சோழர் வரலாறு - சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்
பல்லவன் ஈச்சரம்: சாய்காட்டுக் கோவிலுக்கு அரை கி.மீ. தொலைவில் கடற்கரை நோக்கிப் போகும் பாதையில் இருப்பது பல்லவன் ஈச்சரம் என்னும் திருக்கோவில் ஆகும். இதுவும் பாடல் பெற்றது.கி.பி.650-லேயே இஃது இப்பெயர் பெற்றதெனின், அதற்கு முந்தியே இக்கோவில் பல்லவ அரசன் ஒருவனால் கட்டப் பெற்றதாகவோ - வழிபாடு செய்யப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ? எனவே, இக்கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய கோவிலாகும் என்பதில் ஐயமில்லை; மூல லிங்கம் பட்டை இட்டதன்று. கோவில் நகரத்தாராற் புதுப்பிக்கப் பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள பிள்ளையார் கோவில் துரபி துரங்கும் சிங்கம் வடிவில் அமைந்துள்ள அழகு பார்க்கத்தக்கது.
பூம்புகாரின் பிற்சிறப்பு: இக்கோவில் ‘பல்லவன் ஈச்சரம்’ எனப் பெயர் பெற்றமையாலும், பெரிய பல்லவ வேந்தனாகிய மஹேந்திரன் காலத்தில் இஃது இருந்தமை யாலும், அவனுக்கும் முற்பட்ட காலத்திலே இஃது இயன்றதாதல் வேண்டும். அஃதாவது இடைப் பட்ட பல்லவர் காலத்திலேனும் (கி.பி. 350-600) கட்டப் பெற்றதாதல் வேண்டும். அங்ஙனமாயின், அக்காலத்தே காவிரிப்பூம் பட்டினம் தன் பழம் பெருமையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படுகின்ற தன்றோ? என்னை? கி.பி. 450-இல் வாழ்ந்த புத்ததத்தர்காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்திருத்தலாலும், இயற்பகை நாயனார் காலத்தில் பூம்புகார் சிறப்பாக இருந்திருத்தலாலும், தேவார காலத்திலும் மாடமாளிகைகள் இருந்தன என்று சம்பந்தர் கூறலாலும் என்க. எனவே, இடைக்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலப் பல்லவர் காலத்திலும், ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முடியவேனும் பூம்புகார் சிறப்புற்ற நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை.
கடல் வாணிகம்: அயல்நாட்டு வாணிகம் சிறப்புற நடந்து வந்ததால் பல நாட்டு வாணிகர் தம் உற்றார் உறவினருடன் புகாரிற் கூடி வாழ்ந்தனர். பரிகள் மிகுதியாக வந்து இறங்கின. மிளகுப் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன; வடமலைகளிலிருந்து மணிகளும், பொன்னும், மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துகளும், மேற்கடலிலிருந்து பவளம், கங்கைச் சமவெளிப் பொருள்களும் காவிரிச் சமவெளிப் பொருள்களும் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈழத்திலிருந்து உணவுப் பண்டங்களும் கடாரத்திலிருந்து (மலேயா) பலவகைப் பண்டங்களும் மூட்டை முட்டையாக இறக்குமதி ஆயின.[43]
