சேர மன்னர் வரலாறு - சேரநாட்டின் தொன்மை
இனி, சேர நாட்டுச் சேரலர், தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலம் தமிழ் மொழி சிதைந்து மலையாளமாக மாறி காலம்; சேரநாடென்றும் குடமலை நாடென்றும் வழங்கிய காலம்; அந் நாட்டில் செந்தமிழ் மொழி சிதையாது நிலவிய காலம். இடைக்காலத்தில் சேரநாட்டுப் பகுதிகளில் தோன்றிய தமிழ்க்கல்வெட்டுகளை நோக்கின், அப் பகுதியிலுள்ள மக்களும் ஊர்களும் தூய செந்தமிழ்ப் பெயர் தாங்கி யிருப்பதைக் காணலாம். பரோலா என்னுமிடத்துக் கல்வெட்டு[22] அவ்வூரைப் புலவேர் வாயில் எனவும், திருவன்னூரிலுள்ள கல்வெட்டு[23]அவ்வூரைத் திரு முன்னூரெனவும், இருஞாலக்குடாவிலுள்ள கல்வெட்டு[24] அதனை இருஞாலக்கூடல் எனவும், கடலுண்டி என்னுமிடத்துக் கல்வெட்டு[25] அவ்வூரைத் திருமண்ணு ரெனவும் வழங்குவது போதிய சான்றாகும். மேலைக் கடற்கரை நாட்டு வட கன்னடம் மாவட்டத்திலுள்ள பாட்கல் (Baktal) என்னுமிடத்துக் கல்வெட்டு அதனைப் பாழிக்கல் என்பதும், ஜோக் (Joag) என்னுமிடத்துப் பிற்காலக் கல்வெட்டு, அதனைத் தோக்கா என்பதும், நோக்கத் தக்கன.
சேர நாடு செந்தமிழ் மொழி வழங்கும் திருநாடாக விளங்கிய காலத்து வேந்தர்களே நாம் காணலுறும் சேர மன்னர்கள். கேரளோற்பத்தி கேரள மான்மியம் என்ற இரண்டு நூல்களும் மிகவும் பிற்பட்ட காலத்த வரான விசயநகர வேந்தர்களைப் பற்றியும் கூறுவதனால் இவை காலத்தால் மிகமிகப் பிற்பட்டவையென்பது சொல்லாமலே விளங்கும். இவற்றைக் கொண்டு பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்பதற்கு வழி யில்லை. இவற்றுள், சங்க காலத்துக்கும் விசயநகர வேந்தர் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகளுட் சில இவை கூறும் வரலாற்றுள் மறைந்திருக்கலாம்.
தொன்மையுடைய பொருளே பெருமையுடையது என்றொரு கொள்கை இடைக்காலத்தே அறிஞர் சிலருடைய கருத்தில் உண்டாயிற்று. அதனால் பல நூல்களைப் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவையென்றும் கூறும் செயல் தோன்றிற்று; அவ்வாறே சிலர் எழுதியும் வைத்தனர். உண்மையிலேயே தொன்மையும் பெருமையுமுடைய நூல்களைக் கண்டு சிலர் மனம் பொறாது, அவற்றின் தொன்மையைக் குறைத்தால் பெருமை குறையுமென்று மனப்பால் குடித்துத் தவறும் குழறுபடையும் நிறைந்த கருத்துகளால் தாம் வேண்டியவாறு எழுதலாயினர். தன் பெயர் நிலை பெறுவது விழைந்து தயனா தேவி கோயிலைத் தீயிட்டுக் கொளுத்திய யவனன்போலப் பழமையான சில தமிழ் நூற்களைக் காலத்தால் பிற்பட்டன என்று கூறிவிடின் அவை பெருமை குன்றிவிடும் என்று தம்முடைய செல்வாக்கையும் பதவியையும் துணையாகக் கொண்டு ஆராய்ச்சி யென்ற பெயரால் சொல்வலையிட்டுத் திரையிட முயன்றோரும் முயல்வோரும் உண்டு. இவ்வாறன்றி, காய்தல் உவத்தல் இன்றி, நடுவுநிலை திறம்பாது பண்டை நாளை நிலையினைக் காண்பது இப்போது மிக இன்றியமையாததாகிறது.
