முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வால்ட்டேர் (கி.பி.1694 - கி.பி.1778)
வால்ட்டேர் (கி.பி.1694 - கி.பி.1778)
பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தின்போது முன்னணித் தலைவராக விளங்கியவர் வால்ட்டேர் ஆவார். இவரது இயற்பெயர் பிரான்ஸ்வா மேரி ஆரூவட் என்பதாகும். ஆனால் இவரது புனைப் பெயரான வால்ட்டேர் என்ற பெயரிலே உலகம் நன்கறியும். இவர் ஒரு கவிஞர்; நாடகாசிரியர்; கட்டுரையாளர்; நாவலாசிரியர்; சிறுகதை எழுத்தாளர்; தத்துவஞானி; வரலாற்றாசிரியர், சுதந்திரமான முற்போக்குச் சிந்தனை இயக்கத்தின் திருத்தூதராக திகழ்ந்தார்.
பாரிஸ் நகரில் 1694 ஆம் ஆண்டில் வால்ட்டேர் பிறந்தார். அவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். இளமையில் அவர் பாரிசிலுள்ள லூயி லெ-கிராண்ட் இயேசுச் சங்கக் கல்லூரியில் படித்தார். பின்னர் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால், அதில் பட்டம் பெறாமல் நின்று விட்டார். பாரிஸ் நகரில் அவர் தம் இளமைக் காலத்தைக் கழித்த போது, மிகவும் நகைச்சுவை மிக்கவர் என்று பெயரெடுத்தார். மதிநுட்பம் வாய்ந்த விகடங்களையும், நையாண்டிப் பாடல்களையும் சுவைபடக் கூறி எல்லோரையும் கவர்ந்தார். ஆனால் பிரெஞ்சுப் புரட்சி நிகழ்வதற்கு முற்பட்ட காலத்திய அன்றைய ஆட்சியில் மதிநுட்பமும் ஆபத்தானதாக இருந்தது. இவர் இயற்றிய சில அரசியல் கவிதைகளுக்காக அரசு அவரைக் கைது செய்து, கொடுங்கோன்மையின் சின்னமாகக் கருதப்பட்ட பாஸ்டில் சிறைக் கோட்டத்தில் அடைத்தது. சிறைச்சாலையில் ஏறத்தாழ ஓராண்டுக் காலம் அடைபட்டிருந்த போது, அவர் தமது நேரத்தை "ஹென்றியாடு" என்ற கவிதைக் காப்பியத்தை இயற்றுவதில் செலவிட்டார். இந்தக் காப்பியம் பின்னர் பெரும் புகழ் பெற்றது. வால்ட்டேர் சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்பு, 1718 ஆம் ஆண்டில் அவரது "ஈடிப்பே" என்ற நாடகம் பாரிசில் அரங்கேறியது. அந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு, தம் 24 ஆம் ஆண்டிலேயே வால்ட்டேர் பெரும் புகழ் பெற்றார். அதன் பின்பு எஞ்சிய 60 ஆண்டுகளும் அவர் முன்னணி பிரெஞ்சு இலக்கிய அறிஞராகப் புகழுடன் திகழ்ந்தார்.
சொல்லாட்சித் திறனில் மட்டுமின்றி பொருளீட்டும் திறனிலும் வால்ட்டேர் தேர்ந்தவராக விளங்கினார். ஆனால், 1926 ஆம் ஆண்டில் அவர் சில தொல்லைகளுக்குள்ளானார். அவர் ஏற்கனவே தம் காலத்தில் (ஏன் எல்லாக் காலத்திலும்) மிகுந்த நகைச்சுவையும், கூர்மதியும் வாய்ந்த தலை சிறந்த உரையாடல் வல்லுநர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். ஆனால், ஒரு பாமரருக்கு இருக்க வேண்டிய தன்னடக்கம் வால்ட்டேருக்கு இல்லை எனப் பிரெஞ்சு மேட்டுக் குடியினர் கருதினர். இது குறித்து செவாலியோ-டி-ரோஹான் என்ற கோமகனுக்கும், வால்ட்டேருக்குமிடையே பகிரங்கச் சொற்போர் நடந்தது. அந்தச் சொற்போரில், வால்ட்டேர் தமது அசராச் சொல்லாற்றலாலும், நகைச் சுவை நையாண்டிகளாலும் அந்தக் கோமகனை எளிதில் தலைகுனியச் செய்தார். ஆனால் அடிபட்ட புலி செவாலியே வாளாவிருக்கவில்லை. குண்டர்களைக் கொண்டு வால்ட்டேரை அடிக்கச் செய்தார். பின்னர் அவரைப் பாஸ்டல் சிறைக்கும் அனுப்பச் செய்தார். வால்ட்டேர் வி€வில், பிரான்சிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அதனால், அவர் இங்கிலாந்து சென்றார். அங்கு இரண்டரை ஆண்டுகள் தங்கியிருந்தார்.
