நாரத புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
ஆதியில் பரப்பிரம்மம் ஒன்று மட்டுமே எங்கும் நிறைந் திருந்தது. அந்த பரப்பிரம்மம் வடிவமற்றது; உருவமற்றது; குணங்களல்லாதது; வருணனைக்கப்பாற்பட்டது. அந்த பரப்பிரம்மம் பிரபஞ்சத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தது. உடனே தனது வலப் புறத்திலிருந்து பிரம்மனையும், நடுப் பகுதியில் இருந்து சிவனையும், இடப் பகுதியில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவித்தது. படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலை சிவனும், காத்தலை விஷ்ணுவும் மேற்கொண்டனர்.
மக்கள் சில சமயங்களில் மூலப் பரம்பொருளை பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயராலேயே அழைக்கின்றனர். இவ்வாறு கூறுவது ஒரு மாயையாகும்.
பரம்பொருள்- பரப்பிரம்மத்தின் ஒரு பகுதியாக சக்தி இருக்கிறது. இச்சக்தி ஞானம் (வித்யா), அஞ்ஞானம் (அவித்யா) என இரு கூறுகளாக உள்ளன. அறிவிற் சிறந்த பெரியோர் பரப்பிரம்மத்தின் இந்த இயல்புகளைச் சிந்திக்கின்றனர். மெய்ஞ்ஞானம் என்பது பரப்பிரம்மத்திற்கும். பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை அறிவதாகும். இந்த ஒற்றுமையை அறியாமல் இருப்பதே அறியாமை என்று சொல்லப்படும். இந்த அறியாமையே ஒருவனை எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாக்குவது. சக்தி ஒன்றாகவே இருப்பினும் பல பெயரிட்டு அழைக்கப்படுகிறது. விஷ்ணுவுடன் சேர்க்கும் பொழுது இலட்சுமி என்றும், சிவனுடன் சேர்த்துப் பேசும்பொழுது உமா அல்லது பார்வதி என்றும், பிரம்மனுடன் சேர்த்துப் பேசும் பொழுது சரஸ்வதி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இத்தனைப் பெயர்களைத் தாங்கியுள்ள சக்தி ஒன்றேயாகும்.
ஆக்கல் தொழிலை சரஸ்வதியும் பிரம்மனும் சேர்ந்தே செய்கின்றனர்; காத்தல் தொழிலை விஷ்ணுவும் லட்சுமியும் சேர்ந்தே செய்கின்றனர்; அழித்தல் தொழிலை சிவனும் பார்வதியும் சேர்ந்தே செய்கின்றனர். இந்த மூன்று பேர்களோடும் கூடிய இப்பெருஞ் சக்தியை 'மகாமாயா' என்றும், பிரகிருதி என்றும் சொல்கிறார்கள். இப்பிரபஞ்சம் என்பது, வித்தி (நிலம்); அப (நீர்); தேஜா (தீ); மருத் (காற்று); வியோமா (ஆகாயம்). இப்பிரபஞ்சம் பதினான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் உலகங்கள் ஏழும், கீழ் உலகங்கள் ஏழும் அப்பகுதிகளாகும். இந்தப் பதினான்கு உலகங்களும் அவ்வவற்றிற்குரிய மலைகள், காடுகள், ஆறுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளன. நில உலகம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன: ஜம்புதுவிபம், பலக்ஷதுவிபம், ஷல்மலது.விபம், குஷதுவிபம், கிரெளஞ்சதுவிபம், சகதுவிபம், புஷ்கரதுவிபம் ஆகும். பூலோகத்தில் ஏழு கடல்கள் உள்ளன. அவை: லவண. இக்சு, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவை ஆகும்.
பாரத வர்ஷா ஜம்புதுவிபத்தில் உள்ளது. இது தெற்குப் பகுதியில் லவணக் கடலால் சூழப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் இமயமலை உள்ளது. பாரத வர்ஷா வாழ்வதற்கு கர்மபூமி என்றால் செயல்கள் நிகழ்வதற்குரிய இடம் என்று பொருளாகும். இந்தக் கர்மபூமியில் செய்யும் காரியங்களுக்குரிய பயனை அனுபவிக்கும் இடம்தான் போக பூமி எனப்படும். இந்த பாரத வர்ஷமாகிய கர்ம பூமியில் செய்யப்படும் காரியங்கள், பலாபலன்கள் இங்கே கிடைப்பதில்லை. இங்கு செய்யப்படும் நற்காரியங்களுக்குச் சொர்க்கத்தில் சென்று இன்பத்தை அனுபவிக்கும் பயன் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் தீய காரியங்களுக்கு நரகத்தில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
பாரத பூமியில் பிறப்பதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மிகுந்த அளவில் நன்மைகளைச் செய்வதற்குரிய வாய்ப்பும் சந்தர்ப்பங்களும் பாரத பூமியில்தான் உள்ளன. இந்த நல்ல இடத்தில் பிறந்தும் நல்ல காரியங்களைச் செய்யாமல் இருப்பது ஒரு குடம் அமிர்தத் திற்குப் பதிலாக ஒரு குடம் விஷத்தை வாங்குவது போலாகும். சொர்க்கத்தில் சென்று இன்பம் அனுபவிக்க வேண்டுமானால், இந்தக் கர்ம பூமியில் ஓயாது ஒழியாது, ஊக்கத்துடன் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். இவ்வாறு சொல்லியவுடன் சொர்க்கப் பயனை அனுபவிக்க வேண்டும் என்ற பயனைக் கருதியே இங்கு நற்காரியங்கள் செய்தல் கூடாது. பலனைப் பற்றிச் சிந்திக்காமல் நற் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே சிறப்புடையதாகும். பலனில் பற்று வைக்காமல் செயல்களில் ஈடுபடுவதை நிஷ்காம கர்மம் என்று கூறுவர். செயல்களின் பயன் அனைத்தும் விஷ்ணுவிடம் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 3 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், பாரத, தொழிலை, பகுதியில், என்றும், சென்று, அனுபவிக்க, காரியங்களைச், இங்கு, நல்ல, செய்கின்றனர், சக்தி, சேர்ந்தே, பரப்பிரம்மம், பூமியில், செய்யப்படும்