முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜோசஃப் ஸ்டாலின் (கி.பி.1879 - கி.பி.1953)
ஜோசஃப் ஸ்டாலின் (கி.பி.1879 - கி.பி.1953)
சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஜோசஃப் ஸ்டாலின் ஆவார். இவருடைய இயற்பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிழுகாஷ்விலி என்பதாகும். இவர் 1879 ஆம் ஆண்டில் காக்கசிலுள்ள ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார். இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷியன் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷியன் மொழியை இவர் பின்னர் கற்றுக் கொண்டார். ரஷியன் மொழியை இவர் ஜார்ஜியன் மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார்.
ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப் 11 வயதாக இருக்கும்போது, அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார். குமரப் பருவத்தில் டிரிஃப்ளிசில் ஓர் இறைமையியல் கல்விக்கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1899 ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துகளைப் பரப்பியதற்காகக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் இவர் தலைமறைவு மார்க்சிச இயக்கத்தில் சேர்ந்தார்.1903 ஆம் ஆண்டில் மார்க்சிசக் கட்சி போல்ஷவிக் என்றும், மென்ஷவிக் என்றும் இரண்டாக உடைந்தது. ஸ்டாலின் போல்ஷவிக் பிரிவினை ஆதரித்தார். அது முதற்கொண்டு அக்டோபர் புரட்சி தோன்றிய 1917 ஆம் ஆண்டு வரை இவர் ஒரு தீவிரக் கட்சி உறுப்பினராகப் பணியாற்றினார். இந்தக் காலத்தின் போது இவர் குறைந்தது ஆறுமுறை கைது செய்யப்பட்டார். (எனினும், இவருக்குப் பொதுவாக இலேசான தண்டனையே விதிக்கப்பட்டதாலும், இவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாலும், இவர் அந்தக் கால அளவின் ஒரு பகுதியில் இரு தரப்புக் கையாளாக இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது). இந்தச் சமயத்தில் தான் இவர் "இரும்பு மனிதன்" எனப் பொருள்படும் "ஸ்டாலின்" என்ற புனைப் பெயரைச் சூட்டிக் கொண்டார்.
1917 ஆம் ஆண்டுப் பொதுவுடைமைப் புரட்சியில் ஸ்டாலின் உண்மையில் பெரும்பங்கு எதுவும் கொள்ளவில்லை. எனினும், அதற்கு அடுத்த ஈராண்டுகளில் இவர் மிகத் தீவிரமாகச் செயற்பட்டார். 1922 ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயலாளரானார். இந்தப் பதவி, கட்சி நிருவாகத்தில் மிகுந்த செல்வாக்கினை இவருக்குத் தேடித் தந்தது. இந்தச் செல்வாக்குதான் லெனின் இறந்த பிறகு (1824) ரஷியாவில் நடந்த பதவிப் போட்டியில் இவர் வெற்றி பெறுவதற்குத் தலையாய காரணமாக அமைந்தது.