இங்கிலாந்தில் வால்ட்டேர் தங்கியிருந்த காலம் அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவர் ஆங்கில மொழியைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டார். ஜான் லாக், பிரான்சிஸ் பேக்கன், ஐசக் நியூட்டன், வில்லியம் சேக்ஸ்பியர் போன்ற புகழ் பெற்ற ஆங்கிலேயர்களின் படைப்புகளைப் படித்தறியும் வாய்ப்பினைப் பெற்றார். அக் காலத்துத் தலைசிறந்த ஆங்கிலேயச் சிந்தனையாளர்களின் நட்பும் அவருக்குக் கிடைத்தது. சேக்ஸ்பியர், வால்ட்டேரை வெகுவாகக் கவர்ந்தார். ஆங்ளகிலேய அறிவியல் நோக்கும், செயலறிவு மனப்போக்கும் அவரை ஆட்கொண்டன. அனைத்திற்கம் மேலாக, ஆங்கிலேயரின் அரசியல் முறைகள் வால்ட்டேரை மிகவும் ஈர்த்தது. பிரான்சில் வால்ட்டேர் அறிந்திருந்த அரசியல் நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான ஆங்கிலேய மக்களாட்சி முறையும், தனிநபர் சுதந்திரங்களும் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இங்கிலாந்தில் எந்த ஒரு பிரபுவும் ஒரு முத்திரைக் கடிதத்தை எழுதி, வால்ட்டேரை எவ்வித விசாரணையுமின்றிச் சிறையில் தள்ளிவிட முடியாது. ஏதேனும், காரணத்தால் வால்ட்டேர் முறையின்றிக் கைது செய்யப்பட்டால், 'ஆளைக் கொணர்க' என்னும் நீதிப் பேராணை மூலம் அவரை விரைவிலேயே விடுதலை செய்து விடலாம்.
வால்ட்டேர் பிரான்சுக்குத் திரும்பியவுடனேயே அவர் தமது முதலாவது முக்கியமான தத்துவ நூலாகிய "ஆங்கிலேயர் பற்றிய கடிதங்கள்" என்ற நூலை எழுதினார். 1734 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த நூல் தான் உண்மையில் பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இந் நூலில் பிரிட்டிஷ் அரசியல் முறையை வால்ட்டேர் பாராட்டி எழுதியிருந்தார். ஜான் லாக் போன்ற ஆங்கிலேயச் சிந்தனையாளர்களின் கொள்கைகளையும் அவர் போற்றியிருந்தார். இந்த நூலை வெளியிட்டது, பிரெஞ்சு ஆட்சியாளர்களின் ஆத்திரத்தைத் தூண்டியது. வால்ட்டேர் மீண்டும் பாரிசைவிடடு வெளியேற நேர்ந்தது.
