முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஆல்வில் ரைட் (கி.பி.1871 - கி.பி.1948) & வில்பர் ரைட் (கி.பி.1867 - கி.பி.1912)
ஆல்வில் ரைட் (கி.பி.1871 - கி.பி.1948) & வில்பர் ரைட் (கி.பி.1867 - கி.பி.1912)
இவ்விரு சகோதரரும் இணைந்தே சாதனை புரிந்ததால், இங்கு இருவரையும் இணைத்தே பார்க்கிறோம். வில்பர் ரைட் 1867 இல் இண்டியானவிலுள்ள மில்வில்லில் பிறந்தார். அவருடைய சகோதரர் ஆர்வில் ரைட் 1871 இல் ஓஹ’யோவிலுள்ள டேட்டனில் பிறந்தார். இரு பையன்களும் உயர்நிலைப் பள்ளியில் பயின்றனர். ஆயினும் சான்றிதழ் பெறவில்லை.
இருவரும் இயந்திர ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தனர். மனிதன் பறப்பதிலும் ஈடுபாடு காட்டினர். 1892 இல் அவர்கள் ஒரு கடை திறந்தனர். அங்கு சைக்கிள் விற்றும், பழுது பார்த்தும், உற்பத்தி செய்தும் வந்தனர். இதிலிருந்து அவர்களது பேராவலாகிய வானப் பயன ஆய்வுக்குத் தேவையான பணம் கிடைத்தது. அவர்கள் ஒட்டோ லிலியந்தால், அக்டேங் கன்யூட், சாமுவேல் பி. வாங்லி ஆகியோர் வானப் பயணம் பற்றி எழுதிய நூல்களை ஆர்வமுடன் படித்தனர். 1899 இல் அவர்களே வானில் பறப்பது பற்றிய வேலைகளைத் தொடங்கினர். 4 ஆண்டு உழைப்புக்குப் பிறகு 1903 டிசம்பரில் அவர்களது முயற்சி வெற்றி பெற்றது.
பலர் தோல்வியடைந்த துறையில் ரைட் சகோதரர்கள் மட்டும் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது நமக்கு காரணங்கள் உள்ளன. முதலாவது, ஒருவரை விட இருவர் உழைப்பது மேல். ரைட் சகோதரர்கள் எப்போதும் இணைந்தே ஒற்றுமையுடன் உழைத்தனர். இரண்டாவதாக, வானவூர்தி ஒன்றை அமைப்பதற்கு முன் எவ்வாறு பறப்பது என்பதைக் கற்றுக் கொள்ள அவர்கள் முனைந்தர். இஃது ஒரு புதிர் போல் தோன்றுகிறது. அதாவது முதலில் வானவூர்தி இல்லையேல், எவ்வாறு பறக்கக் கற்றுக் கொள்ள முடியும்? ரைட் சகோதரர்கள் இயந்திரமில்லாத விமானங்களைப் பயன்படுத்திப் பறக்கக் கற்றுக் கொண்டனர் என்பதே இதற்கு விடை. 1899 இல் அவர்கள் காற்றாடிகளையும் இயந்திரமில்லாத விமானங்களையும் பயன் படுத்தத் தொடங்கினர். மறு ஆண்டு அவர்கள் வட கலிஃபோர்னியாவிலுள்ள கிட்டி ஹாக் எனுமிடத்திற்குத் தமது பெரிய (ஓர் ஆள் அமரக் கூடிய) இயந்திரமில்லாத விமானத்தைப் பரிசோதனைக்காகக் கொண்டு வந்தனர். அது முழு மன நிறைவளிக்கவில்லை. அவர்கள் 1901 இல் அத்தகைய மூன்றாவது விமானத்தையும் செய்து பரிசோதனை நடத்தினர். மூன்றாவது விமானத்தில் மிக முக்கியமான புதிய மாற்றங்களை செய்யப்பட்டிருந்தன. அவர்கள் 1903 இல் கேட்டிருந்த தனியுரிமை அவர்கள் செய்த முதல் இயந்திரமுள்ள விமானத்தைவிட இந்த மூன்றாம் இயந்திர மில்லாத விமானத்தையே சாரும். இம்மூன்றாம் விமானத்தில் அவர்கள் ஏறக்குறைய ஆயிரம் முறை பறந்தனர். இயந்திரமுள்ள விமானத்தை அமைக்கத் தொடங்கு முன் அவர்கள் ஏற்கனவே இயந்திரமில்லாத விமானத்தை ஓட்டிய சிறந்த அனுபவமுள்ள விமானிகளாக இருந்தனர்.
