ஜென் கதைகள் - மகத்தான திருப்பம்
நள்ளிரவு நேரம். உலகே உறங்கும் பொழுதில் அந்த ஜென் குரு ஞான விசாரம் செய்கிற நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் திருடன் ஒருவன் அவருடைய அறைக்குள் நுழைந்தான். கூரிய கத்தியைக் காட்டி ‘பணம் கொடு' என்று மிரட்டினான்.
உடனே குரு ‘ நான் வேலையாய் இருப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதோ அந்த மேஜையில் பணம் இருக்கிறது எடுத்துப் போ' என்று கூறிவிட்டு புத்தகத்தை படிக்கத் தொடங்கினார்.
திருடன் மேஜையில் இருந்து பணத்தை எடுத்த போது ‘ நாளைக்கு எனக்கு செலவிருக்கிறது கொஞ்சம் பணத்தை எனக்காக வைத்துவிட்டுப் போ என்றார் குரு.
எதுவுமே நடக்காதது போல அமைதியாய் இருந்த ஒருவரை அப்பொழுதுதான் திருடன் முதன் முதலாக பார்த்தான். ஆச்சரியத்தோடு கொஞ்சம் பணத்தை வைத்து விட்டுப் போனான்.
சில நாளில் வேறோர் இடத்தில் திருடிய போது குருவின் பணத்தை திருடியதையும் காவலரிடம் ஒப்புக்கொண்டான் திருடன். அந்த வழக்குத் தொடர்பாக காவல் அதிகாரி திருடனை அழைத்துக் கொண்டு குருவிடம் வந்தார். ‘இவன் உங்களிடம் திருடியதாக சொல்கிறானே' என்று கேட்டார்.
‘இவன் திருடவில்லை தன்னுடைய கஷ்டத்தை என்னிடம் சொன்னார். நான் பணம் கொடுத்து அனுப்பினேன்' என்று பதிலளித்தார் குரு.
மற்ற திருட்டுகளுக்காக சிறைத்தண்டனை அனுபவித்தத் திருடன் பிறகு அந்த குருவிடமே வந்து தங்கி அவரது சீடராக பணி புரிந்தான்.
பணத்திருட்டு என்பது சின்ன விசயம்தான். ஆனால் காவல் அதிகாரியிடம் குரு சொன்னது சிந்திக்கத் தக்கது. அவருடைய ஒருவார்த்தை திருடனுடைய வாழ்க்கையில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மகத்தான திருப்பம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - திருடன், குரு, பணத்தை, அந்த