சேர மன்னர் வரலாறு - சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
இரும்பொறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, யானைக் கட்சேய் மாந்தரனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய சேர வேந்தனாவன். இவனது இயற்பெயர் காணப்படாமையால், இவன் யானைக்கட்சேய் மாந்தரனும் இவனும் ஒருவரே என்றும் கருதிவிட்டனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் யானைக்கட்சேய் மாந்தரனும், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தில் இந்தச் சேரமான் மாந்தரனும் இருந்தமையின், இருவரும் வேறு வேறு ஆதலேயன்றி, நெடுஞ்செழியனுக்குப் பின்னர் விளங்கிய இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்தவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை யானைக்கட் சேய்க்குப் பின்னோ னாதலையும் தெளியவுணர வேண்டும். இம்மாந்தரஞ்சேரல் ஆட்சி நிகழும் போது, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில் தேர்வண் மலையன் என்ற குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து கொண்டு வந்தான்.
மாந்தரஞ்சேரலுடைய ஆட்சி கொங்கு நாடெங்கும் பரந்து கிழக்கிற் சோழ நாட்டைத் தனக்கு எல்லையாகக் கொண்டிருந்தது. சோழ வேந்தருட் சிலர், காலம் வாய்க்கும்போது நமது நாட்டை யடுத்திருக்கும். கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதும் உண்டு. இவ்வகையில் கொங்குநாடு சோழர்க்கும் சேரர்க்கும் கைம்மாறுவது வழக்கம். இன்றும் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் சோழர் கல்வெட்டுகள் பல இருத்தலை நாம் காணலாம். பிற்காலத்தே கொங்குச் சோழர் என்றே ஒரு குடியினர் இருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்தது வரலாற்றாராய்ச்சியாளர் நன்கறிந்தது. இதனால், மாந்தரஞ் சேரலுக்கும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. இருவரும் போர் செய்தற்கும் சமைந்து விட்டனர்.
அந்நாளில் திருக்கோவலூரிலிருந்து மலையமான் நாட்டை ஆண்டு வந்த தேர்வண்மலையன் என்பான் அடல் வன்மையும் படை வன்மையும் மிக்கு ஏனை முடிவேந்தர் மூவரும் நன்கு மதிக்குமாறு விளங்கி னான். இவன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணைவனாயிருந்தான். ஆயினும் அவனுக்குச் சேரரும் பாண்டியரும் பகைவரல்லர். பெருநற்கிள்ளி மாந்தரனோடு போர் செய்யச் சமைந்த காலையில் தேர்வண் மலையன் அவனுக்குத் துணை செய்ய வேண்டியவனானான். மலாடரும் சோழரும் சேர்ந்து சேரர் படையொடு கடும்போர் உடற்றினர். சோழர் வலிகுன்றுமிடங்களில் மலாடர் துணை புரிந்து வெற்றி சோழர்கட்கே எய்து வித்தனர். முடிவில் சேரலர் பின்னிட்டு நீங்க வேண்டியவராயினர். வெற்றிப்புகழ் நிறைந்து மலையமான் தன் நாடு திரும்பி வந்தான். அவனது சீர்த்தி நாடெங்கும் பரந்தது. சான்றோர் பலர், மலையன் சிறப்பைப் பாடித் தேரும் களிறும் பிறவும் பரிசிலாகப் பெற்றுச் சென்றனர். வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்னும் சான்றோர், மலையனைக் கண்டு, “வேந்தே, சோழர்க்கும் மாந்தரனுக்கும் நடந்த போரில் வெற்றிபெற்ற சோழன் நமக்கு வெற்றி எய்துவித்தவன் இவன் அன்றோ , இவற்கு நம் நன்றியுரியது எனப் பாராட்டுகின்றான்; அது பெறாது நீங்கிய சேரமானும், வல்வேல் மலையன் துணை செய்யாதிருந்தால், நன்கு வாய்த்த இப் போரை வெல்வது நமக்கு எளிதாகும்; இவ் வகையால் இருபெரு வேந்தரும் ஒருங்கு பரவ ஒரு நீ ஆயினை, பெரும்[1],” என்று பாராட்டினர்.
நிற்க, திருவாங்கூர் நாட்டில் நெய்யாற்றங்கரை வட்டத்தில் விளங்கில் என்றோர் ஊர் உண்டு. இடைக்காலத்தே விளம்பில் எனத் திரித்து, இப்போது அது விளப்பில் என வழங்குகிறது. பண்டை நாளில் அது வேணாடு என்ற பகுதியில் மாவண் கடலன் என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய்[2] இருந்தது. அக் காலத்தில் அது செல்வங் கொழிக்கும் சிறப்புடைய வூராகவும் விளங்கிற்று. உயர்ந்தோங்கு பெருமனைகளில் வனப்பு மிக்க மகளிர் வாழ்ந்தனர். அவர்கள் தமது மனைத் தெற்றிக்கண் இருந்து தம்முடைய கைவளை யொலிப்ப விளையாடுவது இனிய காட்சி நல்கும். இவ் வேணாட்டிற்குத் தெற்கில் தென்பாண்டி நாடு எல்லையாக இருந்தது. மாந்தரன் சோழரொடு பொருது தோற்றாடி வந்தது. தென்பாண்டி நாட்டவர் வேணாட்டிற் புகுந்து அலைப்பதற்கு இடந்தந்தது. மாந்தரன் போதிய வலியிலன் என அவர்கள் தவறாக எண்ணி வேணாட்டவர்க்குத் தொல்லை விளைவித்தனர். அதனால் விளங்கியில் வாழ்ந்த மக்கள் பெரு விழுமம் எய்தினர். இச்செய்தி மாந்தரனுக்குத் தெரிந்தது. உடனே, அவன், பெரும் படையொன்று கொணர்ந்து விளங்கிலர் எய்திய விழுமம் போக்கி இன்பவாழ்வு எய்தச் செய்தான்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - மலையன், கொங்கு, இராயசூயம், வேட்ட, நாட்டை, சோழர், துணை, இவன், மாந்தரனும், சேரமான், ஆட்சி, காலத்தில்