முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜோகான் செபாஸ்டியன் பாக் (கி.பி.1685 - கி.பி.1750)
ஜோகான் செபாஸ்டியன் பாக் (கி.பி.1685 - கி.பி.1750)
மேற்கு ஐரோப்பாவில் இருந்த பல்வேறு தேசிய இசைப்பாணிகளை முதன் முதலில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்த ஒப்புயர்வற்ற இசை அமைப்பாளர் ஜோகான் செபாஸ்டியன் பாக் ஆவார். இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் இசை மரபுகளிலிருந்த மிகச் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைத்ததன் மூலம் இவர் அந்த இசை மரபுகள் அனைத்திற்கும் வளமூட்டினார். இவர் தம் ஆயுட்காலத்தில் சிறந்த புகழைப் பெறவில்லை. இவர் இறந்த பின் 50 ஆண்டுகளிலேயே இவரை இசை உலகம் பாதி மறந்ததுவிட்டது. ஆனால் கடந்த 150 ஆண்டுகளில் இவருடைய புகழ் படிப்படியாக உயர்ந்தது. இன்று வரலாற்றில் தோன்றிய இரண்டு அல்லது மூன்று தலைசிறந்த இசையாளர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். சிலர் அவர்கள் அனைவரிலும் இவர் தலைசிறந்தவர் எனக் கருதுவர்.
ஜெர்மனியிலுள்ள ஐசனாக் என்னும் நகரில் 1685 ஆம் ஆண்டில் பாக் பிறந்தார். இசைத் திறமை பாராட்டப்பட்ட, இசை சாதனை ஊக்குவிக்கப்பட்ட ஒரு சூழலில் பிறந்தது இவர் பெற்ற நற்பேறாகும்; உண்மையைக் கூறின், ஜோகான் செபாஸ்டியன் பாக் பிறப்பதற்கு முன்பே, பல ஆண்டுகள்ற பாக் குடும்பம் இசைத் துறையில் தலை சிறந்து விளங்கியது. இவருடைய தந்தை ஒரு தேர்ந்த வயலின் மேதையாக விளங்கினார். இவருடைய பாட்டானாரின் உடன் பிறந்த இருவர் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்களாகத் திகழ்ந்தனர். இவருடைய பெற்றோரின் உடன் பிறந்தார் பிள்ளைகள் பலரும் சிறந்த இசைவாணர்களாகப் புகழ் பெற்றிருந்தனர்.
பாக்கின் 9 ஆம் வயதிலேயே தாய் இறந்துவிட்டார். பத்தாம் வயதில் தந்தையையும் இழந்து அனாதையானார். இவர் பாடுவதற்கேற்ற சிறந்த குரல்வளம் கொண்டிருந்தார். அதன் காரணமாகவும், இவருடைய ஏழ்மை நிலை காரணமாகவும், லூன்பர்கிலிருந்த புனித மைக்கேல் பள்ளியில் இவருக்குப் படிப்புதவித் தொகை கிடைத்தது. அப்போது, இவர் குமரப் பருவத்தினராக இருந்தார். 1702 ஆம் ஆண்டில் இவர் புனித மைக்கேல் பள்ளியில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டிலேயே ஓர் அரங்கிசைக் குழுவின் வயலின் இசைவாணராக இவருக்கு இடம் கிடைத்தது. அது முதற்கொண்டு 20 ஆண்டுகள் வரை, இவர் ஓர் இசையமைப்பாளராகவும், இசையாசிரியராகவும், இசை நடத்துநராகவும் பல்வேறு பணிகளை ஆற்றினார். எனினும், இவர் தம் வாழ்நாளில் ஒரு தலைசிறந்த வாத்திய இசை வல்லுநர் என்ற முறையிலேயே பெரும்புகழ் பெற்றார். 1723 ஆம் ஆண்டில், பாக் தமது 38 ஆம் வயதில், லைப்சிக்கிலிருந்த புனித தாமஸ் தேவாலயத்தின் இசை இயக்குநராக நியமனம் பெற்றார். இந்தப் பதவியை இவர் தம் வாழ்நாளில் கடைசி 27 ஆண்டுகளும் வகித்தார். 1750 ஆம் ஆண்டில் இவர் காலமானார்.
