முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…
அர்த்தமுள்ள இந்துமதம் - குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…
செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு.
உடம்பிலே உஷ்ணக் கோளாறு வராமல் இருக்க இதுவே ஒரே வழி.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மோர் சாதமோ, தயிர் சாதமோ சாப்பிட விடமாட்டார்கள்.
குளிர்ச்சியாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போது மேலும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்பார்கள்.
தாய் தந்தையின் சுவை உணர்ச்சிதான் குழந்தையைப் பற்றிக் கொள்கிறது. அதனால்தான் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பத்தியமாக இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும் பெற்றோர் உணவு முறையைக் கட்டுப்பாடாகக் கடைப்பிடித்தால், குழந்தைக்கும் அதே பழக்கம் வரும்.
அதோடு உணவு நேரத்தைப் பற்றிய உணர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்.
காலையில் ஆறு மணியடித்தால், `ஆறு மணி, ஆறு மணி எழுந்திரு’ என்று எழுப்ப வேண்டும்.
காலைக் கடன்களை முடிக்க வைக்க வேண்டும்
எட்டு மணியடித்ததும், `எட்டு மணி, எட்டு மணி பலகாரம்’ என்று அவசரப்படுத்த வேண்டும்.
பள்ளிக்குச் சென்று திரும்பியதும், `ஒரு மணி, ஒருமணி’ என்று சாப்பாட்டுக்கு அவசரப்படுத்த வேண்டும்.
இரவிலே `எட்டு மணி, எட்டு மணி’ என்று, துரிதப்படுத்த வேண்டும்.
பல வருஷங்கள், இந்த மணியைப் பற்றிய உணர்ச்சி ஒரு குழந்தைக்குப் படிந்து விட்டால், உடம்புக்கே இது பழக்கமாகி விடும்.
அகால உணவை அந்த உடம்பு ஏற்க மறுக்கும்.
காலம், ஆரோக்கியமான உணவு, அதன் அளவு இந்த மூன்றையும் குழந்தையின் உடற் பழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.
படிப்பு என்பது, இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு வரும்; சில குழந்தைகளுக்கு வராது. வராத குழந்தையை உதைத்துப் படிக்க வைப்பது பயன் தராது.
`படிக்காவிடில் வாழ்க்கை இருண்டு போகும்’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம், கல்வியைப் பற்றி ஒரு உணர்ச்சியை உண்டாக்கலாம்.
ஒழுங்கான பழக்க வழக்கங்களை மட்டும் ஒரு குழந்தைக்கு உண்டாக்கி விட்டால், பிறகு அது எந்தத் துறையில் ஈடுபடுவதையும் அனுமதித்து விடலாம். ஏதாவது ஒரு துறையில் அது முன்னேறி விடும்.
பின்னாளில் அதற்கு வரக்கூடிய உடல் துன்பம் மனத் துன்பம் இரண்டில் இருந்தும், பெற்றோர் அந்தக் குழந்தையை ஓரளவு காப்பாற்றிவிட முடியும்.
`வறுமை நிறைந்த வீட்டில் பெரும்பாலும் அகால நேரத்தில்தானே உணவு கிடைக்கும்’ என்ற கேள்வி எழும்.
அகாலத்தில் கிடைக்கும் உணவைக் கூடச் சூடாக்கிக் காலத்தில் சாப்பிடப் பழக்க வேண்டும்.
`கல்வி கற்க முடியாதே’ என்பீர்கள்.
வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.
நான் சொல்வது நம்மால் ஆகக்கூடிய காரியங்களை மட்டுமே.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேண்டும், என்று, உணவு, எட்டு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்