கருட புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
இந்த மெய்ஞ்ஞானத்தைப் பெற்றவர்கள், எவ்வித பந்தத்திலும் ஈடுபடுவது இல்லை. இதன் எதிராக அஞ்ஞானத்தில் மூழ்கியவர்களே பிறந்து, இறந்து, பிறந்து இன்ப துன்பங்களில் உழல்கின்றனர்.
யோகம் என்பது ஆத்மாவைப் பரப்பிரம்மத்திடம் ஐக்கியப் படுத்துவதாகும். மனம், அறிவு, பொறிபுலன்கள் ஆகியவற்றை அடக்கி ஒருவழிப் படுத்துவதே யோகமாகும். யோகம் ஆறு படிகளைக் கொண்டது. மூச்சை அடக்கி, பிறகு விடுவது பிராணாயாமம் என்ற முதல் படி. திரும்பத் திரும்ப மந்திரத்தைச் சொல்வது ஜபம் என்ற இரண்டாவது படி ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மூன்றாவது படியாகிய பிரத்யாகாரம். குறிப்பாக ஒரு பொருளினை நினைத்து தியானம் செய்வது நான்காவது படியாகிய தியானம். இது தொடர்ந்து செய்யப்பட்டு மனத்தை அப்பொருளில் நிறுத்துதல் ஐந்தாவது படியாகிய தாரணை எனப்படும். எப்பொருளைக் குறித்துத் தவம் செய்யப்படுகிறதோ, அப்பொருளே எங்கும் காணப்படின், அதுவே ஆறாவதும், இறுதியும் ஆன சமாதி என்ற படியாகும். இந்நிலையிலேயே ஆத்மாவும், பரப் பிரம்மமும் ஒன்றாக ஐக்கியமாகிறது.
இந்த மெய்ஞ்ஞானம் பெற்ற பொழுது ஒரு விடுதலை உணர்ச்சியும், சுதந்திர உணர்ச்சியும் மிகுதியாகக் கிடைக்கின்றன. இந்நிலை வரும்பொழுது அதுவரை வாழ்ந்த அஞ்ஞான வாழ்க்கை ஏதோ ஒரு தூக்கம் போன்று காணப்படும். உலகியலில் கிடைக்கும் இன்ப துன்பம் இரண்டுமே ஆத்மாவிற்குச் சம்பந்தமில்லாதது, தொடர்பில்லாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். புகையில்லாது பிரகாசமாக எரிகிறது. மாயை என்ற புகைப்படலம் நீக்கப்பட்ட பொழுது, ஆத்மா சுயம்பிரகாசமாக விளங்குகிறது. ஆயிரம் யாகங்கள் செய்து புண்ணியத்தைச் சேர்ப்பதைக் காட்டிலும், இந்த மெய்ஞ்ஞானம் பெறுதல் மிக மிகச் சிறப்புடையதாகும்.
இதனை அடுத்து கருட புராணத்தின் உத்திர காண்டம் தொடங்குகிறது. லோமஹர்ஷனரைப் பார்த்து முனிவர்கள் பின்வருமாறு கேட்டனர். 'லோமஹர்ஷனரே! ஒரு உடம்பு நீங்கியவுடன் ஆத்மா மற்றோர் உடம்பினுள் புகுந்து விடுகிறது என்று சொன்னிர்கள்.
"நீங்களே உடம்பைவிட்டு நீங்கிய உயிர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, நரகத்தில் துன்பம் அனுபவித்து விட்டுப் பிறகு மற்றொரு உடம்பில் புகுவதாகக் கூறுகிறீர்கள். இந்த இரண்டு கூற்றுக்களாலும் நாங்கள் குழப்பம் அடைந்துள்ளோம். தயவு செய்து எங்கள் குழப்பத்தைப் போக்க வேண்டுகிறோம்.”
இதைக் கேட்ட லோமஹர்ஷனர், “குழப்பம் வேண்டாம். கருடனுக்கும், விஷ்ணுவுக்கும் நடந்த உரையாடலை இதோ கூறுகிறேன், கேளுங்கள்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 8 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, படியாகிய, அடக்கி