்றரசன் ஒருவனை வென்றவிடத்துச் சிறுவிழா நிகழினும் அதனைச் சிறப்பாகக் கொண்டாடுவது குட்டுவனுக்கு இயல்பு. ஒருகால், அத்தகைய சிறுவிழா ஒன்று நிகழ்ந்தபோது, பாலைக் கோதமனார் கலை வல்ல இரவலர் சுற்றம் உடன்வர வந்தார். விழா நிகழும் இடத்தருகே இருந்த வயல் வரம்புகளில் உன்னமரங்கள் நின்றன; அவற்றின் கவடுகளில் சிள் வீடு என்னும் வண்டுகள் தங்கிக் கறங்கின ; ஊர் மன்றங்களில் தங்கித் தெருக்களிற் பாடிச் செல்லும் பரிசிலர் போந்து உண்பவுண்டு, இழையணிந்து உவகை மலிந்து கூத்தாடினர். அவர்கட்குக் குட்டுவன் பெரு விலையை யுடைய நன்கலங்களைப் பரிசில் வழங்கினான். அக்காலை அவ்விடம் போந்த கோதமனாரைக் குட்டுவன் கண்டு அன்போடு வரவேற்றுச் சிறப்பித்தான். அப்போது அவன், நாட்டின் நலம் கூறுமாறு கோதமனாரை வினவினான். அவனுக்கு அவர் நாட்டின் நலத்தை எடுத்துரைத்து முடிவில் தான் வழியில் கண்ட காட்சியை விளக்கினர்; “வேந்தே, சிறுமகிழ்வு நிகழினும் பெருங்கொடை புரிவது உனது இயல்பு; உனது இப்பண்பை அறியாது பகைத்துக் கெட்ட வேந்தர் நிலை நினைத்தற்கு மிக்க இரங்கத்தக்க தாய் உளது. இப்போது உன்னோடு பகைத்துப் பொருது கெட்டோருடைய நாடுகளில் பெருந்துறைகள் பல உண்டு. அவற்றின் கரையில் மருதமரங்களும் காஞ்சி முருக்கு முதலிய மரங்களும் நிற்கும்; அவற்றின் பூக்கள் சொரிந்துகிடக்கும் அடைகரையில் நந்தும் நாரையும் செவ்வரியும் உலாவும்; நீர்நிலைகளில் தாமரையும் ஆம்பலும் பெருகியிருக்கும்; இத்தகைய நாடுகள் இப்போது பாழ்பட்டுப் பல்லும் முள்ளும் நிரம்பிப் பொலிவிழந்து விட்டன[7]” என்று பாடி, அவனது வெற்றிச் சிறப்பை எடுத்துரைத்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்யானைச் செல்கெழு குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - குட்டுவன், கொங்கு, நாட்டில், நாடு, வாழ்ந்த, கொண்டு, கீழ், தானை, இப்போது, சிறந்து, அவற்றின், வேந்தர், மறவர், குட்டுவனது, இருந்த, குறும்பு