முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » லெனின் (கி.பி.1870 - கி.பி.1924)
லெனின் (கி.பி.1870 - கி.பி.1924)
ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான 'லெனின்' என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.
லெனின் 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 இல் ரஷ்யாவில் இப்போதுள்ள அவரது பெயரால் உலியானவ்ஸ்கி என்று வழங்கும் கிம்பர்ஸ்க் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தையார் விசுவாமிக்க அரசு அலுவலராக இருந்தார்; தாயார் ஒரு மருத்துவரின் மகள். இவருடைய அண்ணன் அலெக்சாண்டர் ஒரு புரட்சிப் பயங்கரவாதக் கட்சியில் சேர்ந்து 1891 இல் மூன்றாம் அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னரைக் கொல்ல நடந்த சதியில் பங்கு கொண்டதற்காகத் தூக்கிலிடப்பட்டார். இந்த நிகழ்ச்சியே லெனினுடைய வாழ்க்கைப் போக்கை முடிவு செய்ததாகும். இவர் தமது 23 ஆம் வயதிலேயே ஒரு தீவிர மார்க்சியவாதியாக மாறினார். புரட்சி நடிவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜார் அரசு இவரை 1895 ஆம் ஆண்டு டிசம்பரில் கைது செய்து, 14 மாதங்கள் சிறையிலடைத்தது. பின்னர் இவர் கீழைச் சைபீரியாவிலுள்ள யெனிசே மாகாணத்துக்கு மூன்றாண்டுகள் நாடு கடத்தப்பட்டார்.
சைபீரியாவில் இவர் கழித்த இந்த மூன்றாண்டுக் காலம் இவருக்கு அத்துணை துயர்மிகுந்ததாக இருக்கவில்லை. அங்கு இருந்தபோதுதான் லெனின் 1898 இல் தமக்கு தோழியராக இருந்த குரூப்ஸ்காயா என்பவரை மணந்து கொண்டார். "ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்த வரலாறு" என்ற நூலையும் அப்போதுதான் எழுதினார். இவருடைய சைபீரிய வாழ்க்கை 1900 பிப்ரவரியில் முடிவடைந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இவர் மேற்கு ஐரோப்பாகவுக்குச் சென்றார். அங்கு இவர் ஒரு தொழில்முறைப் புரட்சி வாதியாக சுமார் 17 ஆண்டுகள் கழித்தார். அதுபோது, இவர் சார்ந்திருந்த ரஷ்யன் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி "போல்ஷ்விக்" கட்சி என்றும், "மென்ஷவிக்" கட்சி என்றும் இரண்டாக உடைந்தது. லெனின் பெரிய கட்சியாக இருந்த "போல்ஷ்விக்" கட்சிக்குத் தலைவரானார்.
1914 இல் தொடங்கிய முதல் உலகப் போர் லெனினுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தேடித் தந்தது. அந்தப் போரில் ரஷியாவுக்குப் பெருந்தோல்வி ஏற்பட்டது. பொருளாதாரத் துறையில் பேரழிவுகள் ஏற்பட்டன. 1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜார் அரசு கவிழ்க்கப்பட்டது. ரஷியாவில் மக்களாட்சி அரசு ஏற்படலாம் என்று கூடத் தோன்றியது. ஜார் ஆட்சி வீழ்ந்த பின்னர் ரஷியாவில் ஜனநாயகக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தற்காலிக அரசை அமைத்திருந்தன. ஆனால், அந்தக் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதையும், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்கும் வலிமை அக்கட்சிகளுக்கு இல்லை என்பதையும் லெனின் அறிந்து கொண்டார். கட்டுக் கோப்பும் ஒழுக்கமும் வாய்ந்த தம்முடைய பொதுவுடைமைக் கட்சி எண்ணிக்கையில் சிறியதாக இருப்பினும், அது ஆட்சியைப் பிடிப்பதற்கு அரிய வாய்ப்பி உருவாகியிருப்பதையும் லெனின் கண்டார். எனவே, தற்காலிக அரசை கவிழ்த்துவிட்டு பொதுவுடைமை அரசை நிறுவும்படி அவர் போல்ஷ்விக் கட்சியினரைத் தூண்டினார். "இப்போது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை" என்று கூறி அவர்களை ஊக்குவித்தார். 1917 ஜூலையில் நடந்த ஒரு புரட்சி முயற்சி வெற்றி பெறவில்லை. இந்தப் புரட்சியின் எதிரிகள் இவரை ஜெர்மன் கையாள் என்று காட்ட முயன்றனர். அதனால் இவர் முதலில் பெட்ரோகிராடு நகரில் ஒரு குடும்பத்தினருடனும், பின்னர், பின்லாந்திலும் ஒளிந்திருந்தார். பின்னர், 1917 நவம்பரில் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது. லெனின் தாயகம் திரும்பி, புதிய ஆட்சியின் தலைவரானார்.