இயந்திரமில்லாத விமானத்தை ஓட்டியதன் அனுபவம் அவர்களது வெற்றிக்கு மூன்றாவது காரணமாக இருந்தது. அவர்களுக்கு முன்னால் வானவூர்திகளை அமைக்க முயன்றவர்கள் பலர் அவற்றை நிலத்திலிருந்து கிளப்புவது பற்றிய கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், ரைட் சகோதரர்களோ வானத்தில் எழுந்த பிறகு விமானத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே பெரும் பிரச்சினை என்பதை உணர்ந்தனர். ஆகவே அவர்கள், பறக்கும்போது விமானத்தை உறுதிநிலையில் வைத்துக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை வகுப்பதில் தம் காலத்தையும் ஆற்றலையும் செலவழித்தனர். விமானத்திற்கு ஒரு மூன்று அச்சுக் கட்டுப் பாட்டை வகுப்பதில் அவர்கள் வெற்றி கண்டனர். இதனால் அவர்கள் அதை முற்றிலும் இயக்குவதற்கு வழியேற்பட்டது.
விமானத்தின் சிறகுகளை அமைப்பதிலும் ரைட் சகோதரர்கள் அருஞ்சாதனை புரிந்தனர். இதைப் பற்றி முன்னால் வெளி வந்த விவரங்கள் நம்பத் தகுந்தவையல்ல என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர். ஆகவே அவர்கள் தாமே காற்றுப்புகு வழியை அமைத்தனர். அதில் இரு நூறுக்கு மேற்பட்ட பல்வேறு வடிவமுள்ள சிறகுப் பரப்புகளைப் பரிசோதித்துப் பார்த்தனர். இச்சோதனைகளின் அடிப்படையில், சிறகின் வடிவத்தைப் பொறுத்திருக்குமென்பதைக் காட்டும் அட்டவணைகளை அவர்கள் தாமே அமைக்க முடிந்தது. இச்செய்தியைப் பயன்படுத்தி அவர்கள் தம் விமானத்தின் சிறகுகளை அமைத்தனர்.
இச்சோதனைகளை எல்லாம் ரைட் சகோதரர்கள் செய்திருந்த போதிலும், வரலாற்றில் தக்க காலத்தில் அவர்கள் தோன்றியிராவிட்டால், அவர்கள் வெற்றி பெற்றிருக்க இயலாது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விமானத்தில் பறப்பதற்கு மனிதன் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தே இருக்கும் என்பதில் ஐயமில்லை. நீராவி இயந்திரங்கள் பெரும் ஆற்றலைத் தோற்றுவித்த போதிலும், அவை மிகப் பளுவானவையாக இருந்தன. ரைட் சகோதரர்கள் தோன்றியபோது, ஏற்கனவே சிறந்த உட்கனல் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆயினும் அந்த உட்கனல் இயந்திரங்கள் ஆற்றலைப் பொறுத்த வரையில் மிகப் பளுவானவையாக இருந்ததால், பறக்கும் விமானத்தில் பயன்படுத்த இயலாதவையாக இருந்தன. ஆற்றல் பளு விகிதத்தில் குறைந்த பளுவுள்ள இயந்திரத்தை யாராலும் செய்ய முடியாது போலிருந்ததால், ரைட் சகோதரர்கள் (ஓர் இயந்திரத்தைக் கொண்டு) தாமே தேவையான இயந்திரத்தை அமைத்தனர். இந்த இயந்திரத்தை அமைக்க அவர்கள் குறைந்த காலமே எடுத்துக் கொண்ட போதிலும், பெரும்பாலோர் செய்ததை விட உயர்ந்த வகை இயந்திரத்தை அவர்களால் செய்ய முடிந்தது அவர்களின் அறிவுத் திறமையைக் காட்டுகிறது. மேலும், ரைட் சகோதரர்கள் விமானத்தை முற்செலுத்தும் சுழலியையும் தாமே வகுத்தமைத்தனர். 1903 இல் அவர்கள் பயன்படுத்திய சுழலி 66 சதவீதம் திறனுடையது.
