கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
குருதி கொப்பளித்தது; அதில் அவள் நீராடினாள். செக்கர் வானம் தரையில் சாய்ந்ததைப் போல அவள் தரையில் விழுந்தாள். மை வண்ண அரக்கி, செவ் வண்ணச் சிலையாக நிலை மாறினாள். கறுப்பி என்று பேசப் பட்டவள் செவ்வலரி மலரானாள். மண் சிவந்தது; அதில் அவள் கண் சிவந்து துடித்துக் கதறினாள்; அந்த ஒலி யானையின் பிளிறல்போல் நாற்புறமும் சிதறியது. இராவணனது கொடிக் கம்பம் சாய்ந்ததைப் போல இந்தக் கொடிய கம்பம் கீழே விழுந்தது. இராவணன் அழிவை முன் கூட்டி அறிவிப்பதுபோல் இந்தச் சாய்வு காணப் பட்டது.
மக்கள் புரட்சி முன் கொடுங்கோல் மன்னன், ஆட்சி இழந்து வீழ்ச்சி உற்று அலங்கோலம் அடைவதைப் போல இக்கோர அரக்கி பிணக்கோலம் கொண்டாள்; இதைக் கண்ட வானவர் ஆரவாரித்தனர்; மகிழ்ச்சி அடைந்தனர். தீமை அழியவும், அறம் தழைக்கவும் இராமன் சரம் செயல்பட்டதை அறிந்து அவர்கள் ஆசி கூறினர்.
“மாவீரன்” இவன் என்று தேவேந்திரன் பாராட்டினான். தேவர்கள் தெய்வப் படைக் கருவிகள் சிலவற்றை ஏற்கெனவே விசுவாமித்திர முனிவரிடம் ஒப்படைத்து இருந்தனர்; அவற்றைத் தக்கவனிடம் சேர்க்கச் சொல்லி அறிவித்திருந்தனர்; “தக்கோன் இவனே” என்று சொல்லி மிக்கோன் ஆகிய முனிவரிடம் “அப்படைகளை இராமனிடம் தருக” என்று அறிவித்தனர்.
மாமுனிவனும் தேவர்களின் ஏவல் கேட்டுக் காவல் மன்னன் ஆகிய இராமனுக்குப் படைக் கருவிகளைத் தந்தான்; அவற்றோடு எய்யும் ஆற்றையும் கற்பித்தான். அரிய படைப்பயிற்சி அவனுக்குக் கிடைத்தது. ஆற்றல்மிக்க படைக் கருவிகள் அவனை அடைந்தன.
தவவேள்வி
தாடகை தரையில் பட இராமன் வில்லை வளைத்தான்; இது அவனுக்கு வெற்றியைத் தந்தது; அவன் வீரம் பாராட்டப்பட்டது; எனினும், “அவன் ஒரு பெண்ணைக் கொலை செய்தான்” என்ற பெரும் பழியும் அவனைச் சூழ்ந்தது.
இதைக் கூனி கைகேயிடம் உரையாடலில் குறிப்பிடுகிறாள். இராமன் பெருமையை உலகம் பேச, அவன் சிறுமையைக் கூனி ஏசக் காண்கிறோம். “தாடகை என்னும் தையலாள் படக் கோடிய வரி சிலை இராமன்” என்று வன்பழிக் கூறி கைகேயிக்கு அவன்பால் உள்ள அன்பை அழிக்கிறாள் கூனி.
தாடகையின் வீழ்ச்சி, அரக்கர்களின் தாழ்ச்சிக்கு ஆரம்பநிலை; அவர்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி, இனி அடுத்து அவள் மைந்தர்கள் சுபாகுவும் மாரீசனும் இராமனை எதிர்க்கின்றனர். அதற்கு உரிய சூழல் உருவாகியது.