லெனின் தமக்குப் பிறகு லியோன் டிராட்ஸ்கிதான் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினால் என்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், லெனின் தமது அரசியல் விருப்ப ஆவணத்தில் ஸ்டாலின் மிகவும் ஈவிரக்கமற்றவர் என்றும், அவரைத் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தார். ஆயினும், 1924 ஜனவரியில் லெனின் காலமான பிறகு, லெனினுடைய விருப்ப ஆவணத்தை இருட்டடிப்புச் செய்வதில் ஸ்டாலின் வெற்றி கண்டார். அது மட்டுமின்றி, கட்சியின் தலைமை ஆட்சிக் குழுவின் இரு முக்கிய உறுப்பினர்களாகிய லேவ் காமனேவ், கிரிகோரி ஜினோவியேவ், ஆகியோருடன் இவர் கூட்டுச் சேர்ந்து, "முக்கூட்டணி" ஒன்றை அமைத்துக் கொண்டார். இவர்கள் மூவரும் சேர்ந்து, டிராட்ஸ்கியையும், அவரது ஆதரவாளர்களையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தனர். பிறகு, அரசியலில் உட்பூசல்களில் மிகத் திறமைசாலியாக விளங்கிய ஸ்டாலின், ஜினோவியேவ், காமனேவ் ஆகியோர் மீது தம் கவனத்தைத் திருப்பி அவர்களையும் தோற்கடித்தார். பதவிப் போட்டியில், 'இடதுசாரி எதிர்க் கட்சி'யினரை அதாவது ஜினோவியேவ், காமனேவ், டிராட்ஸ்கி மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தோல்வியுறச் செய்த பிறகு, ஸ்டாலின் தமது முக்கிய அரசியல் திட்டங்களைச் செயற்படத்தினார். அதன் பின், ஸ்டாலின் தம்முடைய பழைய கூட்டாளிகளாகிய வலது சாரிப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களை ஒழித்துக் கட்டுவதில் முனைந்தார். அவர்களையும், விரைவிலேயே தோற்கடித்தார். 1930 களின் தொடக்கத்தில், இவர் சோவியத் ஒன்றியத்தின் தன்னிகரில்லாச் சர்வாதிகாரியானார்.
இந்த அதிகாரத் தலைமை பீடத்தில் அமர்ந்து கொண்டு, ஸ்டாலின் 1934 ஆம் ஆண்டில் தொடங்கி, கட்சியிலிருந்து விரும்பத்தகாதவர்களைக் கழித்தொதுக்கும் களையெடுப்பு நடவடிக்கைகளை ஈவிரக்கமின்றி மேற்கொண்டார். அந்தக் களையெடுப்பின்போது, பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரியும், ஸ்டாலினுடைய ஆலோசகருமான செர்ஜி கிரோவ் 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். கிரோவைக் கொல்வதற்கு ஸ்டாலினே ஆணையிட்டார் எனக் கூறுவர். கிரோவை ஒழித்துக் கட்டுவதற்காகவும், மிக முக்கியமாக, தொடர்ந்து நடந்த களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு சாக்குப் போக்காகவும், கிரோவை அவர் கொல்லும்படி செய்ததாகவும் கருதப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில், 1917 ஆம் ஆண்டுப் புரட்சியின் போதும், லெனின் ஆட்சியின் போதும் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்தவர்களில் ஏராளமானோர் மீது ஸ்டாலின் அரசுத் துரோகக் குற்றஞ்சாட்டி,
தூக்கிலிடச் செய்தார். அவர்களில் சிலர் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த விசாரணைகளில் பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தாமஸ் ஜெஃபர்சன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோதிலும், சுதந்திரப் பிரகடனத்திலும், அரசமைப்புச் சாதனத்திலும் கையொப்பமிட்ட தலைவர்களில், பெரும்பாலோரைக் கைது செய்து, அவர்கள் அனைவர் மீதும் அரசுகத் துரோகக் குற்றஞ்சாட்டி, பகிரங்க விசாரணைகளில் அவர்களை, குற்றத்தை ஒப்புக் கொள்ளும் படிச் செய்து, அவர்களை தூக்கிலிட்டிருந்தால் எப்படியிருந்திருக்குமோ அப்படியிருந்தது ஸ்டாலினுடைய இந்தச் செயல். 1938 ஆம் ஆண்டில் முந்தைய களையெடுப்புகளை தலைமை தாங்கி நடத்திய ஜென்ரிக் யாகோடா என்பவர் கூட விசாரணைக்குக் கொணரப்பட்டார். அவரும் தாம் அரசுத் துரோகம் செய்ததாக ஒப்புக் கொண்டார். பின்னர் முறைப்படித் தூக்கிலிடப்பட்டார். யாகோடாவுக்குப் பிறகு, அந்தப் பதவிக்கு வந்த நிக்கோலாய் யெஷாவ் என்பவரூம் அதே கதிக்கு ஆளானார்.
