சீசெல்சு தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இருப்பிடம்
சீசெல்சு தீவு, கிழக்காப்பிரிக்காவில் உள்ள மொம்பாசாவிற்கு 1000 மைல் கிழக்கிலும்; மடகாஸ்கருக்கு ஆறு நூறு மைல் வடகிழக்கிலும் 92 தீவுகள் அடங்கிய கூட்டமாகும். இது இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நிலப்பரப்பு 171 சதுர மைல்களாகும். மாகித் தீவின் பரப்பளவு மட்டும் 57 சதுர மைல். எந்த இடத்திலும் இத்தீவின் அகலம் ஐந்து மைல்களுக்கு மேல் இல்லை. மாகியில்தான் சீசெல்சின் தலைநகரம் விட்டோரியா உள்ளது.
தமிழர் குடியேறிய வரலாறு :
புதுச்சேரியிலிருந்து இத்தீவுக்குத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். 1770 ஆம் ஆண்டு 28 பேர்கள் சென்ற முதல் குடியேற்றக் குழுவில் 15 வெள்ளையர், 7 கறுப்பரான அடிமைகள், 5 தமிழர் சென்றதாக க. சச்சிதானந்தம் கூறுகிறார். அவர்கள் வருமாறு: ஆச்சாரி, முத்தையா, குமார்மீனாட்சி, கோவிந்தன், தொமினிக். 1783-84 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக வந்து குடியேறினர். பெரும்பாலோர் மொரீசியஸ், ரியூனியன் வழியாகவும், சிலர் நேராக புதுச்சேரித் துறைமுகத்தின் வழியாகவும் சீசெல்சுத் தீவுக்கு வந்து குடியேறினர். தஞ்சாவூர், சிதம்பரம், மாயவரம், காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி புதுச்சேரி வழியாக சீசெல்சு தீவுக்கு வந்தார்கள்.
1810-ஆம் ஆண்டு இத்தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிலும் தமிழர்கள் பெருமளவில் வந்தனர்.
தமிழரின் இன்றைய நிலை
சீசெல்சில் இன்றுள்ள மொத்த மக்களுள் இந்தியர் எனக் கணிக்கப்படுவோர் 5 விழுக்காட்டினர் மட்டுமே. இவர்களுள் 10-15 குஜராத்திக் குடும்பங்களைத் தவிர எஞ்சியவர் யாவரும் தமிழர்களே. சுமார் 7500 தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனாலும் தமிழ்ப் பெயர்கள் தாங்கிய சீசெல்சு மக்களின் தொகை 30 விழுக்காடு வரை இருக்கலாம்; சுமார் 17,000 திருமணங்கள் சீசெல்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 770 திருமணங்கள் தமிழ்ப் பெயர் உடைய மண மகனையோ, மணமகளையோ கொண்டன என்கிறார் க. சச்சிதானந்தம்.
சமயம் :
தமிழர்கள் வீடுகளிலேயே வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். 1984-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் நாள் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் இருக்கும் குவன்சி தெருவில் ஒவ்வொரு ஞாயிறும் காலை 8 மணிக்கும், மாலை 7 மணிக்கும் வழிபாட்டு முறைக் கூட்டம் கூடும். ஞாயிறு காலையிலும், விசேச நாட்களிலும் விநாயகர், நடராசர் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, திருவிளக்குப் பூசை, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கந்தசஷ்டி, திருவெம்பாவை நாள், தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ்ப்புத்தாண்டு முதலியவற்றை இச்சங்கம் கொண்டாடுகிறது. 1985-ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக நிலம் இச்சங்கத்தினால் வாங்கப்பட்டுள்ளது.
குடும்ப உறவுகள் :
தமிழர்கள் சீசெல்சு சென்ற காலத்தில் பெண்களை அழைத்துச் செல்லாததால் ஆப்ரிக்க பெண்களையே தமிழர்கள் மணந்தனர். அதனால் மொழியை இழக்க வழி ஏற்பட்டது. இருந்தாலும் தமிழர் என்பதற்கடையாளமாக இருப்பது சாதி பெயர்தான். ஆசாரி, செட்டி, பிள்ளை, நாயுடு, நாயக்கன், படையாட்சி என்ற சாதி வால்கள் இல்லாத தமிழர் எண்ணிக்கை குறைவு. இவர்களில் பிள்ளை, செட்டி இரண்டும் மிகவும் புழக்கத்தில் உள்ளன. சாதிப் பெயரல்லாத தமிழரை ஆப்ரிக்கராகவோ, பிரஞ்சுக்காரராகவோ கருதுவார்கள். வெள்ளைக்கார குடும்பங்கள் கூட தம் மூதாதைத் தமிழரின் சாதிப் பெயர் பெருமையைப் பேசி மெய் சிலிப்பார் கள் என்கிறார் க. சச்சிதானந்தம்.
சீசெல்சு தமிழ் சைவ, வைணவக் குடும்பங்களில் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகள் அனைத்தும் கத்தோலிக்க முறையிலேயே நடத்தப்படுகின்றன.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீசெல்சு தீவில் தமிழர் - Tamils in Seychelles - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், சீசெல்சு, தமிழர்கள், நாடுகள், வாழும், ஆண்டு, தீவில், தகவல்கள், மைல், தமிழ்நாட்டுத், சச்சிதானந்தம், பெயர், என்கிறார், நாள், திருமணங்கள், தமிழ்ப், எனக், சுமார், கோயில், சங்கம், பிள்ளை, சாதிப், | , செட்டி, சாதி, மணிக்கும், விநாயகர், சீசெல்சில், தமிழரின், இத்தீவின், மொத்த, சதுர, persons, information, living, tamilnadu, tamil, seychelles, வழியாகவும், தீவுக்கு, ஆங்கிலேயர், குடியேறினர், வந்து, சென்ற, tamils, countries