வட கரோலினாவில் கிட்டி ஹாக்கினருகில் கில்டெவில் ஹ’ல்லில் டிசம்பர் 17, 1903 இல் ரைட் சகோதரர்கள் முதன் முதலாகப் பறந்தனர். அன்று இருவருள் ஒவ்வொருவரும் இருமுறை பறந்தனர். முதலில் ஆர்வில் ரைட் 12 நொடிகளில் 120 அடி தூரம் பறந்தார். இறுதியில் வில்பர் ரைட் 59 நொடிகளில் 852 அடி தூரம் பறந்தார். அவர்கள் தமது விமானத்திற்கு ஃப்ளையர் எனப் பெயரிட்டனர். (இன்று அது கிட்டி ஹாக் எனப்படுகிறது.) அதை அமைப்பதற்கு ஆயிரம் டாலருக்கும் குறைவாகவே செலவானது. சிறகுகள் உட்பட அதன் அகலம் 40 அடி. அதன் எடை 750 பவுண்டு. அதன் 170 பவுண்ட் எடையுள்ள இயந்திரம் 12 குதிரைத் திறனுடையது. அந்த விமானம் இப்போது வாஷிங்டன் டி.சி.யிலுள்ள தேசிய வான, வெளி அருங்காட்சியகத்திலுள்ளது.
ரைட் சகோதரர்கள் முதலில் பறந்ததை ஐவர் நேரில் கண்ட போதிலும், ஒருசில செய்தித்தாள்களே மறுநாள் அதைப் பற்றி அறிவித்தன. (விரிவாக அறிவிக்கவில்லை) ஓஹ’யோவிலுள்ள அவர்களுடைய சொந்த ஊராகிய டேட்டன் செய்தித்தாள் அதைப் பற்றி ஒன்றுமே அறிவிக்கவில்லை. மனிதன் உண்மையிலேயே விமானத்தில் பறந்து விட்டான் என்பதை உலகம் முழுவதும் அறிவதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகளாயின.
ரைட் சகோதரர்கள் கிட்டி ஹாக்கில் பறந்த பிறகு டேட்டனுக்குத் திரும்பி, அங்கு மற்றொரு விமானத்தை அமைத்தனர். அதன் பெயர் ஃப்ளையர்1. அந்த விமானத்தில் அவர்கள் 1904 இல் 105 முறை பறந்தனர். ஆயினும் அம் முயற்சிகள் பலரின் கவனத்தைக் கவரவில்லை. 1905 இல் அவர்கள் மிகச்சிறந்த, நடைமுறைக்குப் பயன்படும் ஃப்ளையர் 11 எனும் விமானத்தைச் செய்தனர். அவர்கள் டேட்டனில் அருகில் பலமுறை பறந்த போதிலும் வானவூர்தி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகப் பலர் நம்பவில்லை. எடுத்துக் காட்டாக, 1906 இல் ஹெரால்டு ட்ரிப்யூன் எனும் இதழின் பாரிஸ் பதிப்பு பறப்போரா, பொய் பகர்வோரா எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது.
ஆயினும் 1908 இல் ரைட் சகோதரர்கள் மக்களின் ஐயத்தைத் தீர்த்தனர். வில்பர் ரைட் தமது விமானம் ஒன்றை பாரிசுக்கு கொண்டு போய், அது பறப்பதைப் பொது மக்களுக்கு விளக்கிக் காட்டி, விமானத்தை விற்பதற்கு அங்கு ஒரு நிறுவனத்தையும் நிறுவினார். இதற்கிடையில், ஆர்வில் ரைட் அமெரிக்காவில் அது போன்ற விளக்கக் காட்சிகளை நடத்தினார். செப்டம்பர் 17, 1908 இல் அவர் பறந்த விமானம் கீழே விழுந்தது. அதுவே அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஒரே இடர் நிகழ்ச்சியாகும். அப்போது ஒரு பயணி இறந்தார். ஆர்விலுக்கு ஒரு காலும், ஒரு விலா எலும்பும் முறிந்தன. ஆயினும், அவர் குணமடைந்தார். அவரது வெற்றியைக் கண்ட அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க போர்த் துறைக்கு விமானங்களை வழங்குமாறு அவருடன் ஒப்பந்தம் செய்தது. 1909இல் கூட்டாட்சி அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 30,000 டாலர் வானப் படைக்கென ஒதுக்கப் பெற்றது.