1930 களில் தொடங்கிய களையெடுப்பு நடவடிக்கைகள், பொதுவுடமைக் கட்சி முழுவதிலும், சோவியத் இராணுவத்திலும் நீடித்தன. இந்தக் களையெடுப்பு, முக்கியமாக பொதுவுடமை எதிர்ப்பாளர்களுக்கோ, புரட்சி எதிர்ப்பாளர்களுக்கோ எதிராக மேற்கொள்ளப்படவில்லை. (லெனினுடைய ஆட்சி காலத்திலேயே பொதுவுடைமை எதிர்ப்பாளர்களும், புரட்சி எதிர்ப்பாளர்களும் ஒடுக்கப்பட்டு விட்டனர்). மாறாக, பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராகவே இக்களையெடுப்புகள் நடைபெற்றன. ஜார் மன்னரின் காவலர்கள் கொன்றவர்களின் எண்ணிக்கையைவிட ஸ்டாலின் அதிகம் கொன்றார் என்று சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டில், கட்சிகயில் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பிந்திய களையெடுப்புகளில் கொல்லப்பட்டனர். நாட்டுக்குள்ளேயே செல்வாக்கு மிக்கவர்கள் சுதந்திரமான அதிகார பலத்தை உருவாக்கிக் கொள்வதைத் தடுப்பதே ஸ்டாலினுடைய இந்தக் களையெடுப்பு நடவடிக்கையின் அடிப்படை நோக்கமாக இருந்தது என்பது தெளிவாகப் புலனாகிறது. இந்தக் களையெடுப்பு உச்சக் கட்டடத்தை எட்டியிருந்த போதுதான், சோவியத் ஒன்றியத்திற்குப் புதிதாக பெயரளவிலான மக்களாட்சி அரசமைப்பை ஸ்டாலின் அறிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் செயற்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளில் முக்கியமானது "கட்டாயக் கூட்டு வேளாண்மை" ஆகும். இந்தக் கொள்கை, குடியானவர்களிடம் செல்வாக்குப் பெறவில்லை. பெரும்பாலானவர்கள் இக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தார்கள். எனினும், 1930 களில், இக் கொள்கையை எதிர்த்த இலட்சக்கணக்கான குடியானவர்கள், ஸ்டாலின் ஆணைப்படி கொல்லப்பட்டனர், அல்லது உணவின்றிப் பட்டினியால் சாகும்படி விடப்பட்டனர். இறுதியில், இவரது கொள்கையே செயற்படுத்தப்பட்டது. எனினும், அது முதற்கொண்டு, பொருளாதார நோக்கில், சோவியத் வேளாண்மை பற்றாக்குறையாகவே இயங்கி வந்துள்ளது.
ஸ்டாலின் தீவிரமாக செயற்படுத்திய மற்றொரு கொள்கை, சோவியத் ஒன்றியத்தை விரைவாக தொழில் மயமாக்கம் பல "ஐந்தாண்டுத் திட்டங்"களின் வாயிலாக இது ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்டது. சோவியத் ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள பல நாடுகள் இந்த 5 ஆண்டுத் திட்டங்களை முன்மாதிரியாகப் பின்பற்றி வருகின்றன. ஸ்டாலினுடைய தொழில் மயமாக்கும் கொள்கைகளில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், பொதுவாக அவை மாபெரும் வெற்றி பெற்றன எனலாம். இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் ஒன்றியத்தின் ஏராளமான பொருள் வளங்கள் அழிந்து விட்ட போதிலும், அந்தப் போருக்குப் பிறகு உலகில் இரண்டாவது பெரிய தொழில் வல்லரசாக சோவியத் ஒன்றியம் உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலினுடைய தொழில் மயமாக்கும் கொள்கையேயாகும்.
