முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » லூயி பாஸ்டர் (கி.பி.1882 - கி.பி.1895)
லூயி பாஸ்டர் (கி.பி.1882 - கி.பி.1895)
ஃபிரெஞ்சு வேதியலறிஞரும் உயிரியல் விஞ்ஞானியுமாகிய லூயி பாஸ்டர், மருத்துவ வரலாற்றில் தனிச் சாதனை புரிந்த தலைசிறந்த அறிஞர் என்பது உலகறிந்த உண்மை; அறிவியலுக்குப் பாஸ்டர் ஆற்றியுள்ள தொண்டு மிகப் பல. எனினும், நோய் நுண்மக் கோட்பாட்டுக்காகவும், ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்குத் தடுப்பு மருத்துவம் செய்யும் முறையைக் கண்டு பிடித்ததற்காகவுமே அவர் முக்கியமாகப் போற்றப்படுகிறார்.
கிழக்கு ஃபிரான்சிலுள்ள தோலே என்னுமிடத்தில் 1822 இல் பாஸ்டர் பிறந்தார். பாரிசிலுள்ள கல்லூரியில் இவர் அறிவியல் பயின்றார். மாணவப் பருவத்தில் இவர் தனித்தன்மை எதையும் காட்டவில்லை. வேதியியலில் இவர் "சாதாரணத் திறமை வாய்ந்தவர்" என்று தான் ஒரு பேராசிரியர் கணித்திருந்தார். எனினும், 1847 இல் இவர் டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, இந்தப் பேராசிரியரின் கணிப்பு தவறானது என்பதை பல வழிகளிலும் மெய்ப்பிக்கலானார். புளியகக் காடியின் (Tartaric Acid) உருப் பளிங்கு படிவம் (Mirror-image isomers) பற்றிய இவரது ஆராய்ச்சி, 16 ஆம் வயதிலேயே இவருக்குப் புகழ் பெற்ற வேதியியலறிஞர் என்ற பெருமையைத் தேடித் தந்தது. இதன் பின்பு இவர் நொதித்ல் (Fermentation) பற்றிய ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார். சிலவகை நுண்ணுயிரிகளின் வினை காரணமாகவே நொதித்தல் ஏற்படுவதாக இவர் மெய்ப்பித்தார். வேறு சில நுண்ணுயிர் இனங்கள் இருப்பதால் நொதிக்கும் பானங்களில் விரும்பத்தகாத பொருள்கள் சில உண்டாகும் என்பதையும் இவர் தெளிவுபடுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு விரைவிலேயே, மனிதர்களிடமும், விலங்குகளிடமும் சில நுண்ணுயிரி இனங்களினால் விரும்பத்தகாத பொருள்களும் வினைகளும் உண்டாகக் கூடும் என்ற கொள்கை உருவாக வழி வகுத்தது.
நோய் நுண்மக் கோட்பாட்டினை வகுத்தமைத்துக் கூறிய முதல் விஞ்ஞானி பாஸ்டர் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே, ஜிரோலாமோ ஃபிராகாஸ்டோரா, ஃபிரடெரிக் ஹென்லே போன்றவர்கள் இது போன்ற கருதுகோள்களைக் கூறியிருக்கிறார்கள். ஆயினும் நோய் நுண்மக் கோட்பாட்டை மிகத் தீவிரமாக வலியுறுத்திக் கூறியவர் பாஸ்டர் தான். அவர்தான் பல்வேறு பரிசோதனைகள், செயல் விளக்கங்கள் மூலம் இக்கோட்பாட்டினை மெய்ப்பித்துக் காட்டினார். இவருடைய விடா முயற்சியின் காரணமாக, இந்தக் கோட்பாடு உ ண்மையானது தான் என்பதை அறிவியல் சமுதாயம் ஏற்றுக் கொண்டது.