அரசுத் தலைவர் என்ற முறையில் லெனின் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டார். ஆயினும், மக்கள் நலனுக்குப் பயன்படுகின்ற கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தீவிர நாட்டமுடையவராக இருந்தார். லெனின் முதலில் முழுமையான சோசலிசப் பொருளாதாரத்தை மிக விரைவாக ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டினார். ஆனால், இந்த முயற்சி தோல்வி கண்டபோது இவர் தமது கொள்கையை மாற்றிக் கொண்டார். முதலாளித்துவமும் சோசலிசமும் இணைந்த ஒரு கலப்புப் பொருளாதாரத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இந்தப் பொருளாதார முறையே சோவியத் ஒன்றியத்தில் பல ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்தது.
லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. டிசம்பரில் இவரது வலக்கையும் செயல் இழந்தது. அது முதல் முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள், மாஸ்கோ நகரின் அருகிலுள்ள கால்க்கி என்னும் சிற்றூரில் இறந்தார். இவருடைய மறைவினால் நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமூட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப் பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
லெனின் ஒரு செயல்வீரராக விளங்கினார். ரஷியாவில் பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். 1917 நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள்.
லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளில் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்கு பெற்றார். லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர். அவருடைய கொள்கைகள், மார்க்சின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்சிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர்.
உலகம் முழுவதும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர். நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை!" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்குமங்கும்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால், லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறியுடன் பின்பற்றினார். "தொழிலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறையின் அடிப்படையில் அமைந்த அதிகாரமேயன்றி வேறில்லை. அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியினாலோ கட்டுப்படுத்த முடியாதது" என்று அவர் நம்பினார்.
லெனினுடைய பொருளாதாரக் கொள்கைகளை விட, சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்கைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிச அரசுகள் ஆள்கின்றன). மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு உலகின் ஒரு முறை நிலையாக வேரூன்றி விட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை. பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப் பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து, உன் நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது ஏதேனுமொன்று இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பலவீனத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
பொதுவுடைமை இயக்கம், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இயக்கம் என்பதில் ஐயமில்லை. அந்த இயக்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர் மார்க்சா, லெனினா என்பது முக்கியமில்லை. மார்க்ஸ், லெனினுக்கு முன்னர் வாழ்ந்தவர்; லெனின் மீது செல்வாக்குச் செலுத்தியவர். இந்தக் காரணத்தினாலேயே மார்க்சை அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதுகிறேன். எனினும், ரஷியாவில் பொதுவுடைமை நிறுவுவதில் லெனினுடைய நடைமுறை அரசியல் திறமைதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது எனலாம். லெனின் இல்லாதிருந்திருந்தால், ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு வாய்ப்புக்காக பொதுவுடைமைவாதிகள் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கலாம்; அவர்களுக்கு வலுவான எதிர்ப்புத் தோன்றி, அவர்கள் ஆட்சியைப் பிடிக்காமலே போயிருக்கலாம், அவர் மிகக் குறுகிய காலமே ஆட்சியிலிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சோவியத் ஒன்றியத்தில் தொழிலாளர் சர்வாதிகாரம் நிறுவப் பெற்றதற்கு, லெனினுக்குப் பின் ஆட்சிக்கு வந்து லெனினைவிடவும் ஈவிரக்கமின்றி ஆட்சி புரிந்த ஜோசஃப் ஸ்டாலினும் முக்கிய காரணமாவார். லெனின் தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அவர் ஈடிணையற்ற எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் எழுதிய நூல்கள் 55 தொகுதிகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. லெனின் தமது புரட்சிப் பணியில் தீவிர ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தமது குடும்பத்தை நேசித்த போதிலும், அந்தக் குடும்பப் பாசம் தமது அரசியல் பணிக்கு இடையூறாக இருக்க அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. லெனின் தமது ஆயுள் முழுவதும் அடக்குமுறையை ஒழிப்பதற்குப் பாடுபட்டபோதிலும், அவருடைய சாதனைகளின் நிகர விளைவாக அமைந்தது உலகின் கணிசமான பகுதியில் தனிநபர் சுதந்திரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லெனின் (கி.பி.1870 - கி.பி.1924), லெனின், அவர், ", இவர், தமது, புரட்சி, அரசியல், இவருடைய, தொழிலாளர், பொதுவுடைமை, மார்க்ஸ், தீவிர, கொண்டார், கட்சி, மக்கள், அந்த, முக்கியத்துவம், அவருடைய, ஆட்சியைப், அரசை, ரஷியாவில், பின்னர், ஆண்டு, அரசு, இருந்தார், ஜார், பொதுவுடமை, இருந்த, மிகுந்த, இவரை, சோவியத், வேண்டும், உடல், இயக்கங்களை, சர்வாதிகாரம், முழுவதும், கொள்கைகளை, கொள்கைகள், இல்லை, என்னும், ஆண்டுகள், ரஷ்யாவில், நடந்த, ஏற்பட்டது, ஆட்சி, என்பதையும், லெனினுடைய, செல்வாக்கு, செயற்படுத்தினார், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்