பாக் தம் ஆயுட்காலத்தில் சிறந்த பதவிகளை வகித்தார். தமது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போதுமான பொருளும் ஈட்டினார். ஆனால், மோசார்ட், பீத்தோவன் அல்லது பிரான்ஸ் லிஸ்ட், அல்லது பிரடரிக் சோப்பின் ஆகியோரை போன்று தம் வாழ்நாளிலேயே இவர் புகழ் பெறவில்லை. பாக்-ஐப் பணிக்கு அமர்த்திக் கொண்டவர்கள் எல்லோரும் அவருடைய மேதைத் திறனை உணர்ந்து கொண்டதாகக் கூற முடியாது. லைப்சிக் தேவாலய ஆட்சி மன்றம், ஒரு முதல் தர இசைவாணரை நியமிக்க விரும்பியது. அவர்கள் நியமிக்க விரும்பிய முதல் இரண்டு முதல் தர இசைவாணர்கள் பணியைப் பெற முடியாமற் போனதாலேயே, அவர்கள் வேறு வழியின்றி பாக்-ஐ அந்தப் பதவியில் நியமித்தனர். (அதே சமயத்தில் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, வைமார் கோமகளின் அவையில் வாத்திய இசைவாணராகவும் இசைக்குழு நடத்துநராகவும் இவர் பணியாற்றிய போது, வேறொரு புதிய பதவிக்குச் செல்ல அவர் விரும்பினார். அப்போது அந்தக் கோமகன் இவரை விடுவிக்க மறுத்தார். சிறிது காலம் இவர் சிறையிலும் அடைக்கப் பட்டிருந்தார். மூன்று வாரங்கள் பாக் சிறையில் கழித்த பிறகே, கோமகள் இறுதியாக இவரை விடுதலை செய்தார்).
பாக் 22 ஆம் வயதில் தம் அத்தை மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், பாக்கின் 35 ஆம் வயதிலேயே அவருடைய மனைவி காலமானார். அடுத்த ஆண்டிலேயே அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவி, முதல் ஏழு குழந்தைகளை வளர்ப்பதற்கு உதவியதுடன் மட்டுமின்றி, அவருக்கு மேலும் 13 குழந்தைகளைப் பெற்றுத் தந்தார். பாக்கின் பிள்ளைகளில் 9 பேர் மட்டுமே அவருக்குப் பின் உயிர் வாழ்ந்தனர். அவர்களில் நால்வர் சிறந்த இசைவாணர்களாகத் திகழ்ந்தனர். எத்துணை திறமை வாய்ந்த இசைக் குடும்பம்!
பாக் ஏராளமான இசைப் படைப்புகளை உருவாக்கிய இசை மேதையாகத் திகழ்ந்தார். அவர் ஏறத்தாழ 300 கதைப் பாட்டு நாடகங்களை (Cantatas) இயற்றினார். 48 வகைப் பல ஓசை உருப்படிகளை (Fugues) உருவாக்கினார். The well Tempered Clavier என்ற இசைப்‘ட்டுக்கான முன் தரவுகளையும் (Preludes) அவர் அமைத்தார். இது தவிர குறைந்தது 140 வேறு முன் தரவுகளையும் இவர் இயற்றினார். ஹார்ப்சிக்கார்டு (Harpsichord) என்னும் தந்தி இசைக் கருவியில் வாசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட இசைப் பாட்டுருப்படிகளையும் அவர் படைத்தார். தனி இசைக் கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட 23 பாடல்களையும் (Concerts), 4 அரங்குத் தொடக்க நிகழ்ச்சி இசைகளையும் (Overtures), சந்த வேறுபாடுகளுடன் பாடப் படும் மூலக்கூறுபாடுடைய 33 பதங்களையும் (Sonatas), விருந்து விழாக்களுக்குரிய ஐந்து இசை மெட்டுகளையும் (Massess), நாடக இசைப் பண்புடன் கலந்த சமயச் சார்பான மூன்று புண்ணிய கதைக் கச்சேரி இசைப் பேருரைகளையும் (Oratorios) இயற்றினார். மொத்தத்தில் பாக் தமது வாழ்நாளில் 800-க்கு மேற்பட்ட சீரிய நோக்குடைய இசைப் படைப்புகளை உருவாக்கினார்.
