முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் (கி.பி.1845 - கி.பி.1923)
வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் (கி.பி.1845 - கி.பி.1923)
எக்ஸ்-கதிர்கள் எனப்படும் ஊடுகதிர்களை கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் ஆவார். இவர் 1845 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள லென்னப் என்ற நகரத்தில் பிறந்தார். சூரிச் பல்கலைக் கழகத்தில் பயின்று 1869 ஆம் ஆண்டில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். அடுத்த 19 ஆண்டுக் காலத்தில், ரான்ட்ஜென் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார். அப்போது ஒரு சிறந்த விஞ்ஞானியாகப் படிப்படியாகப் புகழ் பெற்று வந்தார். 1888 ஆம் ஆண்டில் இவர் உர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் இயற்பியல் பேராசிரியராகவும், இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். அங்குதான், இவர் தமக்கு உலகப் புகழ் தேடிக் கொடுத்த ஊடுகதிரை 1895 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாளன்று எதிர்மின் கதிர்களைக் கொண்டு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தார். எதிர்மின் கதிர்களில் ஓர் எதிர்மின்ம ஓட்டம் அடங்கியிருந்தது. காற்று நீக்கப்பட்டு அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குழலின் இரு முனைகள் ஒவ்வொன்றிலும் வைக்கப்பட்டுள்ள மின்வாய்களுக்கு இடையே ஓர் உயர்ந்த அளவு மின்னழுத்தத்தை செலுத்துவதன் மூலம் இந்த எதிர்மின்ம ஓட்டம் உண்டாகிறது. இந்த எதிர்மின் கருவிகளுக்குத் தாமாக ஊடுருவும் திறன் இல்லை. சில சென்டி மீட்டர் காற்றினால் இவற்றைத் தடுத்து நிறுத்தி விடலாம். ஆனால், ரான்ட்ஜென் தம் பரிசோதனையில் தமது எதிர்மின் கதிர்க் குழலை கனத்த கறுப்புத் தாளில் முழுமையாகப் பொதிந்து வைத்திருந்தார். அதனால், மின்னோட்டத்தைப் பாய்ச்சிய போதுங்கூட, அந்தக் குழலிலிருந்து ஒளி வருவதைக் காண முடியாதவாறு இருந்தது. ஆயினும், எதிர்மின் கதிர்க் குழலில் ரான்ட்ஜென் மின்னோட்டத்தைச் செலுத்திய மேசைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த இருளில் ஒளிவரும் திரை, அதற்கு ஓர் ஒளி உயிர்ப்பூட்டியதைப் போன்று, ஒளி வீசத் தொடங்கியது. அவர் அக்குழலில் மின்னோட்டத்தை நிறுத்தியதும், (இருளில் ஒளிரும் பேரியம் பிளேட்டினோ சயனைடு என்ற பொருள் பூசப்பட்டிருந்த) திரை ஒளி வீசுவதை நிறுத்தியது. எதிர்மின் கதிர்க் குழல் முற்றிலும் மூடப்பட்டிருந்தமையால் மின்னோட்டம் பாயும்போது அந்தக் குழலிலிருந்து கண்ணுக்குப் புலனாகாத ஏதோவொரு கதிர் வீச்சு வெளிப்பட்டிருக்க வேண்டும் என்பதை ரான்ட்ஜென் உணர்ந்தார். இந்தக் கதிர்வீச்சின் மர்மமான இயல்பினைக் கருதி, உட்புலனாகாத அந்தக் கதிர்வீச்சுக்கு "எக்ஸ் கதிர்கள்" என்று அவர் பெயரிட்டார். "எக்ஸ்" என்பது, கணிதத்தில் அறியப்படாத ஒன்றுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குறியீடாகும்.
தமது இந்தத் தற்செயலான கண்டுபிடிப்பினால் பெரிதும் மனக் கிளர்ச்சியுற்ற ரான்ட்ஜென், தம்முடைய மற்ற எல்லா ஆராய்ச்சிகளையும் கைவிட்டு விட்டு, எக்ஸ்-கதிர்களின் குண இயல்புகளைக் கண்டுபிடிப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். சில வாரங்கள் தீவிர ஆராய்ச்சி நடத்திய பிறகு அவர் பின்வரும் உண்மைகளைக் கண்டறிந்தார். (1) எக்ஸ்-கதிர்கள், பேரியம் பிளேட்டினோ சயனைடை மட்டுமின்றி, வேறு பல வேதியியற் பொருள்களையும் இருளில் ஒளிரச் செய்யக் கூடியவை; (2) வழக்கமான ஒளி ஊடுருவிச் செல்ல முடியாத பல பொருள்களின் வழியாக எக்ஸ்-கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியும். குறிப்பாக, எக்ஸ்-கதிர்கள் தம் தசைகளின் வழியாக ஊடுருவிச் செல்வதையும், ஆனால், எலும்புகள் அக் கதிர்களைத் தடுத்து விடுவதையும் அவர் கண்டார். எதிர் மின் கதிர் குழலுக்கும் இருளில் ஒளிரும் திரைக்குமிடையில் அவர் தம் கையை வைத்துப் பார்த்த போது, திரையில் அவருடைய கை எலும்புகளின் நிழல் தெரிவதைக் கண்டார். (3) எக்ஸ்-கதிர்கள் நேர் கோடுகளில் செல்லுகின்றன; மின்னேற்றம் பெற்றக துகள்களைப் போலன்றி, எக்ஸ்-கதிர்கள் மின்காந்தப் புலங்களால் கோட்டமடைவதில்லை.