1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மன் சர்வாதிகாரி ஹ’ட்லரும், ஸ்டாலினும்ள தங்கள் புகழ்பெற்ற "ஆக்கிரமிப்புத் தவிர்ப்பு" ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதற்கு இரண்டு வாரங்களுக்குள்ளேயே ஹ’ட்லர் மேற்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தார். சில வாரங்களுக்குப் பிறகு, சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்தைத் தாக்கிப் போலந்து நாட்டின் கிழக்குப் பாதியை கைப்பற்றிக் கொண்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா என்ற மூன்று சுதந்திர நாடுகள் மீதும் படையெடுக்கப் போவதாக சோவியத் ஒன்றியம் அச்சுறுத்தியது. அந்த மூன்று நாடுகளும் போரிடாமலே சோவியத்திடம் சரணடைந்தன. சோவியத் ஒன்றியத்துடன் அவை இணைத்துக் கொள்ளப்பட்டன. அதே போன்று, படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தி, ருமேனியாவின் ஒரு பகுதியையும், சோவியத் இணைத்துக் கொண்டது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய பின்லாந்து மறுத்தபோது, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து அதைக் கைப்பற்றியது. நாசி ஜெர்மனி ரஷியாவைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்தத் தாக்குதலிலிருந்து ரஷியாவைப் பாதுகாப்பதற்கு அந்த நாடுகளின் பகுதிகள் தேவைப்படுவதாகவும் அந்நாடுகளை இணைத்துக் கொண்டதற்கு ரஷியா காரணம் கூறியது. ஆனால், போர் முடிவடைந்து, ஜெர்மனி முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ரஷியா தான் ஆக்கிரமித்துக் கொண்ட நாட்டுப் பகுதிகளில் எதனையும் தன் கட்டுப்பாட்டிலிருந்த விடுவிக்கவில்லை. (ஸ்டாலினுக்குப் பின்பு பதவிக்கு வந்தவர்களும் அதை செய்யவில்லை).
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை சோவியத் படைகள் ஆக்கிரமித்திருந்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பகுதி முழுவதிலும், சோவியத் ஒன்றியத்திற்கு அடிபணியும் பொதுவுடமை அரசுகளை ஸ்டாலின் ஏற்படுத்தினார். யூகோஸ்லோவியாவில்கூட, மார்க்சிச அரசு அமைந்தது. ஆனால், யூகோஸ்லோவியாவில் ரஷியப் படைகள் இல்லாதிருந்தமையால், அந்நாடு, ரஷியாவின் கைப்பாவையாக இருக்கவில்லை. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள மற்ற பொதுவுடமை நாடுகளும், யூகோஸ்லோவியாவைப் போல் நடந்து கொள்ளாமல் தடுப்பதற்கு ரஷியாவைச் சார்ந்திருந்த அந்தப் பொதுவுடமை நாடுகளிலும், ஸ்டாலின் களையெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப் போருக்கு அடுத்த பிந்திய ஆண்டுகளில் தான் அமெரிக்காவுக்கும், சோவியத்துக்குமிடையே "மிரட்டல் போர்" தொடங்கியது. இந்த மிரட்டல் போருக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ட்ருமனும் மற்ற மேலை நாட்டுத் தலைவர்களும் ஓரளவுக்குக் காரணம் எனக் கூறப்பட்ட போதிலும், மிரட்டல் போரைத் தொடங்கி வைத்ததில் ஸ்டாலினுடைய பங்கு மிகுதி என்பதில் ஐயமில்லை.
1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சோவியத் உயர் அதிகாரிகள் மரணத்திற்குச் சதி செய்ததாக ஒரு மருத்துவர் குழு கைது செய்யப்பட்டிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. மீண்டும் ஒரு கடுமையான களையெடுப்பை மேற்கொள்வதற்கு ஸ்டாலின் போட்டுள்ள திட்டத்திற்கு ஒரு முன்னறிவிப்புப் போல் இது தோன்றியது. ஆயினும், 1953 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாளன்று 78 வயது சர்வாதிகாரி, மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் காலமாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது. செஞ்சதுக்கத்திலுள்ள லெனின் கல்லறை மண்டபத்தில் லெனின் உடலுக்கு அருகிலேயே இவரது உடலும் பக்குவப் படுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பிந்திய ஆண்டுகளில் (முக்கியமாக 1956 ஆம் ஆண்டு பிப்ரவரியில்) சோவியத் தலைமையமைச்சர் குருஷேவ் ஸ்டாலினைக் கண்டித்து ஆற்றிய சொற்பொழிவுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்துக்குள்ளேயே ஸ்டாலினுடைய மதிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது.