பாக், மார்ட்டின் லூதரின் சமயக் கோட்பாட்டை ஒப்புக் கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவராக இருந்தார். அவர் ஆழ்ந்த சமயப் பற்றுக் கொண்டிருந்தார். அவர் தமது இசை திருச்சபைக்குப் பயன்பட வேண்டும் என விரும்பினார். அவருடைய இசைப் படைப்புகளில் பெருமூபாலானவை சமய இசைப் படைப்புகளாகவே இருந்தன. இசையில் புதிய வடிவங்களை உருவாக்க அவர் முயலவில்லை. மாறாக, அப்போதிருந்த இசை வடிவங்களை அவற்றின் கொடு முடிக்கே கொண்டு சென்றார்.
பாக் இறந்த பிறகு 50 ஆண்டுகள் வரை அவருடைய இசை பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தது. (எனினும், அந்தக் காலத்தின்போது வாழ்ந்த தலை சிறந்த இசை மேதைகளாகிய ஹேய்டன், மோசார்ட், பீத்தோவன் போன்றோர், பாக்கின் இசைத் திறமையை வெகுவாகப் பாராட்டினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). புதிய இசைப் பாணிகள் உருவாகி வந்தன. பாக்கின் பழம்பாணி இசை தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆயினும், 1800 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாக்கின் இசையில் மீண்டும் ஆர்வம் பிறந்தது. அது முதற்கொண்டு, பாக்கின் புகழும், செல்வாக்கும் படிப்படியாக வளரலாயின. பாக் தமது ஆயுட் காலத்தில் பெற்றிருந்த புகழை விட, சமயச் சார்பற்ற இந்தக் காலத்தில் அதிகமான புகழைப் பெற்றிருக்கிறார். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பாணியிலும், பாடற் பொருளிலும் "பத்தாம் பசலி" இசையமைப்பாளர் எனக் கருதப்பட்ட ஓர் இசையமைப்பாளர் இன்று மிகப் பெருமளவுக்குப் போற்றிப் பாராட்டப்படுவது மிகவும் விந்தையாக இருக்கிறது. இன்று அவர் பெற்றுள்ள மிகப் பெரிய புகழுக்கு என்ன காரணம்?
முதலாவதாக, இதுகாறும் தலைசிறந்தவர்களாக விளங்கிய இசையமைப்பாளர்கள் அனைவரிலும், இசை நுட்பத்தில் மிகத் தேர்ந்த வல்லுநராக அவர் பொதுவாகக் கருதப்படுகிறார். அவர் தம் காலத்திலிருந்த இசை செல்வங்கள் அனைத்தையும் நன்கறிந்திருந்தார். அவை ஒவ்வொன்றையும், முறைப்படிப் பயன்படுத்தும் திறனும் பெற்றிருந்தார். உதாரணமாக, (ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சுர இசைகளை இசைக்கும் ஓர் உற்பத்தியாகிய பண்ணிசைவுத் திறனில் பாக்கின் கலைஞரான வித்தகத்தை விஞ்சிய இசையமைப்பாளர் எவரும் அவருக்குப் பின்னர் தோன்றவில்லை). அது மட்டுமின்றி, பாக்கின் இசைப் படைப்புகளில், பல்லிய இசையொலியில் காணப்படும் வரிசைப் பொருத்தமும், பல்வகைத் தன்மையும், பாடற் பொருள்களின் இசையுடைமையும், சுர இசைகளின் பொருள் ஆழமுமூ வெகுவாகப் போற்றப்படுகின்றன.