ரான்ட்ஜென் எக்ஸ்-கதிர்கள் பற்றிய தமது முதலாவது ஆய்வுக் கட்டுரையை 1895 ஆம் ஆண்டு டிசம்பரில் எழுதினார். இக்கட்டுரை எதிர்பார்த்தது போலவே, பேரார்வத்தையும், பரபரப்பையும் உண்டாக்கியது. சில மாதங்களுக்குள்ளேயே நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் எக்ஸ்-கதிர்கள் குறித்துத் தீவிரமாக ஆராய்ச்சி செய்யலாயினர். ஓராண்டுக்குள்ளேயே எக்ஸ்-கதிர்கள் பற்றி ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. ரான்ட்ஜெனின் கண்டுபிடிப்பினால் தமது ஆராய்ச்சிக்கு நேரடிச் செயல் நோக்கம் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர் ஆன்டோய்ன் ஹென்றி பெக்கரல் ஆவார். பெக்கரல், எக்ஸ்-கதிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய முனைந்து, அதைவிட மிக முக்கியமான நிகழ்வாகிய கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.
பொதுவாக, ஒரு பொருளின் மீது உயர்ந்த ஆற்றல் வாய்ந்த எதிர் மின்மங்கள் தாக்கும்போது எக்ஸ்-கதிர்கள் உண்டாகின்றன. எக்ஸ்-கதிர்களிலேயே எதிர்மின்மங்கள் அடங்கியிருக்கவில்லை. மாறாக, மின்காந்த அலைகள் தாம் அடங்கியுள்ளன. எனவே, அடிப்படையில் அவை கட்புலனாகும் கதிர்வீச்சைப் (அதாவது, ஒலி அலைகளை) போன்றனவேயாகும். ஆனால், எக்ஸ்-கதிர்களின் அலை நீளங்கள் மிகக் குறுகலானவை.
எக்ஸ்-கதிர்களின் பயன்பாடுகளிலேயே தலையாயது மருத்துவத்திலும், பல் நோய்க் குறிகளைக் கண்டுபிடிப்பதிலும் அதன் பயன்பாடு ஆகும். ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவ முறையிலும் எக்ஸ்-கதிர்கள் பயன்படுகின்றன. இந்த முறையில், புற்றுக் கழலைகளை அழிப்பதற்கு அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு எக்ஸ்-கதிர்கள் பயன்படுகின்றன.
தொழில் துறையில், எக்ஸ்-கதிர்கள் பல வகையிலும் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சில பொருள்களின் கனத்தை அளவிடுவதற்கும், கண்ணுக்குத் தெரியாத வெடிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கும் எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துகிறார்கள். உயிரியல் முதல் வானியல் வரையில் அறிவியல் ஆராய்ச்சியின் பல்வேறு துறைகளிலுங்கூட எக்ஸ்-கதிர்கள் பயன்படுகின்றன. அணு மற்றும் மூலக்கூற்றுக் கட்டமைப்பு குறித்து ஏராளமான தகவல்களை அறியவும் விஞ்ஞானிகளுக்கு எக்ஸ்-கதிர்கள் துணை செய்துள்ளன.
எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த முழுப் பெருமைக்கும் ரான்ட்ஜென் உரியவராவார். அவர் தன்னந்தனியாக பணியாற்றினார். அவருடைய கண்டுபிடிப்பு சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தது. அதை அவர் மிகத் திறமையுடன் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ந்தார். மேலும் பெக்கரலுக்கும், மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் அவரது கண்டுபிடிப்பு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.
ஆனால், ரான்ட்ஜெனின் முக்கியத்துவத்தை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டு விடலாகாது. எக்ஸ்-கதிர்களின் பயன்பாடுகள் மிக்க பயனுடையவை என்பது உண்மைதான். எனினும், ஃபாரடே கண்டுபிடித்த மின்காந்தத் தூண்டல் செய்தது போன்று எக்ஸ்-கதிர்கள் நமது தொழில் நுட்பம் முழுவதையும் அடியோடு மாற்றி விடவில்லை. மேலும், அறிவியல் கோட்பாட்டில் எக்ஸ்-கதிர்களின் கண்டுபிடிப்பு உண்மையில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூற முடியாது. கட்புலனாகும் ஒளியுனுடையதைவிட குறுகிய அலை நீளங்களைக் கொண்ட புற ஊதாக் கதிர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. புற ஊதா அலைகளை ஒத்திருக்கிற, ஆனால், அவற்றை விடக் குறுகிய அலை நீளங்களையுடைய எக்ஸ்-கதிர்கள் இருந்தன என்பது, பழைய இயற்பியலின் கட்டமைப்புக்குள் எளிதில் அடங்கிவிடக் கூடியதே ஆகும். மொத்தத்தில், அடிப்படை முக்கியத்துவம் மிக்க கண்டுபிடிப்பைச் செய்த பெக்கரலுக்கு வெகுனவாகப் பிற்பட்டு ரான்ட்ஜெனுக்கு இடமளிப்பதே நியாயமானது.
ரான்ட்ஜெனுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, ரான்ட்ஜென் தம்பதியர் ஒரு மகளைத் தத்தெடுத்துக் கொண்டனர். 1901 ஆம் ஆண்டில் இயற்பியலுக்காக வழங்கப்பட்ட முதலாவது நோபல் பரிசு ரான்ட்ஜெனுக்கு வழங்கப்பட்டது. 1923 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள மூனிக் நகரில் ரான்ட்ஜென் காலமானார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 86 | 87 | 88 | 89 | 90 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென் (கி.பி.1845 - கி.பி.1923), எக்ஸ், கதிர்கள், ரான்ட்ஜென், அவர், எதிர்மின், ஆண்டில், கதிர்களின், இருளில், பயன்படுகின்றன, தமது, ஊடுருவிச், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, கதிர்க், இவர், பல்கலைக், ஆய்வுக், அந்தக், என்பது, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்