சேர மன்னர் வரலாறு - சேரமான் கணைக்கால் இரும்பொறை
சங்க காலத்து இரும்பொறை வேந்தருள் சேரமான் கணைக்கால் இரும்பொறையே இறுதியில் இருந்தவன். குட்ட நட்டின் தென்பகுதி, வஞ்சி நகரைத் தலைநகராகக் கொண்டது; வட பகுதியில் தொண்டிகர் சிறப்புற்று விளங்கிற்று. இச் சேரமான் பெரும்படையும் மிக்க போர் வன்மையும் உடையன்.
இவன் காலத்தே கொங்கு நாட்டில் மூவன் என்றொரு குறுநிலத் தலைவன் வாழ்ந்தான்; அவன், முன்பு ஒருகால், பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோர்க்குப் பரிசில் கொடாது நீட்டித்து வருத்திய மூவன் வழியில் வந்தவனாவன். இந்த மூவன், சேரமான் கணைக்காலிரும் பொறையை ஒருகால் இகழ்ந்து அவனது பகைமையைத் தேடிக் கொண்டான். நா காவாது சேர வேந்தை வைது உரைத்த அவனை, இரும்பொறை, போரில் வென்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கித் தன் தொண்டி நகர்க் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டான். மத்தியென்பான் ஒரு காலத்தில் சோழ வேந்தனை வைதுரைத்த எழினி யென்பவனுடைய பல்லைப் பிடுங்கி வெண்மணி [1]’ யென்னும் நகரத்துக் கோயில் வாயிற் கதவில் வைத்து இழைத்துக் கொண்டதுண்டு[2]. ஆகவே, சேரமான் கணைக்காலிரும்பொறை மூவன் பல்லைப் பிடுங்கிக் கொண்டதில் வியப்பு ஒன்றும் கோடற்கில்லை. பண்டையோர் கொண்டிருந்த பகைத்திறச் செயல் வகையில் அதுவும் ஒன்று போலும்.
இந்த இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் சோழன் செங்கணான் அரசு புரிந்து வந்தான். அவன் சிவபெருமான் பால் பேரன்புடையன். அவன் செய்த கோயில்கள் பல தமிழகத்தில் உள்ளன. திருஞான சம்பந்தர் முதலியோர் இச்செங்கணான் செய்த திருப்பணியைப் பாரட்டிப் பாடியிருக்கின்றனர். திருமங்கையாழ்வாரும் அவன் சிவபெருமானுக்கு செய்த திருப்பணியை வியந்து “இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோன் ஈசற்கு எழில்மாடம் எழுபது[3]” செய்தான் என்று சிறப்பித்துப் பாடியிருக் கின்றனர்.
இச்சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும் பொறைக்கும் எவ்வகையாலோ பகைமையுண்டாயிற்று. செங்கணான் பெரும்படையொன்று கொண்டு பாண்டி நாடு கடந்து குட்டநாட்டுக் கழுமலம் என்னும் ஊரை வளைத்துக் கொண்டு போர் உடற்றினான். சேரமான் கணைக்காலிரும்பொறையும் கடும்போர் உடற்றினான். போர் நடந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் இரவு, இரும்பொறையின் பாசறையில் களிறொன்று மதங் கொண்டு, ஓய்ந்து உறங்கிக் கொண்டிருந்த சேரருடைய படைமறவர்க்குத் தீங்கு செய்யத் தலைப்பட்டது. அவர்களும் திடுக்கிட்டுச் செய்வகை அறியாது திகைப்புற்று அலமரத் தொடங்கினர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்ததும் அவன் சட்டெனப் போந்து மத களிற்றின் மத்தகத்திற் பாய்ந்து குத்தி அதனை அடக்கி வீறு கொண்டான். பின்னர் அனைவரும் “திரைதபு கடலின் இனிது கண்டுப்ப [4]” அமைத்தனர்.
இத்துணைப் பேராற்றல் படைத்த இரும்பொறை செங்கணானொடு செய்த போரில் வெற்றி பெறானாயினன்.
ஒரு களிறு மதம் பட்டமைக்குக் கையற்றுக் கலங்கிய சேரமான் படைஞர், மதகளிறு பலவற்றை ஒருங்கு அடக்கவல்ல மாண்புடையனான செங் கணானது படைக்கு எதிர் நிற்கமாட்டாரன்றோ ; அதனால் அவர்கள் சோழர் படைக்கு உடைந்து கெட்டனர். களிறும் தேரும் மாவுமாகிய பல்வகைப் படையும் வீழ்தொழிந்தன. சோழர் படையில் இருந்த மாவும் களிறும் உதைத்தலால் சேரர் தலைவர் ஏந்திய குடைகள் “ஆவுதை காளாம்பி போன்றன [5].” கடுங் காற்றால் அலைப்புண்ட போது காக்களில் வாழும் களிமயில்கள் வீற்று வீற்றோடுவது போலப் பல திசையிலும் கேள்வரைப் பிரிந்த மகளிர் புலம்பித் திரிந்தனர் [6]” குருதிப் புனல் பாய்ந்து நன்னீர் யாறுகள் பலவும் செந்நீர் யாறுகளாய் மாறின. முடிவில் செங்கணானும் சேரமானும் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தே நேர் நின்று பொருதனர். இரும் பொறையைச் சோழன் கைப்பற்றிக் கால்யாப்பிட்டுக் கொணர்ந்து குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டு அரிய காவலும் அமைத்தான். திருப்போர்புறம் கேரள நாட்டில் இப்போது திருவார்ப்பென வழங்குகிறது.
சேர நாட்டுட் புகுந்து சேரமான் கணைக்கால் இரும்பொறையை வென்ற வெற்றி காரணமாக அவன் அந் நாட்டில் முதற்கண் கைப்பற்றிய பகுதி செங்கணான் சேரி என்று பெயர் பெற்றது போலும். இப்போது அது செங்கணாசேரி என்ற வட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. பிற்காலத்தே முதல் இராசராசசோழன் சேரநாட்டு வள்ளுவ நாட்டிற்பெற்ற வெற்றி காரணமாக முட்டம் என்னும் ஊரின் பெயரை மாற்றி, மும்முடிச் சோழநல்லூர் எனத் தன் பெயரிட்ட செய்தியை[7]’ நோக்குமிடத்து, தான் வென்ற கழுமலத்துக்குச் செங்கணான் சேரியென்று தன் பெயரையே இட்டிருப்பான் என நினைத்தற்கு இடமுண்டு.
- ↑ 1. A.R. 379 of 1918.
- ↑ 2. அகம். 211.
- ↑ 3. பெரிய திருமொழி: 6, 6, 8.
- ↑ 4. சற்.18
- ↑ 5. களவழி. 40.
- ↑ 6. களவழி. 15.
- ↑ 7. T.A.S. Vol. p. 292
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரமான் கணைக்கால் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், சேரமான், இரும்பொறை, செய்த, மூவன், செங்கணான், நாட்டில், வெற்றி, கொண்டு, என்னும், போர், கொண்டான், வாயிற், பல்லைப்