சத்ய சோதனை - பக்கம் 547
இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல. இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமானதாக நிரூபிக்கப்பட்டு விட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால், சத்தியத்தை வற்புறுத்தி வந்த நான், தெய்வீகமான கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டேன். இச்செய்கையின் நினைவு இன்னும் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டிருப்பதோடு எனக்கு மனச் சஞ்சலத்தையும் உண்டாக்கி வருகிறது. ஆட்டுப் பால் சாப்பிடுவதை எப்படி விட்டு விடுவது என்பதைக் குறித்துச் சதா சிந்தித்தும் வருகிறேன். ஆனால், சேவை செய்ய வேண்டும் என்ற மிகுந்த, அடக்கமான ஆசை எனக்கு இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறது. அதிலிருந்து விடுபட இன்னும் என்னால் முடியவில்லை.
அகிம்சை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவுள்ள என்னுடைய ஆகார சோதனைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவை என் மனத்திற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், நான் ஆட்டுப்பால் சாப்பிட்டு வருவது வாக்குறுதியை மீறியதேயாதலால், அகிம்சையை ஒட்டிய ஆகார வகையில் அல்ல, சத்திய வகையில், இன்று எனக்கு அதிகச் சங்கடமாக இருந்து வருகிறது. அகிம்சையின் லட்சியத்தைவிட சத்தியத்தின் லட்சியத்தையே நான் நன்றாகப் புரிந்துகொள்ளுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சத்தியத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பை நான் விட்டுவிடுவேனாயின், அகிம்சையின் புதிரை அறிந்துகொள்ள என்னால் என்றுமே முடியாது என்பதை அனுபவம் எனக்குக் கூறுகிறது. மேற்கொள்ளும் விரதங்களை, அதன் சொல்லுக்கும் பொருளுக்கும் ஏற்ப நிறைவேற்றி வைக்க வேண்டியது, சத்தியத்தின் லட்சியத்திற்கு அவசியமாகிறது. இந்த விஷயத்திலோ, என் விரதத்தின் பொருளை அதன் ஆன்மாவைக் கொன்றுவிட்டு அதன் வெளித்தோற்றத்தை மாத்திரமே அனுசரிக்கிறேன். எனக்கு இதுதான் வேதனையளிக்கிறது. ஆனால், இதை நான் தெளிவாக அறிந்திருந்தும், நேரான வழி என் முன்னால் எனக்குத் தென்படவில்லை. இன்னும் சொன்னால், நேரான வழியைப் பின்பற்றுவதற்கு வேண்டிய தைரியம் எனக்கு இல்லை. அடிப்படையில் இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஏனெனில், எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது. ஆகவே, ஆண்டவனே! எனக்கு நம்பிக்கையைக் கொடு” என்று
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 545 | 546 | 547 | 548 | 549 | ... | 604 | 605 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனக்கு, நான், இன்னும், வருகிறது, அதன், ஆனால், வேண்டும், அல்ல, பால், என்ற - Sathya Sothanai - சத்ய சோதனை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்