இசையில் கருத்தூன்றிய மாணவர்களை, பாக்கின் இசைப் படைப்புகளில் காணப்படும் ஆழமும், பலதிறப் பாங்கும், மிக எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய பெரும்பாலான மற்ற இசையமைப்பாளர்களின் படைப்புக்களை விட அதிக அளவில் கவர்கின்றன. இசையில் மேற்போக்காக ஆர்வங் கொண்டுள்ள பெரும்பாலானவர்கள் பாக்கின் படைப்புக்களைப் புரிந்து கொள்வது கடினம் எனக் கருதுவர். எனினும், அவரைப் பின்பற்றுபவர்கள், ஒரு சிறிய உயர்ந்த இசை வல்லுநர் குழுவினர் மட்டும் அல்ல. பீத்தோவன் நீங்கலாக, வேறெந்த மரபு இசையமைப்பாளரின் இசைத் தட்டுகளையும் விட அதிக அளவில் பாக்கின் இசைத் தட்டுகள் விற்பனையாகின்றன. (நெடுங்காலத்திற்குப் பின்னரும் அற்ப ஆயுளில் முடியும் புகழைப் பெற்றுள்ள தற்காலிக "பாமர" இசையமைப்பாளர்களின் படைப்புக்களை விட பாக், பீத்தோவன் போன்றோரின் படைப்புகள் பெருமளவில் ஆர்வத்துடன் கேட்கப்படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது).
இந்தப் பட்டியலில் பாக்குக்கு எங்கே இடமளிக்க வேண்டும்? இவருக்குப் பீத்தோவனுக்குப் பிற்பட்ட இடமளிக்க வேண்டும் என்பர். ஏனெனில், இவருடைய படைப்புகளை விட பீத்தோவன் படைப்புகள் அதிகச் செல்வாக்குக பெற்றவை என்பது மட்டுமின்றி, இசை வரலாற்றின் போக்கை மாற்றியமைப்பதில் பாக்கைவிட அதிகத் துணிவான புத்தாக்கப் படைப்புகளை பீத்தோவன் படைத்தார் எனலாம். அதே போன்று, ஓவியக் கலையின் தலைசிறந்தவராக விளங்கிய மைக்கலாஞ்சலோவுக்கு அடுத்த படியாகவும், இலக்கிய மேதை சேக்ஸ்பியருக்கு மிகவும் பிற்பட்டும் இவருக்கு இடமளிப்பது பொருந்தும் எனவும் தோன்றும். ஆனால், பாக்கினுடைய இசையின் இறவாத் தன்மையினையும் பிற்கால இசையமைப்பாளர்கள் மீது அது பெற்றிருந்த பேரளவுச் செல்வாக்கினையும் கருதும் போது, வேறெந்த ஓவியக் கலைஞரையும், இலக்கிய மேதையையும் விட உயர்ந்த இடத்தை இவருக்கு அளிப்பதே நியாயம் எனத் தோன்றுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 59 | 60 | 61 | 62 | 63 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோகான் செபாஸ்டியன் பாக் (கி.பி.1685 - கி.பி.1750), இவர், பாக், பாக்கின், அவர், இசைப், சிறந்த, பீத்தோவன், இவருடைய, தமது, இசைத், படைப்புகளை, ஆண்டில், அல்லது, இசையில், அவருடைய, மட்டுமின்றி, இசைக், இயற்றினார், இசையமைப்பாளர், என்பது, படைப்புகளில், வேண்டும், மேற்பட்ட, பெற்றார், இரண்டு, மூன்று, இன்று, புகழ், புகழைப், இவரை, எனக், திறமை, இவருக்கு, எனினும், அடுத்த, புனித, வயதில், வாழ்நாளில், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்