மேலும், இடைக்காலத்தில் இருந்து ஆராய்ச்சி நிகழ்த்தியோரினும், இக் காலத்து ஆராய்ச்சியாளருக்குக் கருவிகள் விரிவாகக் கிடைத்துள்ளன. நிலவுலகத்தில் ஆங்காங்கு வாழும் மக்களுடைய தொன்மையும் வரலாறும் வழக்காறும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் நூல்கள் வந்துள்ளன. இலக்கிய நூல்கட்குத் துணை யாகப் பல்லாயிரக் கணக்கில் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியுரை களும் பெருகக் கிடைத்திருக்கின்றன. ஒரு காலத்தில் உண்மையெனக் காணப்பட்ட வொன்று பிறிதொரு காலத்தில் தவறுபடுவதும், தவறெனக் கருதியதொன்று உண்மையாவதும், ஒருகாலத்தில் எல்லையென வரம்பிட்ட ஒன்று பிறிதொரு காலத்தல் மாறுவதும், புது வரம்பொன்று காணப்படுவதும் ஆராய்ச்சி நெறியில் இயற்கையாய்விட்டன. அதனால், ஆராய்ச்சியாளர் உண்மையைக் கடைப்பிடித்துத் தமக்குக் கிடைக்கும் கருவிகளைக் கொண்டு அச்சம் இன்றித் தமது ஆராய்ச் சியை நிகழ்த்தத் தலைப்பட்டுவிட்டனர், அறிவியல் நெறியிலேயே வரம்பறுக்கப்பட்ட உண்மைகள் பல போலியாய் ஒழிகின்றன எனின், வரலாற்றாராய்ச்சிக்கு வேறு கூறுவது மிகையன்றோ!
இந் நெறியே நின்று நோக்கும்போது, மேனாட்டு யவனர்களும் வடநாட்டு வட நூல்களும் கூறுவனவற்றால், சேரரது தொன்மை வேதகாலத்தேயே விளங்கி யிருந்தமை தெளிவாயிற்று. சங்க இலக்கியங்களுள் சேரர்கள் சார்பாக நிற்கும் பாட்டுகளிற் காணப்படும். ஊர்களும் நிகழ்ச்சிகளும் சிரேக்க யவனர் குறிப்புக் களிலும் ஒப்பக் காணப்பெறுகின்றன. அக் குறிப்புக்களின் காலம் கி.பி. முதலிரண்டு நூற்றாண்டில் நிலைபெறுகிறது. அவற்றுட் சில, சங்க இலக்கியங்களில் காணப்படாத குறிப்புகளை உணர்த்துமாற்றால், காலத்தால் சங்கவிலக்கியங்கட்குப் பிற்படுகின்றன. படவே, சங்க இலக்கியங்கள் கி.பி. முதல் நூற்றாண்டிற்குப் பிற்பட்டனவல்ல என்பது உறுதியாகிறது. கே.ஜி. சேஷையர் முதலியோர் சேர வேந்தர்களைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முடிய இருந்தனரென்று கூறுகின்றனர்; அவர் கூறுவன வேறு வகையால் நிறுவப் பட்டமையால், சங்க இலக்கியங்களில் கீழெல்லை கி.பி. முதல் நூற்றாண்டென்று கொள்வதே தக்கது.
- ↑ 22. S.I.I. Vol v. No. 788.
- ↑ 23. Ibid. No. 784.
- ↑ 24. M. EP, A. R. No 358 of 1927.
- ↑ 25. S.III. Vol v. 782
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாட்டின் தொன்மை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கல்வெட்டு, காலம், சங்க, ஆராய்ச்சி, கொண்டு, காலத்து, மொழி, என்னுமிடத்துக், காலத்தால்