நோய்களை நுண்மங்கள் உண்டாக்குகின்றன என்றால் அந்த நுண்மங்கள் உடலுக்குள் செல்வதைத் தடுத்து விட்டால் நோய் வராமல் தடுத்து விடலாம் அல்லவா? எனவே, நோய் நுண்மங்களை அழிக்கும் முறைகளை மருத்துவர்கள் கையாள வேண்டும் என பாஸ்டர் வலியுறுத்தினார். அறுவைச் சிகிச்சைகளில் நோய் நுண்மத் தடுப்பு முறைகளை ஜோசப் லிஸ்டர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்ததற்கு இவருடைய கொள்கையே முக்கிய வழிகாட்டியாக அமைந்தது.
தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் (Bacteria) உணவு, பானங்கள் ஆகியவற்றுடன் கலந்து மனித உடலுக்குள் செல்கின்றன. பானங்களிலுள்ள நுண்ணுயிர்களை அழிப்பதற்கான முறையொன்றை பாஸ்டர் கண்டுபிடித்தார். முறைப்படி பாலைச் சூடாக்கி அதிலுள்ள நோய் நுண்மங்களை அழித்துத் துப்புரவு செய்வதே இந்த முறையாகும். தூய்மைக் கேடுற்ற பால், நோய்த் தொற்றுக்கு ஆதாரமாக இருப்பது இந்த முறையின் மூலம் தவிர்க்கப்பட்டது.
பாஸ்டர் தமது 50 வயதுக்குப் பிறகு, மனிதர்களையும், கால்நடைகளையும், மற்ற விலங்குகளையும் பீடித்துப் பெருமளவில் உயிர் குடித்து வந்த கரணை (Anthra) என்னும் கொடிய நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்த நோய்க்கு ஒரு குறிப்பிட்ட வகை நுண்ணுயிர் தான் காரணம் என்பதைப் பாஸ்டர் மெய்பித்துக் காட்டினார். கரணை நோயை உண்டாக்கும் நோய் நுண்மத்தின் ஆற்றல் குன்றிய இனம் ஒன்றை உற்பத்தி செய்யும் ஒரு முறையை இவர் கண்டுபிடித்தது ஒரு மாபெரும் சாதனையாக அமைந்தது. ஆற்றல் குன்றிய இந்த நோய் நுண்மத்தை கால் நடையின் உடலில் ஊசி மூலம் செலுத்தும் போது கடுமையற்ற ஒரு நோய் உண்டாகிறது. இது உயிரைக் குடிப்பதற்குப் பதிலாக வழக்கமான கடுமையான நோயைத் தாங்கிக் கொள்ளும் எதிர்ப்பு ஆற்றலைக் கால்நடைக்கு அளித்தது. இந்த முறையின் மூலமாகக் கால்நடைகளுக்குக் கரணை நோய் வருவதைத் தடுக்க முடியும் என்பதை பாஸ்டர் செயல் விளக்கங்கள் வாயிலாகத் திட்டவட்டமாக மெய்ப்பித்தார். அவரது இந்தக் கண்டுபிடிப்பு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது இந்த முறையை வேறு பல தொற்று நோய்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.
பாஸ்டர் தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வந்த நாய் வெறிநோய்க்கு (Rabies) எதிராக ஊசி மருந்து செலுத்தும் முறையினைக் கண்டுபிடித்தார். பாஸ்டரின் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்தி மற்ற விஞ்ஞானிகள், சன்னிக் காய்ச்சல் (Typhus) இளம்பிள்ளை வாதம் (Pollomyelities) போன்ற வேறு பல கொள்ளை நோய்களைத் தடுப்பதற்கான அம்மை குத்தும் முறைகளைக் கண்டுபிடித்தார்கள்.
