சோழர் வரலாறு - கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்
மோரியர் படையெடுப்பு
வடுகர், கோசர் என்னும் படைவீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, கோசர் படை, வடுகர் படை என மூவகைப்படைகள் இருந்தன. (1) இம்மூவருள் முன்னுற வந்த கோசர் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பானைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், துளுவ நாட்டைக் கைப்பற்றினர்;[15] அவனது காவல் மிகுந்த பாழி என்னும் இடத்தே வடுகர் தங்கிவிட்டனர்.[16] வென்ற நாட்டில் வென்றவர் படை இருந்து பாதுகாத்தல் இயல்பே யன்றோ?
(2) நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பானைத் தாக்கினர்; போர் நடந்தது. முடிவு தெரியவில்லை.[17] (3) பின்னர் ‘வாட்டாறு’ என்ற ஊரையும் ‘செல்லூர்’ என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லுர்க்குக் கிழக்கே கோசரோடு, போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்.[18] (4) கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியன் கடுங்கோபம் கொண்டு, புலிக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான்.[19] (5) பின்னர் அக்கோசர் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணிந்திலது, அப்பொழுது ‘வடுகர்’ படையை முன் விட்டுப் பின் புதிதாக வந்த (வம்ப) மோரியர் - பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது.[20] இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடைசெய்த மலையை அல்லது பள்ளத்தாக்கை ஒழுங்கு செய்து வந்தனர் என்பது தெரிகிறது.[21] இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர்[22] கருதுகின்றனர். (6) இங்ஙனம் தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்த வடவடுகரான கோசரை இளஞ் சேட்சென்னிஎன்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்;[23] மேலும் இவன், குறைவினையை முடிப்பதற்காகப் (அரை குறையாகப் பகைவரை முறியடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் முறியடிக்க) பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான். இங்ங்னம் காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணம் பற்றி இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான்.[24]
மோரியர் தோல்விக்குக் காரணம்
இங்ஙனம் வலி மிக்க சோழன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து தமது கருத்துநிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். இச்சென்னி பகைவரை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர்க்கு அடிமைப் பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வடநாட்டினர் ஆதலின், மோரியர், துளுவநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து திதியனிடம் தோல்வியுற்றுப் பல இடங்களில் வழி தெரியாது திரிந்து மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்.
இப்படையெடுப்பு மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் தன்னாட்சி பெற்றே அசோகன் காலத்தும் விளங்கினமையாலும், இளஞ்சேட்சென்னி யால் மோரியர் தோற்கடிக்கப்பட்டனர் என்னும் புலவர் கூற்றுகள் உண்மை என்றே புலப்படுகின்றன. இப்படையெடுப்புச் செய்தியில் சேரர், பாண்டியர் பெயர்கள் காணப்படவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டினனான காரவேலன் தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழரசர் கூட்டமைப்பை அழித்ததாகக் கூறிக் கொள்கிறான். இதனை நோக்க, மோரியர் படையெடுப்புக்குப் பின் தமிழரசர் ஒன்றுபட்டு வடவரை எதிர்த்தனர் என்பது தெரிகிறது.
பிற்கால ஆரியர், கோசர், வடுகர்
கோசர், வடுகர், மோரியர் சம்பந்தப்பட்ட செய்யுட்களை ஒருங்கு கூட்டி நல்லுணர்ச்சியோடு நுணுகி ஆராய்பவர் ஒருவாறு மேற்கூறப் பெற்ற முடிவுக்கே வருதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பற்ற பிற்கால ஆரியர், கோசர், வடுகர் என்று தமிழ்ப்பாக்களில் குறிக்கப் பெற்றவர் வேறு. கி.மு.232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப் பின் வந்த சாதவாகனர் (வடுகர்) தம்மாட்சி பெற்று வடவேங்கடம் முதல் கங்கையாறு வரை பேரரசை நிறுத்தி ஆளத் தொடங்கினர். அப்பொழுது தமிழகத்தின் வட எல்லையில் வடுகர் பாதுகாவற்படை இருந்தது. மோரியர் காலத்துக் கோசர் மரபினர் எல்லைப்புறத்தில் நிலைத்தனராதல் வேண்டும். அங்ஙனம் நிலைபெற்ற அக்கோசர், வடுகர், கங்கைச் சமவெளியினின்றும் வடுக நாட்டில் தங்கிய ஆரியர் ஆகிய இவர்கள், பிற்காலத்தே மலையமான், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோரால் தாக்கப்பட்டிருக்க வேண்டும். என்னை? இச்செழியன் காலம் சிலப்பதிகார காலம். கி.பி. 150 -200[25] மோரியர் படையெடுப்பின் காலம் கி.மு. 298 - கி.மு. 272; அஃதாவது அசோகன் தந்தையான பிந்துசாரன் காலம் ஆகும்.[26] எனவே ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முற்பட்டவரும் பிற்பட்டவரும் ஆகிய கோசர், வடுகர் என்பவர் வேறு வேறானவர். இக்கருத்தினை டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களும் ஆதரித்தல் காண்க.[27]
- ↑ 15. குறுந்தொகை 73.
- ↑ 16. அகம், 375.
- ↑ 17. புறம், 169.
- ↑ 18. அகம், 90, 216.
- ↑ 19. புறம் 261, 281
- ↑ 20. அகம் 196, 262.
- ↑ 21. அகம் 69, 251, 281, புறம், 175.
- ↑ 22. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol. 1.p. 28.
- ↑ 23. அகம் 205, 378.
- ↑ 24. அகம் 375, புறம் 378.
- ↑ 25. K.G. ‘Sesha Iyers’ ‘Cheras of the Sangam Period’, pp. 121, 122.
- ↑ 26. Vide the author's article in ‘Sentamil Selvi’, vol. 16 pp. 117-199.
- ↑ 27. Vide his ‘Beginnings of S.I. History’, pp.98,99.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கி.மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன் - History of Chola - சோழர் வரலாறு - மோரியர், கோசர், வடுகர், வந்த, காலம், தாக்கினர், அசோகன், ஆரியர், என்னும், வேண்டும், தமிழகம், தமிழகத்தின், பின், சென்று, வென்ற