ஸ்டாலினுடைய குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. 1904 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்து கொண்டார். ஆனால், மூன்றாண்டுகள் இவருடைய மனைவி காசநோயால் இறந்தார். இவருடைய ஒரே மகன் குழந்தை ஜேக்கப் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியரால் சிறை பிடிக்கப்பட்டான். அவனை ஜெர்மன் கைதிகளுக்கு மாற்றாகப் பரிமாற்றிக் கொள்ள ஜெர்மானியர் முன் வந்தனர். ஆனால், அதை ஏற்றுக் கொள்ள ஸ்டாலின் மறுத்து விட்டார். ஜெர்மன் கைதிகள் முகாமிலேயே ஜேக்கப் மாண்டான். 1919 ஆம் ஆண்டில் ஸ்டாலின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவியும் 1932 ஆம் ஆண்டில் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. எனினும், தம் மனைவியை ஸ்டாலின் தாமே கொன்றதாக அல்லது கொல்லும்படி செய்ததாக வதந்திகளும் நிலவின. இரண்டாம் மனைவி மூலம் இவருக்கு இரண்டு குழந்தைகள்(ஒரு மகன், ஒரு மகள்) பிறந்தனர். இவருடைய மகன், சோவியத் விமானப் படையில் பணியாற்றினார். பின்பு ஒரு குடிகாரராக மாறி, 1967 ஆம் ஆண்டில் இறந்தார். இவருடைய மகள் ஸ்வெட்லானா, சோவியத ஒன்றியத்திலிருந்து தப்பியோடி, 1967 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றடைந்தார்.
கொடூரமான ஈவிரக்கமற்ற தன்மைதான் ஸ்டாலினது ஆளுமையில் தலையாய பண்பாகும். கனிவோ, கருணையோ, அவரை சிறிதும் பாதித்ததில்லை. அவர் அறிவு பிறழ்ந்தவரோ எனக் கருதுமளவுக்கு ஐயுறவு மனப்பான்மை கொண்டவராகவும் இருந்தார். எனினும், அவர் பேரளவுக்குச் செயலாற்றல் மிக்கவராகவும், விடா முயற்சி வாய்ந்தவராகவும், பிடிவாதக் குணமுடையவராகவும், கூர்மதி கொண்டவராகவும், மிக அரிதாக அமைந்த திண்ணிய மனம் வாய்ந்தவராகவும் திகழ்ந்தார்.
ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்த ஸ்டாலின், மிகப் பெருமளவிலான மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை விளைவித்தார். ஒரு சர்வாதிகாரி தன் தலைமுறையினர் மீது கொண்டிருக்கும் ஒட்டுமொத்த செல்வாக்கின் அளவானது அவர் ஆதிக்கம் செலுத்தும் மக்களின் எண்ணிக்கை, அவரது தனி ஆதிக்கத்தின் வல்லமை, அவர் அதிகாரத்தில் நீடிக்கும் கால அளவு ஆகியவற்றுக்கு அளவொத்ததாக இருக்கம் எனக் கொண்டால், உலக வரலாற்றில் தோன்றிய சர்வாதிகாரிகள் அனைவரிலும் முதன்மையானவர் ஸ்டாலின் எனக் கூறலாம். (சிலர் இந்தப் பெருமைக்குரியவர் சீனாவில் மா-சே-துங் என் வாதிடுவர்) ஸ்டாலின் தம் ஆயுட் காலத்தில் இலட்சக்கணக்கான மக்களை மரணத்தில் தள்ளினார் அல்லது கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பினார். (இவர் மேற்கொண்ட பல்வேறு களையெடுப்புகளின் விளைவாக எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வழியில்லை. எனினும், ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது).
