பாகவத புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பரிட்சித்து மன்னன், தன் மனைவி, மக்கள், அரசு ஆகியவற்றை மறந்து விஷ்ணுவின் தியானத்தில் ஈடுபடலானான். என்றாலும் இப்பரம்பொருள் கிருஷ்ணனாக அவதரித்துச் செய்தவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தவனாய், சுகமுனிவரைக் கேட்க அவர் சொல்லத் தொடங்கினார். .
படைப்பும், படைத்தவனும்
அனாதி காலத்தில் இருந்தது ஒரு மாபெரும் முட்டை யாகும். எங்கும் நீரே நிறைந்திருக்க இந்த முட்டை அதில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முட்டையிலிருந்து தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு விஷ்ணு தோன்றினார். ஆயிரக்கணக்கான முகங்கள், கால்கள், கைகள் என்பவற்றுடன் அவர் இருந்தார். பிரம்மாவைத் தன்னுடைய கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரையினின்று விஷ்ணுவே தோற்று வித்தார். தோற்றுவிக்கப்பட்ட பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப்புவித்தார். சிவனை உண்டாக்கி அழித்தல் தொழிலை ஒப்புவித்தார். பிரம்மனும், சிவனும் விஷ்ணுவின் கட்டளைக்குட்பட்டே பணி புரிந்தனர். விஷ்ணு சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களையும் படைத்தார். அறிவும், அறிவு சார்ந்த பணிகளும் சத்துவ குணத்தின் ஆட்சிக்கு உட்பட்டன. செயல், செயல்முறை ராஜச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை. பொறி புலன்கள், ஐம்பூதங்கள் ஆகியவை தாமச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை.
உத்தவரும், விதுரரும்
மகாபாரதக் கதையில் விதுரனின் பங்கு மிக அதிகமாகும். திருதராஷ்டிரன் மகன் துரியோதனன் பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகை முதலிய பல வழிகளைக் கையாண்டு முடியாததால் பொய் சூது ஆடவைத்து அவர்கள் ராஜ்ஜியத்தை இழக்குமாறு செய்தான். இந்த நிலையில் அவர்களுக்கு உரிய ராஜ்ஜியத்தைத் திருப்பித் தருவதுதான் நியாயமானது என்று அறிந்த விதுரன் மன்னன் திருதராஷ்டிரனுக்குப் பல அறிவுரைகள் எடுத்துச் சொன்னான். ஆனால் துரியோதனன் மேல் கொண்ட அளவற்ற பாசத்தால் திருதராஷ்டிரன் இதைச் செய்ய முன்வரவில்லை. மன்னனை நோக்கி விதுரன் பேசுவதைப் பார்த்துக் கோபம் கொண்ட துரியோதனன் அறிவை இழந்த நிலையில் பின்வருமாறு பேசினான்: ‘'வேலைக்காரியின் மகனே! எங்கள் உப்பைத் தின்றுவிட்டுப் பாண்டவர்கள் பக்கமே உன் அன்பு இருக்கிறது. உன்னை இங்கு வைத்திருப்பதே தவறாகும்" என்று விதுரனின் மனம் புண்படப் பேசினான். துரியோதனன் எல்லை மீறிவிட்ட நிலையில் திருதராஷ்டிரன் அவனை ஒன்றும் சொல்லாததால் மனம் ஒடிந்த விதுரன் அஸ்தினாபுரத்திற்கு மீண்டும் வருவதில்லை என்ற சங்கல்பத்துடன் பாரத நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை என்ற காரணத்தை வைத்துச் சுற்றிவரச் சென்றார். இறுதியாக யமுனை நதியை அடைந்த பொழுது கிருஷ்ணனின் மிக நெருங்கிய நண்பனான உத்தவரைக் கண்டான். கிருஷ்ணனைப் பற்றியும், யாதவரைப் பற்றியும் விசாரித்தார். கிருஷ்ணனுடைய இளமைக் காலத்தை அறிந்தவர் உத்தவர் ஆகையால், விதுரருக்குக் கிருஷ்ணனின் இளமைக் கால லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
உத்தவர், விதுரருக்குக் கூறிய கிருஷ்ணனின் இளமைப் பருவம் ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அங்கு காணப்படாத பகுதிகளை இங்கு தந்துள்ளோம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 8 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, துரியோதனன், அப்பொருளின், நிலையில், விதுரன், கிருஷ்ணனின், திருதராஷ்டிரன், அவன், விஷ்ணு, குணத்தின்