சோழர் வரலாறு - முதலாம் இராசராசன்
தெலுங்க நாடு : தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப் பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும் பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று கூறுகிறது.[9] நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையத்துக் கல்வெட்டில் இராசராசனது 8ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டு அவனது சிற்றரசன் அல்லது அரசியல் அலுவலாளனான மும்முடி வைதும்ப மகாராசன் ஆன துரை அரசன் என்பவன் தானம் செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[10]
கீழைச் சாளுக்கிய நாடு : இராசராசன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில் இருந்தது. அந்நாடு கிருஷ்ணை, கோதாவரியாறுகட்கு இடைப்பட்டது. அந்நாட்டு அரசமரபினருள் இரண்டு கிளையினர் தோன்றி ஒருவரை ஒருவர் நாட்டைவிட்டு விரட்ட முயன்றனர்.நாடு கலகத்திற்கு உட்பட்டது. சக்திவர்மன் என்பவன் ஒரு கட்சியினன். அவனை மற்றொரு கட்சியினர் நாட்டைவிட்டு விரட்டி விட்டனர். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சக்திவர்மன் மரபினர் நாட்டை ஆள இடமின்றித் தவித்தனர். இப்போராட்டம் கி.பி. 925-லிருந்து நடந்துவந்ததெனினும், உச்சநிலை பெற்றது இராசராசன் காலத்திலே ஆகும். சக்திவர்மன் மரபினர் அரசுக்குரிய மூத்த குடியினர். இளங்குடியினர் நாட்டைக் கவர்ந்து ஆண்டனர். சக்திவர்மன் இராசராசனைச் சரண் அடைந்தான். ஏறத்தாழக் கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான். இவன் இளவலான விமலாதித்தனுக்கு இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான்.[11] இவ்விரண்டு செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது. கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது; சோழப் பேரரசிற்கும் வடக்கில் அச்சம் இல்லாதொழிந்தது. இராசராசன் மருமகனான விமலாதித்தன் திருவையாற்றில் தம் மாமியார் கட்டிய கோவிலுக்குத்தானம் செய்துள்ளான்.[12]
கலிங்கநாடு : இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான். மகேந்திர மலையில் இரண்டு கல்வெட்டுகள்[13] கிடைத்தன. அவற்றில், ‘விமலாதித்தன் என்னும் குலூத நாட்டு அரசனை இராசேந்திரன் வென்றான்; வென்று மகேந்திரமலை உச்சியில் வெற்றித்துரண் ஒன்றை நாட்டினான்’ என்னும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஆயின், இச் செய்தியை இராசேந்திரன் ஆட்சியில் நடந்ததாக அவனுடைய கல்வெட்டுகள் கூறவில்லை. ஆதலின், இப் படையெடுப்பும் வெற்றியும் இராசராசன் காலத்திற்றான் நடந்திருத்தல் வேண்டும். குலுரத நாடு என்பது மகேந்திர மலையைத் தன் அகத்தே கொண்ட கலிங்கநாடு போலும்! இங்குக் குறிப்பிட்ட விமலாதித்தன் சாளுக்கிய (முன் சொன்ன) விமலாதித்தன் எனத் தவறாகக் கொண்டு வரலாறு எழுதினோரும் உண்டு.
ஈழ மண்டலம் : கி.பி. 993-இல் வெளிவந்த கல்வெட்டுகளிலேயே இராசராசன் ஈழ மண்டலத்தை வென்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. “இராமன் குரங்குகளின் துணையைக் கொண்டு பாலம் கட்டி அரும்பாடுபட்டு இராவணனைக் கொன்றான். ஆயின், இராசராசன் பாலம் கட்டாமலே படைகளைக் கப்பல் மூலமாகக் கொண்டுசென்று இலங்கை இறைவனை எரிக்கு இரையாக்கினான். இதனால் இவன் இராமனினும் சிறந்தவனே ஆவன்” என்று திருவலாங்காட்டுப்பட்டயம் பகர்கின்றது. இராசராசன் காலத்தில் இலங்கையில் குழப்பம் மிகுதியாக இருந்தது. இலங்கை அரசனான ஐந்தாம் மகிந்தன் தென்கிழக்கில் இருந்த மலை அரணையுடைய ‘ரோஹணம்’ என்னும் இடத்திற்குச் சென்று விட்டான். அச்சந்தர்ப்பத்தில் இராசராசன் வட இலங்கையைக் கைப்பற்றி, அதற்கு[14] மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரிட்டான்.
இப்படையெடுப்பினால் அநுராதபுரம் அழிவுற்றது. பொலநருவா சோழர் தலைநகரம் ஆனது; அது ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் பெற்றது; இராசராசன் அத்தலை நகரில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான். இக்கோவில் சுதை, செங்கல் முதலியன கொண்டு அழுத்தமாகவும் அழகாகவும் கட்டப்பட்டது. சுற்றிலும் மதிலையுடைய கோநகரத்தில் இக்கோவில் அழகுற அமைந்துள்ளது. இஃது இன்றும் தன் எழில் குன்றாது இருத்தல் வியப்புக்குரியது.[15] தாழி குமரன் என்னும் சோழ அரசியற் பணியாளன் ஒருவன் மாதோட்டத்தில் (இராசராச புரத்தில்), அழகிய கோவில் ஒன்றைக் கட்டி ‘இராசரா சேச்சரம்’ எனப் பெயரிட்டான்; அதற்குப் பல தானங்கள் செய்துள்ளான்.[16] இராசராசன் தான் தஞ்சாவூரிற்கட்டிய பெரிய கோவிலுக்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.[17]
- ↑ 9. 79 of 1921.
- ↑ 10. Nellore Ins. No 239.
- ↑ 11. Ind. Ant. Vol. 14.p.52
- ↑ 12. 215 of 1894
- ↑ 13. 396,397, of 1896; Archaeological Survey of India, 1911-12, pp. 171-172.
- ↑ 14. S.I.I. Vol. No. 92.
- ↑ 15. Archaeological Survey of Ceylon, 1906 pp. 17-27.
- ↑ 16. S.I.I. Vol 4, 616 of 1912
- ↑ 17. 618 of 1912
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதலாம் இராசராசன் - History of Chola - சோழர் வரலாறு - இராசராசன், நாடு, என்னும், சாளுக்கிய, சக்திவர்மன், கொண்டு, கீழைச், விமலாதித்தன், சோழப்