அடுத்த 15 ஆண்டுக் காலத்தை கிழக்கு பிரான்சிலிருந்த சிரே என்னும் நகரத்தில் வால்ட்டேர் கழித்தார். அங்கு அவர் ஒரு கோமகனின் மனைவியான டூ சாட்டலட் என்ற சீமாட்டியின் காதலரானார். இந்தச் சீமாட்டி நன்கு கற்றறிந்தவர். மதிநுட்பம் மிகுந்தவர். 1750 ஆம் ஆண்டில் இச் சீமாட்டி காலமான பிறகு, பிரஸ்ஸியாவின் மகா பிரடரிக் அரசின் அழைப்பிற்கிணங்க வால்ட்டேர் ஜெர்மனிக்குச் சென்றார். போட்ஸ்டாமில் பிரடரிக் அரசவையில் வால்ட்டேர் மூன்றாண்டுகள் கழித்தார். அறிவுத்திறன் வாய்ந்த பிரடரிக் அரசருடன் முதலில் வால்ட்டேர் நல்லுறவுடனேயே இருந்தார். ஆனால், இறுதியில் இருவருக்குமிடையே, தகராறு ஏற்படவே வால்ட்டேர் ஜெர்மனியிலிருந்து வெளியேறினார்.
ஜெர்மனியிலிருந்து வெளியேறிய வால்ட்டேர் ஜெனீவா அருகிலிருந்த ஒரு பண்ணையில் குடியேறினார். இங்கு, அவர் பிரெஞ்சு, பிரஸ்ஸிய அரசர்கள் இருவரின் பிடியிலும் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க முடிந்தது. ஆனால், அவருடைய முற்போக்குக் கருத்துகள், சுவிட்சர்லாந்தைக் கூட அவர் ஆபத்தானவர் எனக் கருதச் செய்தன. எனவே, 1758 ஆம் ஆண்டில் வால்ட்டேர், பிரெஞ்சு-சுவிஸ் எல்லை அருகிலிருந்த ஃபெர்னி என்னுமிடத்தில் ஒரு புதிய பண்ணையில் குடியமர்ந்தார். இங்கு அதிகாரிகளுடன் பூசல் ஏற்பட்டால், ஏதாவதொரு நாட்டுக்கு ஓடிவிட இவருக்கு வாய்ப்பிருந்தது. இங்கு அவர் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது, அவர் ஏராளமான இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தார். அத்துடன், ஐரோப்பா முழுவதுமிருந்த மேதைகளுடன் கடிதத் தொடர்பு கொண்டார். ஏராளமான அறிஞர்களும் அவரை நேரில் வந்து சந்தித்துச் சென்றார்.
இந்த ஆண்டுகள் நெடுகிலும் வால்ட்டேர் தமது இலக்கியங்களைச் சிறிதும் குன்றாமல் படைத்தவாறே இருந்தார். அவர் அதிசயிக்கத்தக்க வகையில் மிக வேகமான எழுத்தாளராக விளங்கினார். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரிலும் மிக அதிக நூல்கள் எழுதியவர் வால்ட்டேர் தான் எனலாம். அவர் மொத்தத்தில் 30,000 அச்சுப் பக்கங்களுக்கு மேல் எழுதினார். இவற்றில் கவிதைக் காப்பியங்கள், இசைப் பாடல்கள், சொந்தக் கடிதங்கள், துண்டு வெளியீடுகள், நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் வரலாற்று நூல்கள், தத்துவ விளக்க நூல்கள் ஆகியவை அடங்கும்.
சமயச் சகிப்புணர்வில் வால்ட்டேர் எப்பொழுதும் தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்தார். எனினும் 70 ஆம் வயதை நெருங்கிக் கொண்டிருந்த போது, பிரான்சில் ஏராளமான புரோட்டஸ்டான்டுகளைத் துன்புறுத்துமூ அடக்குமுறை அட்டூழியம் நிகழ்ந்தது. இதனால் அடங்கா ஆத்திரமும் மனக் கொந்தளிப்பும் கொண்ட வால்ட்டேர், சமய வெறிக்கு எதிராக ஒரு அறிவுப் போராட்டத்தை நடத்தும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார். சமயச் சகிப்புணர்வின்மையைக் கண்டித்து ஏராளமான துண்டு வெளியீடுகளை எழுதினார். தமது சொந்தக் கடிதங்களை, "அட்டூழியச் செயலை அடியோடு அழித்திடுக" என்னும் வாசகத்தை எழுதி முடிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டார். வால்ட்டேர், இந்த "அட்டூழியச் செயல்" கடைந்தெடுத்த சமய வெறி என்றும், மட்டுமீறிய மதப் பித்து என்றும் கருதினார்.
