கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
தான் உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவள் பன்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆயினள்.
நாட்டு மக்கள் இராமன் நலம் கண்டு வியந்தனர்.
“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று பாராட்டினர். “சீதையும் இராமனுக் கேற்ற துணைவி” என்று அவள் மாட்சிகளைப் பேசினர்.
இராமன் தம்பி இலக்குவனைக் கண்டு வியந்து பேசினர்; “தம்பியைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டினர்; அந்த நகருக்கு இவர்களை அழைத்து வந்த அருந்தவ முனிவராகிய விசுவாமித்திரருக்கு நன்றி நவின்றனர்.
திருமணம் உறுதி செய்யப்பட்டது. தசரதனுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது. இராமன் வில்லை முறித்த வெற்றிச் செய்தியையும், அவன் வேல் விழியாளை மணக்க இருக்கும் மங்கலச் செய்தியையும் கேட்டுத் தசரதனே பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டான்; நாற்பெருஞ்சேனையும், அரும்பெரும் சுற்றமும், தம் அன்பு மனைவியரும், இராமன் பின்பிறந்த தம்பியரும் அறிவுடை அமைச்சர்களும், ஆன்றமைந்த சான்றோன் ஆகிய வசிட்டரும் புடைசூழ மிதிலை மாநகரை வந்து அடைந்தான்.
மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் மடமயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் சனகன் வந்து அமர்ந்தான்; கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். மணக் கோலத்தில் வந்த மாணலம் மிக்க பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம் மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.
சீதையைப் பாராட்டினர்
பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கு பெற்ற அவள், அன்னநடையைத் தன் நடையில் காட்டினாள்; மின்னல் போல் ஒளி வீசி அவ் அரங்கினை அலங்கரித்தாள். அமுதம் போன்ற இனிமையையும் குமுதம் போன்ற இதழ்களை யும் உடைய அவ் ஆரணங்கு, அங்கிருந்தவர் கண்ணை யும் கருத்தையும் ஒருங்கு கவர்ந்தாள்.
மாடத்தில் இருந்து தான் கண்ட மாணிக்கத்தை மறுபடியும் காணும் வாய்ப்பைப் பெற அவள் விரும் பினாள். நேரில் காண அவள் நாணம் போரிட்டது; தலை நிமிர்த்திக் காண்பதைத் தவிர்த்துத் தன் கை வளையல் களைத் திருத்துவதுபோல அக் கார்வண்ணனைக் கடைக் கண்ணால் கண்டு அவன் அழகைப் பருகினாள்; மனம் உருகினாள் தன் உள்ளத்தை ஈர்த்த அத் தூயவனே அவன் என்பதை உணர்ந்தாள், “ஒவியத்தில் எழுத ஒண்ணாப் பேரழகு உடைய காவிய நாயகன் இராமன்தான் அவன்” என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். “நேர்மை தவறிய இடம் இது ஒன்றுதான் என்பதைஎண்ண” அவள் நாணம் அடைந்தாள். நாகரிகமாக அந்த நளினி நடந்து கொண்டதை அங்கிருந்த நங்கையர் பாராட்டினார்.
மணக்கோலத்தில் சீதையைக் கண்ட மாண்புமிக்க வசிட்டர், அங்கு சனகன் மகளைக் காணவில்லை; “திருமகள் தசரதன் மருமகள் ஆகிறாள்” என்பதை உணர்ந்தார். “தாமரை மலரில் உறையும் கமலச் செல்வியே அவள்” என்று அந்த முனிவர் பாராட்டினார்.
தசரதன் வரப்போகும் தன் மருமகளைக் கண்டதும் “அவள் தனக்குக் கிடைத்த வரப்பிரசாதம்” என்றே கருதினான். எத்தனையோ செல்வங்கள் பெற்றிருந்தும் அவை அவனுக்கு மன நிறைவைத் தர வில்லை; அவை செல்வமாகப் படவில்லை; அவளை மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான்; “இதுவே திரு” என்று எண்ணினான். “திரு என்பதற்கு உரு” இது என்பதை அறிந்தான்.
அவைக் கண் வந்திருந்த நவையில் தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்; இராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்; பின் தன் தந்தை சனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரும் நன்கலமாதரும் அவளைத் தெய்வம் என மதித்துப் போற்றினார்.
முனிவர் பாராட்டுரை
ஆசானாய் வந்த விசுவாமித்திரர், பொன்னொளிர் மகளைக் கண்டதும் பொலிவுபெற்ற மனத்தினர் ஆயினர். மேனகையைக் கண்டு அவள் அழகிற்குக் குழைந்து அவர் தம் தவத்தையே பரிசாகத் தந்தவர். மேனகையைக் கண்டது காதற்பார்வை; அழகு ரசனை அவரை விட வில்லை. “நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச் சிலை கிடக்கட்டும்; ஏழுமலையாயினும் இவளுக்காக இருக்கலாம்” என்று பாராட்டினார். “காதற் பெண் கடைப் பார்வையில் விண்ணையும் சாடலாம்” என்ற பாரதியின் வாசகம் இந்த மாமுனிவர் பேச்சில் வெளிப்பட்டது.
நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘அடுத்த நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது. இடையிட்ட அந்த ஒர் இரவும் காதலர் இருவர்களுக்கும் ஒருயுகமாகக் கழிந்தது. நாளும் கிழமையும் காட்டி, இளையவரைச் சேராதபடி தடுக்கும் முதியவர் செயலைச் சாடினர். மறுநாள் வருக்ைககாக எதிர்பார்த்து வாடினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவள், என்பதை, அந்த, இராமன், கண்டு, பாராட்டினார், தசரதன், சனகன், அவன், வந்த, வில்லை, வந்து, பெற்ற