இச்செய்திகளைப் பெரிப்ளுஸ், என்னும் நூலுடனும், பிளைநி, தாலமி முதலியவர் வரைந்த நூல்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் நூற்செய்திகள் அனைத்தும் உண்மை என்பதை அறியலாம். ‘இந்திய நாட்டு அரசர் அந்தப்புரங்கட்கு ரோம வணிகர் ஆண்டுதோறும் அழகிய நங்கையரைக் கொண்டு செல்கின்றனர்’ என்று பெரிப்ளூஸ் ஆசிரியர் கூறியிருத்தல் காண்க.[44]இஃது உண்மை என்பதைச் சில இந்திய நாடக நூல்கள் மெய்ப்பிக்கின்றன.[45] ரோமர் தயாரித்த பட்டயத்தில் இந்தியத் தொடர்பான செய்திகளில் திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ் (முசிறி) என்பன காணப்படுகின்றன.[46] ஏராளமான ரோம நாணயங்கள் தமிழகத்தின் கீழ்க்கரை ஓரமாகக் கிடைத்தலை நோக்க, யவனர் முதலிய மேனாட்டார் இங்குத் தங்கி வாணிகம் செய்தமை நன்கு விளங்கும். ‘சீனத்திற்கும் மேற்கு நாடு கட்கும் நடந்த கடல் வாணிகத்தில் தென் இந்தியா நடுவிடமாக இருந்து பல நூற்றாண்டுகள் செழித்த வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது’ என்று கூறும் சீனர் குறிப்புகளும் நினைவு கூர்தற்குரியன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த கடல் வழி வாணிகமே உயர்ந்ததாகும். பண்டை வாணிகத்தில் ரோமப் பேரரசு ஆண்டுதோறும் இந்தியா, சினம், அரேபியா ஆகிய நாடுகட்கு ஏறத்தாழ 10,87,500 பவுன்கள் பெறத்தக்க பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து வந்தது.[47] பருவக் காற்று நிலையும் ரோமர் போக வாழ்க்கையும் கடல் வாணிகத்தைப் பெருக்கியது. இதற்கு நடுநாயகம் அலெக்சாண்ட்ரியாவாக இருந்தது. அகஸ்டஸ் பேரரசர்க்குப் பிறகு அரேபியத் துறைமுகங்கள் தம் செல்வாக்கை இழந்தன. எகிப்திற்கும் இந்தியாவிற்கும் நேரே வாணிகம் நடக்கலாயிற்று. பெரிப்ளுஸ் காலத்தில் இந்நேர்வழி உண்டாகிவிட்டது. பண்ட மாற்றம் நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து பருத்தியும் பட்டும் சிறப்பாகச் சென்றன. இவ்விரண்டும் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த தொழிற்சாலைகளில் ஆடைகளாக நெய்யப்பெற்றன. பதிலுக்குக் கண்ணாடிப் பொருள்கள், உலோகத் தகடுகள் மெல்லிய ஆடைகள் இன்னபிறவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.[48][49] இந்தியாவிற்கும் ரோமப் பெருநாட்டிற்கும் நடந்த வாணிகத்தின் சிறப்பைப் பெரிப்ளுஸ் நூலிலும் தாலமி வரைந்துள்ள நூலிலும் இருந்தே நன்கறியலாம். ரோம நாட்டிலிருந்து வரும் பொருள்களைச் சுமத்ரா, மலேயா முதலிய இடங்கட்கு மேல் கரை நாட்டிலிருந்து கொண்டு சென்றவர் தமிழரே. ஆவர். அவர்கள் அக்காலத்தில் திரை கடல் ஓடி வாணிகம் செய்தனர்.[50] இத்தகைய செழுமையான வாணிகம் அலெக்சாண்ட்ரியப் படுகொலை நிகழ்ச்சிவரை செம்மையாக நடைபெற்று வந்தது.
- ↑ 43. பட்டினப்பாலை, வரி 184-193.
- ↑ 44. Periplus Sec. 49.
- ↑ 45. Reinand’s article in Journal Asiatic, 1863, i. 301-302; K.A.N. Sastry's cholas, vol.I.
- ↑ 46. Ibid, p. 183.
- ↑ 47. Warmington’s ‘The Commerce between the Roman Empire & India’ pp. 274-276.
- ↑ 48. Rostoviziffs ‘Social and Economic History of the Roman Empire,’ p.93; Sastry’s cholas’ vol. 1, p. 102
- ↑ 49. Warmington, pp. 128-131.
- ↑ 50. Periplus, Sec. 60 and Schoff’s, notes.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும் - History of Chola - சோழர் வரலாறு - வாணிகம், கடல், இஃது, வேண்டும், நடந்த, வாணிகத்தில், பெரிப்ளுஸ், காலத்திலும், இக்கோவில், காலத்தில், பல்லவர்