கம்பராமாயணம் (உரைநடை) - அயோத்தியாகாண்டம்
“அப்பம் எண்ணச் சொன்னேனே தவிர அதில் எத்தனை குழிகள் உள்ளன என்று உன்னைக் கேட்கவில்லை”.
“கடமையைச் செய்; கதைகள் பேசிக் கொண்டு இங்கு உன் மடமையைக் காட்டாதே”.
“தேரைச் செலுத்து; இராமனை இங்கு அழைத்து வா” என்று ஆணையிட்டான்.
அதற்குமேல் அங்கே அவன் நிற்கவில்லை. காற்றிலும் கூடிய வேகத்தோடு காகுத்தன் அரண் மனையை அடைந்தான்.
மனையில் இராமன், தன் மனைவியோடு உரையாடிக் கொண்டிருந்தான்; மகிழ்வு நிரம்பிய சூழலில் அவன் தன் அகமுடையாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவனிடம் என்ன சொல்வது? உண்மை சொல்வதா? மன்னன் உரைத்தை மட்டும் உரைப்பதா?
“ஆட்சி உனக்குத் தரத் தசரதன் அழைக்கின்றான் என்று கூறவில்லை. அப்படிக் கூறினால் அது மிகைப்படக் கூறுதல் ஆகும்; அதிர்ச்சியும் தருவது ஆகும். ஆசைகளைத் தூண்டிவிட்டால் அவை அணைக்க முடியாமல் போகும்; ‘செய்தி சொல்ல வந்தவன்’ என்ற தன் நிலையை மறக்காமல் செப்பினான்.
“'காவலன் உன்னைக் காண ஆவல் கொண்டுள்ளான்” என்றான்.
அவ்வளவுதான்; அவன் தன ஆருயிர்த் துணைவி யிடம் சொல்லிவிட்டுப் புறப்படவில்லை; ஆடை வேறு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று உரை ஆற்றவில்லை; எதற்கு? ஏன்? என்ற வினாக்களைத் தொடுக்காமல் உடனே அவனோடு புறப்பட்டான்.
கரிய மேகம் சூழ்ந்ததுபோல நீல நிறத்தவன் ஆகிய அழகன் நேரில் ஏறிச் சொன்றான்.
இராமனைத் தழுவிக் கொள்ளுதல்
வந்தவனைத் தசரதன் தன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான். அத்தழுவலில் புதிய பொருள் இருந்தது போலக் காணப்பட்டது. அத்தோள்கள் திண்மை உடையனவா? என்ற உண்மையைக் காண எடுத்துக் கொண்ட முயற்சி போல இருந்தது.
“நிலமகள் தன்னைச் சுமக்க வலிமை மிக்க தோள்களை நாடுகிறாள்; முதியவன் நான்; ஆட்சிச் சுமையால் தளர்ந்து வாடுகிறேன்; வளர்ந்துவிட்ட நீ வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்”.
“நொண்டிக் குதிரை எத்தனை நாளைக்கு வண்டியை இழுக்கும்; அது சண்டித்தனம் செய்வதற்கு முன் முண்டி அடித்து நீ வந்து குடை சாயாமல் தாங்க வேண்டும்.”
“மகனைப் பெறுவதற்கு எதற்காக? மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது போன்றது அன்று அது. மகனை மதலை என்பர் ஏன்? தாங்கும் சக்தி அவனுக்கு உண்டு என்பதால், ‘சுமை தாங்கி’ மகன் என்று கூறுவர்.
“மக்களைப் பெற்றவர் மகாராசர் என்கிறார்கள்; ஏன்? அவர்கள் ஆட்சியைத் தாங்க வந்து நிற்பதால்”
“பெற்றவர்க்குப் பெருங்கடமை செய்த பெருந்தகைகள் உன்முன்னோர், பகீரதன் கதை உனக்குத் தெரியாதா? செத்து மடிந்தவரின் சாம்பலுக்கு நித்திய பதவி தரக் கங்கையை வரவழைத்தான். அவன் அரிய முயற்சியை அகில உலகும் பாராட்டுகிறது.”
“செல்வம் என்றால் உலகப் பொருள்கள் அல்ல; அவை நிலையாது கைமாறும். மக்கட் செல்வம்தான் மதிப்பு மிக்க செல்வம்; அது மட்டும் அன்று; யார் பெருமகிழ்விற்கும் மதிப்பிற்கும் உடையவர் தெரியுமா?”
‘பதவியில் உயர்ந்தவன் இந்திரன்; சுகபோகங்களை அனுபவிப்பதில் அவன் தொடர்ந்து இன்பம் அடைகிறான்’ என்று கருதுகிறார்கள். ‘மோன நிலையில் இருந்து தவம் செய்யும் ஞானிகள் பேரின்ப நிலை அடைகிறார்கள்’ என்று பேசலாம். அது முழு உண்மையன்று, நன்மக்களைப் பெற்றவர்களே நானிலத்தில் நன்மதிப்புப் பெறுகின்றனர்”.
‘உன்னை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்; தோள்மேல் சுமந்து உன்னைத் துக்கி வைத்து மகிழ்ந்து இருக்கிறேன்; கல்வியும் படைப் பயிற்சியும் தந்து உன்னை மாவீரன் ஆக்கினேன்; சான்றோர் என்று உலகம் உன்னைப் புகழ்கிறது. நாட்டு மக்கள் நேசிக்கின்றனர்; சீதை கேள்வன் என்ற பெருமை உன்னைச் சார்கிறது. மணக்கோலத்தில் கண்ட நான் அரசு கோலத்தில் உன்னைக் காண விழைகின்றேன்.
“நான் காளைப் பருவத்தையும் கடக்கவில்லை; நாளை பார்த்துக் கொள்ளலாம், என்று நீ தள்ளிப் போட நினைக்கலாம். உன் சுதந்திரம் பறிபோகின்றது என்று நீ நினைக்கலாம்; சுமை மிக்க பொறுப்புகளை ஏற்பதால் சுவைமிக்க வாழ்வு நீ இழக்க நேரிடலாம் என்றும் என் வேண்டுகோளை மறுக்கலாம்; உன் விருப்பு வெறுப்பு களும் தடுக்கலாம்; நாடு உன்னை நாடுகிறது” என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அயோத்தியாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், வந்து, நான், மிக்க, உன்னைக்