திணைமாலை நூற்றியைம்பது - ஆறாம் நூற்றாண்டு
பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அகநூல்களுள் பெரியது இதுவே. குறிஞ்சி முதலான அகத்திணை ஒழுகலாறுகளை வரிசைப்படுத்தி மாலைபோலத் தொகுத்து அமைத்தமையால் திணைமாலை ஆயிற்று. பாடல் எண்ணிக்கையால் திணைமாலை நூற்றைம்பதாயிற்று. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனத் திணை வரிசை அமைந்துள்ளது. ஒவ்வொரு திணைக்கும் முப்பது செய்யுட்கள் அமைந்திருத்தல் முறை. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லை என்னும் திணைகள் தலைக்கு 31 செய்யுட்களைப் பெற்றுள்ளன. மூன்று செய்யுட்கள் மிகைப்பாடல்களாகக் கருதத்தக்கனவாகும். இதிலுள்ள 153 செய்யுட்களுக்கும் பழைய உரை காணப்படுகிறது.
இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமணர். மதுரையைச் சேர்ந்த தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்று இவர் அறியப்படுகிறார். தலைவியை, கோடாப்புகழ் மாறன் கூடல் அனையாள் (4) என இவர் குறித்தலால் இவர் மதுரையின்பாலும் பாண்டியன்பாலும், பேரன்புடையவர் என்பது உணரப்படும்.
இந்நூலின் மூன்று செய்யுட்களில் மாந்தர் நல்ல நாள் பார்த்துத் தம் கடமையாற்றுவது பற்றிய குறிப்புண்டு. (46, 52, 54) இவர் கணியர் என்பது இதனால் தெளியப்படும்.
அளகம், வகுளம், பாலிகை, சாலிகை, சுவர்க்கம், அலங்காரம் முதலிய வட சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நூலின் எட்டாம் செய்யுளில் காமவேளின் அம்புகள் ஐந்து என்ற குறிப்புள்ளது.
கடலுக்கும், கானலுக்கும் முறையே மாயவனும் பலராமனும், உவமையாகக் கூறப்பட்டுள்ளனர். (58) அவ்வாறே இருளுக்கும், நிலவுக்கும் இக்கடவுளர் உவமையாக்கப்பட்டுள்ளனர். (96, 97) இப்பிறவியில் செய்த நன்மை, தீமைகளின் பயன்களை அடுத்த பிறவியில் துய்ப்பர் என்ற நம்பிக்கைக்கு மாறாக, அப்பயன்களை இப்பிறவியிலேயே துய்க்க வேண்டும் போலும் என்ற கருத்தை இவர் வெளியிடுகிறார்.
இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும் உம்மையே ஆம் என்பார் ஓரார் காண் (123) |
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம், கலித்தொகை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலான நூல்களின் கருத்துக்களோடு ஒத்த பகுதிகளை இந்நூலில் காண முடிகிறது. இதனால், இந்நூல் காலத்தால் பிற்பட்டது என்ற உண்மை புலப்படுகின்றது.
இந்நூலுக்கு 127 ஆம் செய்யுள் வரை பழைய உரை கிடைக்கிறது. எஞ்சியவற்றுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் உரையாசிரியர்கள் பலராலும் மேற்கோளாகக் காட்டப்பட்ட சிறப்புக்குரியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றியைம்பது - Tinaimalai Nurru Aimpatu - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திணைமாலை, இவர், நூற்றியைம்பது, நூற்றாண்டு, ஆறாம், தமிழ்நாட்டுத், குறிஞ்சி, இந்நூலின், நூல்கள், தகவல்கள், தமிழ், இலக்கிய, பழைய, பெற்றுள்ளன, மூன்று, nurru, என்பது, | , இந்நூல், இதனால், செய்யுட்கள், tinaimalai, நெய்தல், list, literatures, tamil, century, tamilnadu, முதலான, aimpatu, information, முல்லை