வால்ட்டேர், 1778 ஆம் ஆண்டில் தம் 83 ஆம் வயதில் பாரிஸ் திரும்பினார். அங்கு, 'ஐரின்' என்ற தமது புதிய நாடகத்தின் அரங்கேற்றத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த நாடகத்திற்குப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் வால்ட்டேரே பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தின் 'முதுபெரும் தலைவர்' என்று போற்றினார்கள். பெஞ்சமின் பிராங்ளின் உட்பட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வால்ட்டேரை நேரில் சந்தித்தனர். ஆனால், விரைவிலேயே வால்ட்டேரின் வாழ்வு முடிந்தது. 1778 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் அவர் பாரிசில் காலமானார். அவர், திருச்சபைக் குரு மரபினரைத் துணிவாகக் கண்டித்து வந்தமையால், அவருக்குப் பாரிசில் கிறித்தவமுறை ஈமச் சடங்கு மறுக்கப்பட்டது. ஆனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்ற பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் அவருடைய உடலை அகழ்ந்தெடுத்து , பாரிசிலுள்ள புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள 'பேந்தியான்' என்னுமிடத்தில் அனைத்து மரியாதைகளுடனும் மீண்டும் புதைத்தனர்.
வால்ட்டேர் எழுதிக் குவித்த நூல்கள் கணக்கற்றவை. எனவே, அவருடைய புகழ்பெற்ற நூல்களை மட்டும் இந்தச் சிறிய கட்டுரையில் குறிப்பிடுவதாயினும் மிகப் பெருகும். அவர் எழுதிய நூல்களின் பட்டியலைவிட, அவர் தம் வாழ்நாளில் பரப்புவதற்குப் பாடுபட்ட அடிப்படைக் கொள்கைகளே முக்கியமானவை. அவர் மிகத் தீவிரமாக வலியுறுத்திய கொள்கைகள் பேச்சுரிமையும் பத்திரிகைச் சுதந்திரமும் ஆகும். "நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையை சாகும் வரை நான் பாதுகாப்பேன்" என்பது வால்ட்டேர் கூறியதாக அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு கூற்று. உண்மையில் அவர் இந்தக் கூற்றை கூறியதில்லையெனினும், அவருடைய மனப்போக்கை இது தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
வால்ட்டேர் வலியுறுத்திய மற்றொரு முக்கியமான கொள்கை சமயச் சுதந்திரம். அவர் தம் வாழ்நாள் முழுவதிலும், சமயச் சகிப்புணர்வு இன்மையையும், சமயத்தின் பெயரால் நடத்தும் அட்டூழியங்களையும் மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். வால்ட்டேர் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்த போதிலும், பெரும்பாலான சமயக் கோட்பாடுகளை அவர் வன்மையாகக் கண்டித்தார். ஒருங்கமைவு செய்யப்பட்ட எந்த ஒரு சமயமும் அடிப்படையில் போலியானது என்ற கருத்தை அவர் இடைவிடாமல் வலியுறுத்தி வந்தார்.
பிரான்சிலுள்ள உயர்குடி மதிப்புப் பட்டமுறை கோமான்களை எந்த வகையிலும் தம்மைவிட மேம்பட்ட அறிவாளிகளாகவோ, உயர்ந்தவர்களாகவோ வால்ட்டேர் ஒரு போதும் கருதியதில்லை. "அரசர்களின் தெய்வீக உரிமை" என்பது முட்டாள்தனமானது என்பதை அவர் தமது நேயர்களுக்கு ஆணித்தரமாக உணர்த்தியிருந்தார். அவர் இக்காலத்து மக்களாட்சி முறை ஆதரவாளராக இருக்கவில்லை. (அவர், ஒரு வலுவான முற்போக்கான முடியாட்சியையே விரும்பினார்). எனினும், எநத வகையான பரம்பரை ஆட்சி முறையையும் அவர் வன்மையாக எதிர்த்தார். எனவே, அவருடைய ஆதரவாளர்களில் பெரும்பாலோர் மக்களாட்சி ஆதரவாளர்களாக அமைந்ததில் வியப்பேதுமில்லை. இவ்வாறாக, அவருடைய அரசியல் கொள்கைகளும், சமயக் கருத்துகளும் பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலாதாரமாக அமைந்தன. 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சி தோன்றியதற்கு இவையே மிகப் பெருமளவுக்குக் காரணமாக விளங்கின.
