பாகவத புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
தீர்த்த யாத்திரையில் விதுரர் மைத்ரேயி முனிவரைச் சந்தித்தார். விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றி அறிய வேண்டுமென விதுரர் கேட்டபொழுது மைத்ரேயி சொல்லத் துவங்கினார். ஒரு காலத்தில் பூமியைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டார்கள் தைத்திரியர்கள். மனுவும், சத்ரூபனும் பிரம்மாவிடம் வந்து எல்லா இடங்களிலும் நீராக இருக்கிறது. தங்குவதற்கு இடமே இல்லை. பூமியோ கடலுக்கடியில் உள்ளது. என்ன செய்யலாம்?' என்றனர். பிரம்மா இது ஆராய வேண்டிய விஷயம். விஷ்ணுவை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் பிரம்மனுடைய மூக்கில் இருந்து மிக மென்மையான பன்றி வெளிப்பட்டது. பிரம்மனும், ஏனைய முனிவர்களும் அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தப் பன்றி வளர்ந்து ஒரு பெரிய யானையை விடப் பெரிதாக வடிவெடுத்தது. சற்று நேரத்தில் பன்றியின் கொம்புகள் ஜொலிக்க, அதன் கண்களிலிருந்து ஒளிவீச, அதன் பிடரி யிலிருந்து மயிர்கள் மேக மண்டலத்தை வருடத் தொடங்கின. திடீரென்று அப்பன்றி மிகப் பெரிய குரலெடுத்து உறுமத் தொடங்கியது. அந்த ஒலி எட்டுத் திசைகளையும் அதிரச் செய்தது.
சிறிது நேரத்தில் அந்த வராகம் கடலில் குதித்தது. கடலே இரண்டாகப் பிளக்குமாறு வராகம் குதிக்கவும் கடல் அலைகள் மிக உயரத்திற்குக் கிளம்பின. கடலுக்குள் குதித்த வராகம் நேரே கீழ் லோகத்திற்குச் சென்று அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் கொம்புகளுக்கு நடுவே வைத்துக் கொண்டு மேலே புறப்பட்டது. அந்த நேரத்தில் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த தைத்திரியர்களின் தலைவனான இரண்யாக்ஷன் என்பவன் வராகத்தை எதிர்க்க அவ்வடிவில் இருந்த விஷ்ணு சக்கரத்தைப் பயன்படுத்தி இரண்யாக்ஷனைக் கொன்று, பூமியை மீட்டு வந்து கடலில் மிதக்க விட்டார்.
இரண்யாக்ஷன் யார் என்று விதுரர் கேட்க, மைத்ரேயி சொல்லத் துவங்கினார்: ஒரு காலத்தில் காசிய முனிவனின் மனைவி திதியின் வயிற்றில் இரண்டு அசுரர்கள் கருவில் உதயமாயினர். நூறு ஆண்டுகள் கருவை விட்டு வெளி வராமல் திதியின் வயிற்றில் இருந்தனர். மிகக் கொடியவர்களாகிய அவர்கள் கருவில் இருக்கும் போதே பூமியில் பல பிரச்சினைகளை உண்டாக்கினர். சூரியனும், சந்திரனும் கூட ஒளியிழந்து போயினர். அந்த நிலையில் அவர்கள் யார் என்று பிரம்மா சொல்ல ஆரம்பித்தார். “முனிவர்களே! ஒரு காலத்தில் பல முனிவர்கள் விஷ்ணு இருக்கின்ற இடமாகிய வைகுண்டத்திற்குச் சென்றனர். பிரம்ம லோகத்தை விட அழகாக வைகுண்ட லோகம் இருந்ததால் அங்கே வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்த முனிவர்கள் அவ்வளவு தூரம் வந்து விட்டதால் எப்படியாவது விஷ்ணுவை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். விஷ்ணுவை தரிசிக்க ஏழு வாயில் களைக் கடந்து செல்ல வேண்டும். முனிவர்கள் ஆறு வாயில் களைச் சுலபமாகக் கடந்து விட்டனர். ஏழாவது வாயிலில் ஜெய, விஜயன் என்ற இருவரும் கதாயுதத்தோடு காவல் புரிந்தனர். எக்காரணம் கொண்டும் முனிவர்கள் உள்ளே போக முடியாது என்று அவர்கள் தடை செய்து விட்டனர். கடுங்கோபம் கொண்ட முனிவர்கள் பூமியில் சென்று அரக்கர்களாகப் பிறப்பீர்கள் என சாபம் இட்டனர். அந்த இருவரும்தான் இரண்யாக்ஷன் என்றும், இரண்யகசிபு என்றும் இரு அரக்கர்களாகத் திதியின் வயிற்றில் தோன்றினர். பூமியை சுருட்டிக் கொண்டு சென்று கடலுக்கடியில் ஒளிந்து பிறகு வராகத்தால் கொல்லப்பட்டவன் இரண்யாக்ஷன். நரசிம்ம அவதாரத்தால் மார்பு பிளக்கப்பட்டு இறந்தவன் பிரகலாதனின் தந்தையாகிய இரண்யகசிபு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 9 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்த, முனிவர்கள், இரண்யாக்ஷன், நேரத்தில், காலத்தில், திதியின், வயிற்றில், மைத்ரேயி, சென்று, வராகம், விஷ்ணுவை, விதுரர், கடலுக்கடியில், வந்து