எனவே, ஸ்டாலினுடைய குறுகியகாலச் செல்வாக்கு மிகப் பேரளவில் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆயினும், அவருடைய நீண்டகாலச் செல்வாக்கு எத்துணை அளவுக்கு இருக்கும் என்பதைத் தெளிவாகக் கூறுவதற்கில்லை. உதாரணமாக, ஸ்டாலின் இறந்த பிறகு, ரஷிய மக்கள் மீது இரகசியக் காவலர்கள் கொண்டிருந்த இரும்புப்பிடி பெருமளவுக்குத் தளர்த்தப்பட்டு விட்டது. அமெரிக்காவிலும், மற்ற மேலை நாடுகளிலும் தற்போதுள்ள குடியியல் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் இன்றுங்கூட சோவியத் ஒன்றியத்தில் இல்லையெனினும், ஸ்டாலின் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் லெனின் ஆட்சியில் நிலவிய சர்வாதிபத்தியத்தைவிட அதிக அளவு சர்வாதிப்பத்தியம் இன்று ரஷியாவில் நிலவுவதாகக் கூற முடியாது.
கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சோவியத் சார்புப் பேரரசின் அளாவுகை நமக்குப் பெரும் மலைப்பூட்டுகிறது. ஆனால், இந்தப் பேரரசு எத்துணை நீண்டகாலம் நீடித்திருக்கும் என்பதை ஊகித்துக் கூறுவதற்கு ஒரு வழியுமில்லை. உலக வரலாற்றில், வல்லரசு நாடுகள் தங்கள் எல்லைகளில் தங்களுக்கு அடங்கிய இடைத்தடுக்கு நாடுகளை நிறுவிய உதாரணங்கள் பல உண்டு. பொதுவாக, இத்தகைய நாடுகள் என்றென்றும் அடிமை நாடுகளாக இருப்பதில்லை. ஒன்று இவை ஆதிக்க நாட்டினால் இணைத்துக் கொள்ளப்பட்டுவிடும். அல்லது ஒரு குறுகிய வரலாற்று கால அளவில் இவை விடுதலை பெற்று விடுகின்றன. சோவியத் ஒன்றியம் தனது கிழக்கு ஐரோப்பியச் சார்பு நாடுகளை உட்கொள்ளவோ, இணைத்துக் கொள்ளவோ விரும்புவதாகத் தோன்றவில்லை. எனவே, அவை ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே பெயரளவில் மட்டுமின்றி நடைமுறையிலும் சுதந்திரம் அடைந்துவிடக்கூடும். அதே சமயம், கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா போன்ற நாடுகள் மீதான பொதுவுடமை ஆதிக்கம் ரஷிய ஆதிக்கத்தை விட நெடுங்காலம் நீடித்திருக்கலாம்.
ஸ்டாலின் ஆட்சியின் போதே சோவியத் ஒன்றியத்துடனான எல்லைகள் கணிசமான அளவுக்கு விரிவடைந்தன. எனினும், ரஷியாவின் மேற்கு எல்லைகள், பல நூற்றாண்டுகள் வரை விரிந்தும், சுருங்கியும் வந்திருக்கின்றன என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. உண்மையில், ஸ்டாலின் பிறந்த ஆண்டாகிய 1879 ஆம் ஆண்டில் ஜார்ஜ் மன்னர் ஆட்சியிலிருந்த ரஷியாவில் அடங்கியிருந்த ஆட்சிப் பரப்பைவிடக் குறைந்த அளவு ஆட்சிப் பரப்பையே இன்றைய சோவியத் ஒன்றியம் கொண்டிருக்கிறது.