வேள்வி காத்தமை
கடமையை முடித்துக் கொண்டு காகுத்தன், அந்த இடத்தை விட்டுச் சில யோசனை தூரம் நடந்து சென்றான். மூவரும் அழகிய பசுஞ்சோலை ஒன்றனைக் கண்டனர். அதன் பழைய வரலாறு மாமுனிவன் கூற, இருவரும் செவிமடுத்தனர். “அந்த இடத்தில் திருமால் இருந்து தவம் செய்தார்” என்ற கதை பேசப்பட்டது.
அதே இடத்தில்தான் மாவலி என்ற மன்னனும் ஆண்டு வந்தான் என்பதும் அறிவிக்கப்பட்டது. வள்ளல் ஒருவன் அழிந்தான் என்பது கேட்கப் புதுமையால் இருந்தது. தீயவர்கள் அழிவதும் நல்லோர்கள் வாழ்வதும் அறத்தின் ஆக்கம் என்று கூறுவர். கொடை வள்ளலாக வளர்ந்தவன்; புகழின் எல்லையில் நின்றவன்; அவனை ஏன் திருமால் காலால் மிதித்து மாய்க்க வேண்டும்?
நல்லது செய்தாலும் ஆணவம் கூடாது; அடக்கம் காட்டி இருக்க வேண்டும். ஈகை என்பது மற்றவர்கள் தேவை அறிந்து அவர்கள் குறையைப் போக்குவது. உடையவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுதல், அவர்கள் கடமையாகும். மேகம் மழை பெய்கிறது என்றால், மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று அது எதிர்பார்ப்பது இல்லை; அது தன் கடமையைச் செய்கிறது. “மாரி அன்ன வண்கை” என்றுதான் புலவர்கள் வள்ளல்களைப் பாராட்டினார்கள். ஊரில் நீர்நிலை இருந்தால், அது தனி ஒருவனுக்கு மட்டும் உரியது அன்று; அதேபோலத் தான் செல்வர்களின் செல்வமும் பயன்படவேண்டும். ஈயார் தேடிய பொருளைத் தீயார் கொள்வர்; ஈட்டும் செல்வம் நாட்டுக்குப் பயன்பட வேண்டும்.
மாவலி தந்தது புகழ் கருதி மட்டும் அன்று; இதனை ஒரு யாகமாகக் கொண்டான்; அதனால் புண்ணியம் கிடைக்கிறது; அதன் விளைவு இந்திரப் பதவி என்று திட்டம் தீட்டினான்; அவன் செயலில் கண்ணியம் இல்லை; புண்ணியம்தான் இருந்தது.
தேவர்கள் வந்து திருமாலிடம் முறையிட்டனர். “இவன் புகழ் மிக்கவனாக வளர்ந்தால் விரைவில் இந்திரப் பதவியை அடைவான்; இவனை அடக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். “ஆணவம் மிக்க அவனை அவன் சொல்லாலேயே அழிக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, வாமனனாய் அவதரித்து, மூன்று அடி மண் கேட்டு, விண்ணையும் மண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை அவன் தலைமேல் வைத்து, அவனைப் பாதளத்தில் அழுத்தினார். இந்தக் கதையை அவ் இளம் சிறுவர்க்கு வளம்மிக்க தவம் உடைய முனிவர் எடுத்து உரைத்தார்.
மாவலி ஆண்ட மண் அது; அவன் மாண்டதும் அதே மண்தான்; அதனால் அந்த இடம் பெருமை பெற்றது என்பதைவிட வாமனனாய் வந்து, நெடு மாலாய் நிமிர்ந்து நின்ற இடம் அது; அதனால் அது சிறப்புப் பெற்றது. திருமாலின் திருவடி தீண்டப் பெற்றதால் அந்த இடம் ‘திவ்வியத் தலம்’ ஆயிற்று. அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடத்துக்கு இப் பெயர் அமைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், அந்த, அவள், வேண்டும், அதனால், இடம், மாவலி, அவனை, தரையில், இராமன், படைக், கூனி