வால்ட்டேர் தாமே ஒரு விஞ்ஞானியாக இருக்கவில்லை. எனினும், அவர் அறிவியலில் ஆர்வங் கொண்டிருந்தார். பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் போன்றோரின் அனுபவ அறிவுக் கண்ணோட்டத்தை அவர் தீவிரமாக ஆதரித்தார். அவர் முனைப்பும், திறமையும் வாய்ந்த வரலாற்றறிஞராகவும் விளங்கினார். உலக வரலாறு பற்றி அவர் எழுதிய "நாடுகளின் பண்பாடுகளும் மனப்போக்குகளும்" என்ற நூல் அவரது வரலாற்று நூல்களுள் மிகச் சிறந்தது. இந்த நூல் முந்தைய வரலாறுகளிலிருந்து இரு அம்சங்களில் வேறுபட்டிருந்தது. முதலாவதாக, ஐரோப்பா, உலகின் ஒரு சிறு பகுதியே என்பதை அவர் இதில் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தமது நூலின் கணிசமான பகுதியில் ஆசியாவின் வரலாற்றைக் கூறியுள்ளார். இரண்டாவதாக, அரசியல் வரலாற்றைவிடப் பண்பாட்டு வரலாறு தான் மிக முக்கியமானது என அவர் கருதினார். அதனால், அவர் தமது நூலில், அரசர்களையும் அவர்கள் மேற்கொண்ட போர்களையும் பற்றிய செய்திகளை விட, சமூக-பொருளாதார நிலைமைகள், கலை வளர்ச்சி ஆகியவை குறித்த செய்திகளையே அதிகமாகச் சேர்த்திருந்தார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வேறு பலரைப் போல் வால்ட்டேர் ஒரு தற்சிந்தனைத் தத்துவவாதியாக இருக்கவில்லை. ஜான் லாக், பிரான்சிஸ் பேக்கன் போன்ற மற்றவர்களின் கொள்கைகளை அவர் பெருமளவுக்கு எடுத்துக் கொண்டார். அவற்றை அவர் விரித்துரைத்துப் பரவச் செய்தார். வேறொருவருடைய முயற்சியையும் விட, வால்ட்டேரின் எழுத்துக்களின் வாயிலாகவே மக்களாட்சி, சமயச் சகிப்புணர்வு, அறிவுச் சுதந்திரம் ஆகியவை பற்றிய கொள்கைகள், பிரான்ஸ் முழுவதிலும் ஏன், ஐரோப்பா முழுவதிலும் பரவின. பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தின் போது (டீட்ராட், ட'ஆலம்பர், ரூசோ, மாண்டெக்ஸ்கியூ முதலிய) வேறு பல முக்கிய எழுத்தாளர்கள் இருந்தனர். எனினும், அந்த இயக்கத்தின் முதன்மையான தலைவராகத் திகழ்ந்தவர் வால்ட்டேர்தான் என்பதே நியாயமாகும். முதலாவதாக, அவர் கையாண்ட கூர்மையான இலக்கிய நடையும், அவர் எழுதிக் குவித்த ஏராளமான நூல்களும், அவரது நீண்ட வாழ்வும் வேறெந்த எழுத்தாளருக்கும் கிடைத்திராத வகையில் மிகப் பெருமளவு வாசகர்களை அவருக்குத் தேடித் தந்தன. இரண்டாவதாக, மறுமலர்ச்சி இயக்கம் நெடுகிலும் கொள்கைகளே மேலோங்கியிருந்தன, மூன்றாவதாக, அந்தக் கால அளவின் போது புகழ் பெற்றிருந்த முக்கியமானவர்கள் அனைவருக்கும் முந்தியவராக வால்ட்டேர் விளங்கினார். மாண்டெஸ்கியூவின் சிறந்த படைப்பாகிய 'சட்டங்களின் உயிர்நாடி' என்ற நூல் 1748 ஆம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டது. புகழ் பெற்ற "கலைக்களங்சியம்" என்ற நூலின் முதல் தொகுதி வெளியானது 1751 ஆம் ஆண்டல் தான். ரூசோ தமது முதல் கட்டுரையை 1750 ஆம் ஆண்டில்தான் எழுதினார். ஆனால், வால்ட்டேரின் "ஆங்கிலேயர் பற்றிய கடிதங்கள்" என்ற நூல் 1734 ஆம் ஆண்டிலேயே வெளி வந்துவிட்டது. அது வெளிவருவதற்கு முன்பு 16 ஆண்டுகளாக அவர் பெரும்புகழ் பெற்றிருந்தார்.
