கம்பராமாயணம் (உரைநடை) - பாலகாண்டம்
இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர் சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர்; “மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று; சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை; அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது. அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை; நீருக்கும் உண்டு, “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தம் சடையை விரித்து, அதன் வழியை மறைத்தார். பெட்டிப் பாம்பு போல அந்த நதி அவர் சடையில் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது; ஒரு சொட்டு நீர்கூடப் பூமியில் விழவில்லை.
என் செய்வது? பகீரதன் முயற்சி வெற்றிபெற வில்லை; பிரமணிடம் கேட்டுப் பெற்ற வரம் செயல் பட்டும் அது பாதி வழியில் தடைப்பட்டு விட்டது. பரம சிவனை அண்டிக் “கருணை காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அவர், தம் விரிசடையால் அதன் வேகத்தைத் தடுத்து, மெதுவாய்த் தம் தலைமுடியில் இருந்து தரையில் விழுமாறு அனுப்பினார். “மங்கையை பாகத்தில் வைத்த பரமன், கங்கைக்குத் தன் சிரசை இடமாகக் கொடுத்தான்” என்று உலகம் பாராட்டியது.
எடுத்த முயற்சிக்கு மற்றோர் இடையூறு அடுத்தது; வற்புறுத்திப் பெண்ணைக் கட்டி வைத்தால், அவள் முரண்டு பீடிப்பதைப் போலக் கங்கையும், வேகம் தணியாமல் ஆணவத்தோடு பாய, உலகுக்கு அழிவு நேர இருந்தது. முரட்டுக்காளை எதையும் முட்டித் தள்ளுவது போலச் சந்நு முனிவர் அமைத்து வைத்த யாக வேள்வியைக் குலைத்து அழித்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட அம் முனிவர் விழுந்த நீர் முழுவதையும் வாய் வைத்துக் குடித்து வயிற்றில் அடக்கி வைத்தார். முடக்கி விட்ட நீரால் பகீரதன் முயற்சியும் அடக்கி வைக்கப் பட்டது.
பகீரதன் அம் முனிவரை அடைந்து “அதை வெளியே விடுக” என்று கேட்டுக் கொள்ள, அவர் நீரைச் செவி வழியாய் வெளியே விட்டார். அது கடலில் சேர்ந்து, அதன் அடியில் பாதளத்தில் பாய்ந்து, எரிந்தவரின் சாம்பலைப் புனிதப்படுத்தியது. அவர்கள் ஆன்மா சாந்தி அடைந்தது. அவர்கள் உயிர் துறக்கத்தை அடைந்தது. உலகம் நன்மை பெற்றது.
முந்தையோர் பெருமைகளைக் கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர், அவற்றுள் ஒன்றாக இந்தப் பகீரதனின் கதையையும் கூறினார். இக் கதைகளைச் சொல்லி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.
அகலிகை கதை
இராமன் கைவண்ணத்தைத் தாடகை வதத்தில் அவன் வில் திறமையில் காண முடிந்தது. அவன் கால் வண்ணத்தைக் காணும் வாய்ப்பு இவனுக்காகக் காத்துக் கிடந்தது.
அகலிகை கதை, பெண்ணின் விமோசனத்தைப் பேசும் கதையாகும். அது தனிப்பட்ட ஒரு தவ முனிவன் பத்தினி கதை மட்டுமன்று; “தவறு செய்துவிட்டால் அதனை வைத்து அவதூறு செய்வது கூடாது” என்ற பாடத்தையும் கற்பிப்பது.
கற்பு என்பதற்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “அவர்கள் பிறர் நெஞ்சில் புக மாட்டார்கள்’ என்று பேசப்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு இருந்தன.
எப்படியோ இவள், மற்றொருவன் நெஞ்சில் புகுந்து இடம் பெறாவிட்டாள். ஆசை அவன் நெஞ்சில் பஞ்சினைப்போல் பற்றிக் கொண்டது. இந்திரனுக்கு ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அழகியர் பலர் இருந்தும் அவன் நெஞ்சு, இவள்பால் இளகிவிட்டது. உயர்ந்த பதவியில் இருப்பவன் உடனே தாழ்ந்து போக முடியாது; வலியப் பற்றி அவளை வம்புக்கு இழுத்து இருக்கலாம்; அகலிகை கவுதமர் மனைவி; அவர் பார்வையில் பட்டால் எரிந்து சாம்பல் ஆக வேண்டுவதுதான்; முனிவருக்குத் தெரியாமல் தனிமையில் அவளை எப்படிச் சந்திப்பது? சாத்திரத்தில் சம்பிரதாயத்தில் உருண்டு புரண்டு எழுந்தவள். அவன் பேரழகனாய் இருக்கலாம்; செல்வச் சிறப்பில் அவன் மிதக்கலாம். மன்மதனே வந்து மயக்கினாலும் அவள் ‘சம்மதம்’ என்று சொல்ல மாட்டாள். கட்டுப்பாட்டில் வாழும் அவள், தன் நெறியில் தட்டுப்பாடு காட்டமாட்டாள். என் செய்வது? அவளை ஏமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மலரினும் மெல்லிய காதல் இன்பத்தை அவன் வலியப் பெற விழைந்தான். இதனைப் பெருந்திணை என்று பெரியோர் பேசுவர்.
“இருட்டிலே அவளை மருட்டி உறவு கொள்வது” என்று உறுதி கொண்டான். கவுதமர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார்? பொழுது புலர்ந்தால்தான் கங்கைக்கு நீராடச் செல்வார்; அதற்கு முன் உள்ளே சென்றால் அவன் கள்ளத்தன்மை வெளிப்பட்டு விடும்.
பின்னிரவுப் பொழுதில் கோழி கூவுவதைப் போல இவன் குரல் கொடுத்தான். “பொழுது விடிந்து விட்டது” என்று அவர் இறைவனைத் தொழுது வழிபட உறக்கத்தினின்று எழுந்தார். தூங்குபவளைத் தட்டி எழுப்பாமல் உறங்கட்டும் என்று அவளை விட்டுவிட்டு இவர் மட்டும் கங்கைக் கரை நோக்கி அக் கங்குற் பொழுதில் நடந்தார்.
‘எப்பொழுது இந்தத் தவமுனிவர் போவாரோ’ என்று காத்திருந்த கயவன். அம் முனிவர் வேடம் கொண்டு அவள் பக்கத்தில் சென்று படுத்தான்; கரம் தொட்டான்; வண்டு தேன் உண்ண மலர் தன் இதழ்களை விரித்தது. அவள் அவனிடம் புதியதோர் இன்பம் கண்டாள். மது உண்ட நிலையில் அவள் மயங்கிவிட்டாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், அவள், அவர், அவளை, அகலிகை, நெஞ்சில், முனிவர், பகீரதன், அடக்கி, செய்வது