கொஞ்ச காலமாக விற்பனை உரிமை பற்றி ரைட் சகோதரர்களுக்கும், அவ்வுரிமையைக் கேட்ட சிலருக்குமிடையே வழக்கு நடைபெற்றது. 1914 இல் நீதிமன்றம் ரைட் சகோதரர்களுக்குச் சார்பாக தீர்ப்பளித்தது. இதற்கிடையில் வில்பர் ரைட்டுக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்டு 1912 இல் அவர் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. ஆர்வில் ரைட் 1915 இல் விமான நிறுவனத்திலிருந்து தமது உரிமைப் பங்குகளை விற்றுவிட்டார். அவர் 1948 வரை உயிர் வாழ்ந்தார். சகோதரர் இருவரும் திருமணம் செய்யவில்லை.
ரைட் சகோதரர்களுக்கு முன்னே இத்துறையில் பல ஆய்வுகளும் முயற்சிகளும் நடைபெற்ற போதிலும், வானவூர்தியைக் கண்டுப்பிடிப்பதில் அவர்கள் பெரும் பங்கு பெற்றனர் என்பதில் ஐயமில்லை. இப்பட்டியலில் அவர்களுக்கு எந்த இடத்தை அளிப்பது என முடிவு செய்யும் போது, வானவூர்தியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதே சிறந்ததாகும். அச்சடிக்கும் இயந்திரத்தையோ, நீராவி இயந்திரத்தைப் போல் வானவூர்தி அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பன்று என்பது எனது கருத்து. அவை இரண்டும் மனித வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிவிட்டன. ஆயினும் வானவூர்தி போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும், பயன்படுவதைப் பார்க்கும் போது, அஃது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகவே தோன்றுகிறது. ஒரு காலம் பரந்திருந்த நமது உலகத்தை வானவூர்தி சில பத்தாண்டுகளில் சுருக்கி மிகச் சிறியதாகச் செய்து விட்டது. மேலும் மனிதன் பறக்கத் தொடங்கிய சாதனை தான் விண்வெளிப் பயணம் வளர வழி வகுத்தது.
பலபல நூற்றாண்டுகளாக மனிதன் பறப்பது பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால் நடைமுறைவாதிகள், அராபிய இரவு கதைகளில் வரும் பறக்கும் கம்பளங்கள் வெறும் கற்பனை என்றும், உண்மை உலகில் இருக்க முடியாது என்றும் நம்பினர். ரைட் சகோதரரின் அறிவுத் திறமையானது மனுக்குலத்தின் பன்னெடுங்காலக் கனவை நிறைவேற்றி கற்பனை கதையை உண்மையாக்கிவிட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 96 | 97 | 98 | 99 | 100 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆல்வில் ரைட் (கி.பி.1871 - கி.பி.1948) & வில்பர் ரைட் (கி.பி.1867 - கி.பி.1912), ரைட், சகோதரர்கள், விமானத்தை, வானவூர்தி, விமானத்தில், ஆயினும், போதிலும், பற்றி, இயந்திரமில்லாத, மனிதன், அமைத்தனர், தாமே, வில்பர், தமது, கிட்டி, இயந்திரத்தை, எவ்வாறு, அவர், ஆர்வில், வெற்றி, பறந்தனர், என்பதை, இயந்திரங்கள், எனும், பறந்த, விமானம், அந்த, பெரும், அங்கு, அவர்களது, பலர், பிறகு, பறப்பது, வந்தனர், கற்றுக், வானப், மூன்றாவது, கொண்டு, முதலில், அமைக்க, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்