வால்ட்டேரின் நூல்களில், "காண்டிடே" என்ற குறுநாவல் தவிர, மற்ற அனைத்தும் இன்று மிகக் குறைவாகவே படிக்கப்படுகின்றன. ஆனால், 8-ஆம் நூற்றாண்டில் அந்நூல்களை மிகப் பெருமளவு மக்கள் படித்தனர். எனவே, பிரெஞ்சுப் புரட்சி தோன்றுவதற்கு ஆதரவாகப் பொதுமக்கள் கருத்தினை மாற்றியதில் வால்ட்டேர் மிக முக்கியமான பங்கு கொண்டார் என்பதில் ஐயமில்லை. மேலும், வால்ட்டேரின் செல்வாக்க பிரான்ஸ் நாட்டுடன் நின்று விடவில்லை. தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மாடிசன், பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அமெரிக்கப் புரட்சித் தலைவர்களும் வால்ட்டேரின் நூல்களைப் படித்து அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டார்கள்.
வால்ட்டேரை அவர் காலத்திலேயே வாழ்ந்து புகழ் பெற்ற ஜீன் ரூசோவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையாக இருக்கும். வால்ட்டேரின் கண்ணோட்டம் முழுவதும் பகுத்தறிவுக்கு உகந்ததாக அமைந்திருந்தது; ஆனால், ரூசோவின் மனப்போக்கு உணர்ச்சி வேகம் நிறைந்ததாக இருந்தது. எனவேதான், மறுமலர்ச்சி இயக்கத்தின் போது ரூசோவை விட வால்ட்டேர் அதிக காலம் முன்னணியில் நிலைத்து நின்றார். 18 ஆம் நூற்றாண்டில், இருவரிலும், வால்ட்டேர்தான் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். அதே சமயம், எழுத்தாளர்கள் என்ற முறையில் வால்ட்டேரை விட ரூசோ அதிகத் தற்சிந்தனை வாய்ந்தவராக விளங்கினார். ஆகவே தான் அவருடைய படைப்புகள் இன்றும்கூட மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 60 | 61 | 62 | 63 | 64 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்ட்டேர் (கி.பி.1694 - கி.பி.1778), அவர், வால்ட்டேர், ", தமது, பிரெஞ்சு, ஆண்டில், அவருடைய, வால்ட்டேரை, வால்ட்டேரின், இயக்கத்தின், மறுமலர்ச்சி, அரசியல், தான், புகழ், போது, நூல், விளங்கினார், சமயச், கொண்டார், பெற்ற, ஏராளமான, அங்கு, நூல்கள், மக்களாட்சி, லாக், ஜான், எழுதினார், பற்றிய, செய்தார், பிரெஞ்சுப், காலம், அவரது, மிகப், வாய்ந்த, எனினும், இங்கு, முழுவதிலும், இருக்கவில்லை, பிரடரிக், கொண்டிருந்தார், தீவிரமாக, ஆகியவை, எழுத்தாளர்கள், ஐரோப்பா, ரூசோ, எழுதிக், ஆண்டுகள், விடுதலை, பாரிசில், அந்த, பெரும், புரட்சி, பாரிஸ், பின்னர், மிகுந்த, பெற்றிருந்தார், எந்த, என்னும், முக்கியமான, அவரை, பேக்கன், சென்றார், பிரான்சிஸ், தத்துவ, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்