பாஸ்டர் மிகக் கடுமையான உழைப்பாளியாக விளங்கினார். அவர் குறைந்த மதிப்புடையவராயினும், மிகவும் பயனுள்ள வேறு பல சாதனைகளையும் புரிந்தார். நுண்ணுயிர்கள், தன்னியல் உயிர்தோற்றத்தினால் (Spontaneous generation) உண்டாவதில்லை என்பதை இவருடைய பரிசோதனைகள் தாம் திட்டவட்டமாகத் தெளிவாக்கின. " ஆக்சிஜன் இல்லா உயிர் வாழ்வு!" (Anaerobiosis) என்னும் நிகழ்வினைக் கண்டுபிடித்தவர் இவர் தான். ஆக்சிஜன் இல்லாத போது கூடச் சிலவகை நுண்ணுயிர்கள் உயிர் வாழ முடியும் என்பதே இந்தக் கண்டுபிடிப்பாகும். பட்டுப் புழு நோய் குறித்து இவரது ஆராய்ச்சி பெருமளவு வாணிக மதிப்புடையதாகும். கோழி வாந்தி பேதி (Chickan Cholera) என்ற கொடிய நோயை தடுப்பதற்கான அம்மைப்பால் மருந்தினைக் கண்டு பிடித்ததும் இவரது மற்ற சாதனைகளில் ஒன்றாகும். மருத்துவத் துறையில் இத்துணை அருஞ்சாதனைகளைப் புரிந்த பாஸ்டர், 1895 இல் பாரிஸ் அருகே காலமானார்.
அம்மை நோய்க் தடுப்புக்கான அம்மைப் பால் மருந்தினைக் கண்டுபிடித்தவர் ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர். அவருடன் பாஸ்டரை ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. பாஸ்டருக்கு 80 ஆண்டுகளுக்கு முன்னரே ஜென்னர் தமது சாதனையைப் புரிந்தார். எனினும், அவருடைய சாதனை குறைந்த மதிப்புடையதேயாகும். ஏனெனில், அவருடைய முறை ஒரேயொரு நோய்க்கு எதிரான தடைக் காப்பாகத்தான் பயன்பட்டது. ஆனால், பாஸ்டர் கண்டறிந்த முறையை ஏராளமான நோய்களைத் தடுப்பதற்குப் பயன்படுத்த முடிகிறது.
சென்ற நூற்றாண்டின் மத்தியிலிருந்து - உலகில் மக்களின் ஆயுள் நீடிப்புக் காலம் இரு மடங்காகியுள்ளது. இது மனித குலத்தின் வரலாற்றில் ஒவ்வொரு மனிதனுக்கு இரு மடங்கு வாழ்வளித்த மகத்தான சாதனையாகும். நவீன மருத்துவமும் அறிவியலும் இப்போது வாழ்கின்ற மக்களுக்கு இரண்டாவது புத்துயுரளித்துள்ளன. இந்த ஆயுட்கால நீட்டிப்புக்குப் பாஸ்டரின் சாதனையே முழு முதல்காரணம் எனக் கொண்டால், இந்நூலில் அவர் முதலிடம் பெறத்தக்கவர் என்பதைத் தயக்கமின்றிக் கூறலாம். சென்ற நூற்றாண்டில் உலகில் இறப்பு வீதங்கள் வெகுவாகக் குறைந்ததற்கு, பாஸ்டர் மேற்கொண்ட அடிப்படை ஆராய்ச்சிகளே பெருமளவு காரணம். எனவே, அவருக்கு இந்நூலில் உயர் இடத்தை அளிப்பதற்குத் தடையேதுமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 101 | 102 | 103 | 104 | 105 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லூயி பாஸ்டர் (கி.பி.1882 - கி.பி.1895), பாஸ்டர், நோய், இவர், தான், என்பதை, வேறு, இந்தக், இவரது, மற்ற, தமது, உயிர், கரணை, நோய்களைத், முறையை, நுண்ணுயிர்கள், இவருடைய, அவர், பற்றிய, நுண்மக், எனினும், மூலம், ", Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்