சோழர் வரலாறு - பராந்தகன் மரபினர்
உத்தம சோழன் - மதுராந்தகன் (கிபி 969 - 986) : இவன் கண்டராதித்தன் மகன். இவன் அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவன் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[13]
அரசியல் : உத்தம சோழன் செப்பேட்டுத் தொகுதியால் அக்கால அரசியல் முறையை நன்கு உணரலாம். இதன் விளக்கம் ‘அரசியல்’ என்னும் பகுதியிற் கூறப்படும். இவன் காலத்தில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்னும் உயர்தர அலுவலாளன் சோழர் அரசியலில் வேலை பார்த்து வந்தான். அவன் குவலாளம் (கோலார்) என்ற ஊரினன்; கொள்ளிடக்கரையில் அப்பராற் பாடப்பெற்ற விசைய மங்கலம் பழங்கோவிலைக் கற்கொண்டு புதுப்பித்தவன். உத்தம சோழன் அவனுக்கு ‘விக்கிரம சோழ மாராயர்’ என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப் படுத்தினான். இதனால் உத்தம சோழன் ‘விக்கிரம சோழன்’ என்னும் பெயரையும் பெற்றிருந்தான் என்பது வெளியாகிறது. அவ்வலுவலாளன் இராசராசன் காலத்தில் ‘மும்முடிச் சோழமாராயர்’ எனவும் ‘இராசராசப் பல்லவராயன்’ எனவும் அழைக்கப்பட்டான்.
உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழற்கு மனைவியர் பலர் இருந்தனர். அருள் - பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்ட ரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும் சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[14] பட்டத்து அரசியார் ‘உரத்தாயன் சொரப்பையார்’ (கன்னடப் பெயர்) என்பவர். இவர் ‘அக்கமாதேவியார்’ என்றும் ‘மூத்த நம் பிராட்டியார்’ என்றும் அழைக்கப்பட்டனர். இவர் ‘திரிபுவன[15]மகாதேவியார்’ என்றும் பெயர் பெற்றனர். உத்தம சோழன் மனைவியர் அனைவரும் தம் மாமியார் பெயர் கொண்ட (தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள) ‘செம்பியன்மாதேவி’ என்னும் சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்கே பல தானங்களைச் செய்தனர். இதனால் இம்மரபினர் அப்பெருமாட்டியிடம் வைத்திருந்த அன்பு நன்கு விளங்குகிறதன்றோ? உத்தம சோழனுக்கு எத்துணை மக்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆயின், மதுராந்தகன் கண்டராதித்தர் என்பவன் ஒருவன் பெயர் மட்டும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவன் இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான்.
இதுகாறும் கூறப்பெற்ற அரசர் அனைவரும் மிகச் சுருங்கிய கால எல்லைக்குள் இருந்து மறைந்தோர் ஆவர். இவர்களது பெரு முயற்சியால் தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது. பாண்டிய நாடு சோழராட்சியிற் சேர்க்கப்படவில்லை. இவர்கட்குப் பின்வந்த இராசராச சோழனே சோழப் பேரரசன் விரிவாக்கி நிலை பெறச் செய்த பேரரசன் ஆவன்.
- ↑ 13. Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.
- ↑ 14. 494 of 1925.
- ↑ 15. புதுவையை அடுத்துள்ள ‘திரிபுவனை’ என்னும் சிற்றூர் பழங்காலத்தில் இவர் பெயராற்றான் அமைக்கப்பட்டதென்று கூறுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பராந்தகன் மரபினர் - History of Chola - சோழர் வரலாறு - உத்தம, சோழன், இவன், என்னும், பெயர், கல்வெட்டுகள், உள்ள, என்றும், அரசியல், சோழர், என்பது