பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
கிருஷ்ணன் கூறிச் சென்றது போல், பிரம்மன், மது, கைடபர்களின் கொழுப்பினை எடுத்து உலகைப் படைத்தார். அடுத்து மலைகளையும், எட்டு முக்கியமான மலைகளையும் படைத்தார். அவை சுமேரு கைலாசம், மாலயா, இமயமலை, உதயசலா, அஷ்டசலா, சுபேலா, கந்தமாதனா என்பனவாகும். எண்ணற்ற ஆறுகளையும் கிராமங்களையும் படைத்தார். முதன்மை வாய்ந்த சமுத்திரங்களான லவண, இக்ஷி, சுரா, சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெரிய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும்.
பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார்.
பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து "துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய ஞானம் அற்றவனாகவும், பணிப் பெண்ணின் மகனாகவும் பிறப்பாய்” என்று சாபமிட்டார். இதைக்கேட்ட நாரதர் பிரம்மனைப் பார்த்து "இனி மூன்று கல்பங்களுக்கு பிரம்மனை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று சாபமிட்டார். மற்ற முனிவர்கள் படைத்தல் தொழிலைச் செய்தனர். மரீச்சி யினின்று காசிப முனிவனும், அத்ரியிடமிருந்து சந்திரனும், பிரசேத்தா, புலஸ்தியர் ஆகியோரிடமிருந்து முறையே கெளதமரும், அகஸ்தியரும் தோன்றினர்.
(இதையடுத்துக் கூறப்பட்டிருக்கும் மனு ஷடரூபாவின் கதை ஏற்கெனவே பிரம்ம புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 4 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, படைத்தார், இருந்து, மணந்து, கொண்ட, பிரம்மன், படைக்கப்பட்டன, தோன்றினர், அடுத்து, வேண்டும், பிறகு, தொழிலைச்