பாகவத புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் பிரம்மனுடைய மகனாகிய தட்சன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அனைத்து முனிவர்களும், பிரம்மன், சிவன் ஆகிய அனைவரும் அங்கே கூடி இருந்தனர். திடீரென்று தட்சன் அங்கே வரவும் எல்லோரும் எழுந்து அவனுக்கு மரியாதை செய்தனர். அவ்வாறு மரியாதை செய்யாதவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் பிரம்மன், சிவன் ஆகிய இருவர் மட்டுமே. பிரம்மன் எழுந்திருக்காததில் தட்சனுக்கு வருத்தமில்லை. தந்தை எழவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் சிவன் எழுந்திருக்காதது அவனுக்கு மன உளைச்சலைத் தந்தது. கூடி இருந்தவர்களைப் பார்த்து, இந்தச் சிவனுக்கு மருமகன் என்ற முறையில் எழுந்து மரியாதை செய்யக் கூடத் தெரியவில்லை. அறிவற்றவன் என்று கூடக் கூறலாம். பயித்தியம் பிடித்தவனாகிய இவன் எலும்பு மாலைகளை அணிந்து கொண்டு பிணங்களைச் சுட்ட சாம்பலைப் பூசிக் கொள்கிறான். இவனுக்குப் பெண் கொடுத்ததே பெரிய தவறு என்று நினைக்கிறேன். என்னை அவமானப்படுத்தியதால் இன்று முதல் யார் யாகம் செய்தாலும் சிவனுக்கு அவிர் கொடுக்கக் கூடாது என்று சாபமிடுகிறேன் என்று கூறினான். சிவன் அவன் வார்த்தைகளைச் சட்டை செய்யவே இல்லை. ஆனால் சிவனுடன் வந்த நந்தி கூடியிருந்தவர்களைப் பார்த்து, 'சிவனை இப்படி அவமானம் செய்யும் பொழுது தட்சனுக்குப் புத்தி சொல்லாமல் வாயை மூடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே இங்கிருக்கும் முனிவர் யாவரும் பூவுலகில் பிறந்து, இறந்து, பிறந்து உழல்வீர்களாக!' என்று சாபமிட்டான். இந்தச் சாபத்தைப் பொறாத முனிவர்களுள் ஒருவனாகிய பிருகு எதிர் சாபமிட்டான். இந்த சிவனைப் பின்பற்றுகின்றவர் அனைவரும் சடைப் பிடித்த தலையுடன், உடல் முழுதும் சாம்பலைப் பூசிக் கொண்டு, குடித்துக் கொண்டு திரிவார்களாக இத்தனைக் கூச்சல் குழப்பங்களுக்கும் இடையே வாய் திறக்காத சிவன் நந்தி முதலான கணங்களையும், தன்னைச் சேர்ந்தோரையும் அழைத்துக் கொண்டு யாகத்தினின்று புறப்பட்டுப் போய்விட்டார். சிவனில்லாமலே யாகம் 1,000 ஆண்டுகள் நடைபெற்றது.
சிவனில்லாமல் தன் முதல் யாகத்தைச் செய்த செருக்கில் தட்சன் மறுமுறை வாஜபேயம் என்ற யாகத்தை வெற்றியுடன் செய்து முடித்தான். இந்த இரு யாகங்களும் சிவனில்லாமல் நடந்து வெற்றி பெற்றதால் மூன்றாவதாக 'பிரகஸ்பதீஸ்தவ' என்றொரு யாகத்தைத் தொடங்கினான். சிவனைத் தவிர அனைவருக்கும் அழைப்புச் சென்றது. கந்தர்வர்கள் தங்கள் விமானங்களில் யாகத்திற்காக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தனர். யாகத்தையும், தட்சனையும் அவர்கள் புகழ்ந்து பேசியவுடன் சதிக்கு ஒர் ஆசை பிறந்தது. சிவனிடம் சென்று தந்தை செய்யும் பெரிய யாகத்திற்கு நாமும் போக வேண்டும் என்றாள். தங்களை யாரும் அழைக்கவில்லை என்று சிவன் கூறியதற்கு, 'மாமனார் செய்யும் யாகத்திற்கு மருமகனுக்கு அழைப்புத் தேவையா? நாம் போவதில் தவறில்லை. மேலும் என் சகோதரிகளைப் பார்த்துப் பலகாலம் ஆகிவிட்டது. என் தாயைப் பார்த்து எத்தனையோ காலம் ஆகிவிட்டது. எனவே போயே தீர வேண்டும்” என்று அடம் பிடித்தாள். சிவன், தான் வர மறுத்துத் தக்க துணையுடன் சதியை அனுப்பினார்.
சதி சென்ற பொழுது யாகம் தொடங்கிவிட்டது. அவருடைய தாயும், சகோதரிகளும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தனரே தவிர தட்சன் அவளை மதிக்கவில்லை; பேசவுமில்லை! சினம் கொண்ட சதி, தட்சனின் எதிரே வந்து நின்று, என்னுடைய கணவனை அவமானப்படுத்தினாய். ஒரு கற்புடைய பெண் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. உன்னுடைய மகள் என்ற காரணத்தால், இந்த உடம்பு நீ கொடுத்ததாகும். இவ்வுடம்போடு நான் இருக்க விரும்ப வில்லை என்று கூறிவிட்டு அக்னி குண்டத்தின் எதிரே உட்கார்ந்தாள். மூச்சை அடக்கிப் பிரமரந்தரம் என்று சொல்லப் படும் கபாலத்தின் வழியே தன் உயிர் போகுமாறு செய்தாள். உடனே அவள் உடல் தீப்பற்றி எரிந்து சாம்பலாயிற்று. வியப்பும் அதிசயமும் கொண்டு அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 11 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், யாகம், தட்சன், கொண்டு, செய்யும், பார்த்து, அனைவரும், பெரிய, பிரம்மன், மரியாதை