பத்ம புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
பிப்பலாவின் கதை
காசிபனின் மகனாகிய பிப்பலா உலகத்தில் உள்ள யாவரையும் விடத் தான் அதிக ஆற்றலைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தவம் செய்தான். ஊண், உறக்கம் அனைத்தையும் துறந்து, தவம் செய்த அவன் உடம்பைச் சுற்றிப் பாம்புகள், கொடிய விலங்குகள் ஆகியவை இருந்தும் அவன் தவத்திலேயே இருந்தான். அவன் உடம்பைச் சுற்றிக் கரையான் புற்று வைத்தும், அவன் தவம் கலையவில்லை. இந்த நிலையில் 3,000 ஆண்டுகள் கழிந்தன. அவனுடைய ஆற்றல் அவனைச் சுற்றி நிறைந்திருந்ததுடன் அவன் தலையைச் சுற்றி ஒரு ஒளி வளையமும் உண்டாயிற்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் குறிப்பாக யாரையும் நினைத்து தவம் செய்யாததால் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது: பிப்பலா! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்.” உடனே பிப்பலா, “இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அடக்கி ஆளும் ஆற்றலை நான் பெற வேண்டும்” என்று கூறினான். அப்படியே ஆகட்டும் என்றது அசரீரி. மகிழ்ச்சி மிகுந்த பிப்பலா, ஒரு குளக்கரையில் அமர்ந்து கொண்டு தன்னையும், தான் பெற்ற வரத்தையும் மனத்தில் நினைந்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தான். அப்பொழுது அக் குளத்தில் இருந்த ஒரு கொக்கு, "அடேய் பிப்பலா! 3,000 ஆண்டுகள் தவம் செய்து என்ன செய்துவிட்டாய்? ஒரு தவமும் செய்யாத சுகர்மா உன்னைவிட மிகப் பெரியவன். அவனைப் போய்ப் பார். நீ எவ்வளவு சாதாரணமானவன் என்பது தெரியும் என்று கூறிற்று. கொக்கு பேசிய அதிசயத்தைப் பார்த்த பிப்பலா, “நீ யார்?' என்று கேட்டான். அதையும் சுகர்மாவைக் கேட்டுத் தெரிந்து கொள் என்று கொக்கு கூறியது. சுகர்மா இருக்குமிடத்தை கொக்கு கூறவே பிப்பலா, சுகர்மா இருக்குமிடம் வந்து சேர்ந்தான். சுகர்மா தன் பெற்றோர்களை உபசரித்துக் கொண்டிருந்தான். உபசரணை முடித்த சுகர்மா வெளியே வந்தவுடன் "ஒ பிப்பலா இந்த உடம்பை வருத்தி 3,000 ஆண்டுகள் செலவு செய்து என்ன பயனைப் பெற்றாய்? நான் உன்னைப் போல் தவம் செய்ய வில்லை. வேதங்களைக் கரைத்துக் குடிக்கவில்லை. ஆனாலும் இந்திராதி தேவர்கள் நான் அழைத்தால் இங்கு வந்து நிற்பார்கள். அதுமட்டுமல்ல, உன்னிடம் பேசிய கொக்கு பிரம்மனே ஆவார். இன்னும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறாயா?” என்று கேட்டான் சுகர்மா. இந்திரன் முதலானவர்களை அங்கு வருமாறு செய்த சுகர்மா 'என்னுடைய சக்தியைக் காட்டவே இவர்களை இங்கு வரவழைத்தேன்’ என்று கூறினான். இதற்கு மேலும் உனக்கு ஒரு விளக்கம் தருவதற்கு யயாதியின் கதையைச் சொல்கிறேன், கேள்’ என்றான்.
யயாதியின் கதை
இக்கதை முன்னரே பிரம்ம புராணத்தில் சொல்லப் பட்டது. அங்குச் சொல்லப்பட்டதற்கும், இங்குச் சொல்லப் பட்டதற்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாட்டை மட்டும் இங்குக் குறிக்கலாம். பிரம்ம புராணத்தில் புரு என்ற தன் மகனிடம் தன் முதுமையைக் கொடுத்து அவன் இளமையை யயாதி வாங்கியதற்குக் காரணம், உலகைச் சுற்றிப் பார்க்க என்று கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கதைப்படி யயாதி தன் முதுமையை மகன் புருவிடம் கொடுத்துவிட்டு அவன், இளமையைப் பெற்றுக் கொண்டதற்குக் காரணம் ரதியின் மகளான அஷ்ருவிந்துமதியை மணந்து கொள்வதற்காக என்பதாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 6 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பிப்பலா, அவன், சுகர்மா, தவம், கொக்கு, என்ன, நான், உள்ள, வேண்டும், வரம், ஆண்டுகள்