ரஷியாவைத் தொழில் மயமாக்கிய பெருமைக்குரியவர் ஸ்டாலின் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், அவ்வாறு கூறுவது சற்று மிகையானது எனத் தோன்றுகிறது. முதலாவதாக ஸ்டாலின் இல்லாமலிருந்தால்கூட, சோவியத் ஒந்னறியம் தொலில் மயமாகியிருக்கும் என்பதே உறுதி. இரண்டாவதாக, சொவியத் ரஷ”யாவின் தொழில் வள்சிசியை அவர் தொடங்கி வைக்கவில்லை. (1914 ஆம் ஆண்டில் ஜார்ஜ் மன்னர் ஆட்சியிலிருந்த போதே ரஷியா உலகின் ஐந்தாவது முன்னணி தொழில் வல்லரசாக விளங்கியது).
அதே சமயத்தில், ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருந்தால், ரஷியாவில் கூட்டு வேளாண்மை முறை நடைமுறைக்கு வந்திருக்காது. இந்த வகையில் ஸ்டாலினுடைய கொள்கைகள் நிலைபேறுடைய விளைவை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பொதுவுடமை ஆதிக்கத்தைப் பரப்புவதிலும், ஸ்டாலின் முக்கியமான பங்கு பெற்றார் எனக்கூறுவர். இது ஓரளவுக்கு உண்மையேயாகும். கிழக்கு ஐரோப்பாவின் ரஷியச் சார்பு நாடுகளில் பொதுவுடமை ஆட்சி நிறுவப் பெற்றதற்கு ஸ்டாலினே காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் சீனாவில் பொதுவுடமை ஆதிக்கம் பெற்றதற்கு மா-சே-துங்கும், அவரது சகாக்களுமே காரணம். மொத்தத்தில, உலகம் முழுவதிலும், பொதுவுடமை ஆதிக்கம் எழுச்சி பெற்றதற்கு மார்க்ஸ், லெனின் ஆகிய இருவருமே மூலக் காரணம் என்று கருதலாம். எனினும் மார்க்ஸ், லெனின், மா-சே-துங் ஆகியோரைப் போன்று ஸ்டாலின் முக்கியத்துவம் வாய்ந்தவர் இல்லையென்றாலும், நாம் அத்துணை எளிதில் மறக்க முடியாத வரலாற்று வல்லாட்சியாளர்களில் - கொடூர மேதைகளில் ஸ்டாலினும் ஒருவர் என்பதில் ஐயமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோசஃப் ஸ்டாலின் (கி.பி.1879 - கி.பி.1953), ஸ்டாலின், சோவியத், இவர், ஆண்டில், எனினும், லெனின், ஸ்டாலினுடைய, பிறகு, பொதுவுடமை, அவர், இரண்டாம், இவருடைய, தொழில், களையெடுப்பு, ", காரணம், மீது, கிழக்கு, ஆண்டு, கொண்டார், கட்சி, இணைத்துக், எனக், ஒன்றியம், நாடுகள், செய்து, இந்தக், அந்தப், ஆயினும், அல்லது, உலகப், ஆதிக்கம், ஒன்றியத்தின், ஆட்சி, இறந்தார், என்பது, என்றும், பொதுவுடைமைக், ரஷியா, ரஷியாவில், என்பதில், மிரட்டல், கொள்ள, ஐயமில்லை, செல்வாக்கு, மற்ற, பிந்திய, மகன், ஜெர்மனி, அந்த, சர்வாதிகாரி, ஜெர்மன், அளவு, இரண்டு, என்பதை, பெற்றதற்கு, ஜினோவியேவ், அதற்கு, உண்மையில், அடுத்த, கட்சியின், நடந்த, இந்தப், தான், இந்தச், அளவுக்கு, ரஷியன், புரட்சி, கைது, பொதுவாக, வெற்றி, பதவிக்கு, முக்கியமாக, நடவடிக்கைகளை, ஆண்டுகளில், ஒப்புக், செய்ததாக, தொடங்கி, அவரது, அரசியல், வேண்டும், தலைமை, முக்கிய, காமனேவ், முழுவதிலும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்