சோழர் வரலாறு - சோழன் நலங்கிள்ளி
இளந்தத்தன்: இந்நிலையில் நலங்கிள்ளியால் பரிசில் பெற்ற இளந்தத்தன் என்ற புலவன் உறையூர்க்குட் புகுந்து நெடுங்கிள்ளியைக் காணவந்தான். அவன் பகைவனிட மிருந்து வந்ததால், ஒற்று அறிய வந்தவன் என நெடுங்கிள்ளி தவறாக எண்ணினான்; அத்தவற்றால் அவனைக் கொல்லத் துணிந்தான். இக்கேட்டைக் கேள்வியுற்ற கோவூர் கிழார் விரைந்து சென்று, நெடுங்கிள்ளியைக் கண்டு,
“ஐயனே, பழுமரம் தேரும் பறவைபோல நெடிய வழியையும் கவனியாது வள்ளல்களை நோக்கி வரும் எளிய புலவருள் இவன் ஒருவன், தான் வல்லபடி பாடிப் பரிசில் பெற நின்பால் வந்தவன்; அரசியல் ஒற்று முறைகளை அறிந்தவன் அல்லன். தான் கற்ற கல்வியால் தலை நிமிர்ந்து நடக்கும் புலவன் இவன். இவன் வந்த நோக்கத்தை அறியாது, நீ இவனைக் கொல்ல முயலுதல் கொடுஞ் செயலாகும்.” என்றார். அரசனும் அச்செயல் தவிர்ந்தான்.
உறையூர் முற்றுகை நலங்கிள்ளிக்கே வெற்றி அளித்ததென்பது தெரிகிறது. என்னை? நலங்கிள்ளி உறையூரை ஆண்டுவந்தான், அதனைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்று புறப்பாட்டு 68 கூறலாம் என்க. மேலும், நெடுங்கிள்ளி நலங்கிள்ளியுடன் போரிட ஆற்றாது, பலவாறு முயன்று, இறுதியில் ‘காரியாறு’ என்ற இடத்தில் (போரிட்டு) இறந்தான் என்பது தெரிகிறது. அதனால் அவன் ‘காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி’ எனப்பட்டான்.[6][7]
பாண்டியருடன் போர்: நலங்கிள்ளி தன் ஆட்சிக் காலத்தில் பாண்டியருடன் போரிட்டான் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டில் அரண் மிக்க வலிய கோட்டைகள் ஏழு இருந்தன. நலங்கிள்ளி அவற்றைக் கைப்பற்றி, அவற்றில் தன் புலிக் குறியைப் பொறித்தான்.
பெரு வீரன்: இவன் எப்பொழுதும் போர்க்களத்திலிருந்து வந்தவன்; பகைவர் அஞ்சத்திக்க போர்களிற் பெருங்களிப்புக் கொண்டவன்; போர்முனையிற்றான் பாணர் முதலியோர்க்குப் பரிசளித்தவன்;[8] இவனிடம் சிறந்த கடற்படை இருந்தது: குதிரைப் படை இருந்தது : இவன் தேர்மீது செல்லும் பழக்கம் உடையவன்.[9] இவன் காலாட்படைகள் மூவகைப்படும். துரசிப்படை, இடையணிப்படை, இறுதியணிப்படை என்பன.[10] அவை போருக்குப் போகும் பொழுது முதற் படை பனைநுங்கைத் தின்னும். இடையணிப்படை, பனம் பழத்தின் கனியை நுகரும்; இறுதியணிப்படை சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்னும், அஃதாவது, தூசிப்படை முதலிலே அனுப்பப்படும்; அதுவே செய்வினையை முடித்துவிடும். தவறின் பிறகுதான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நுங்கு பழமாகும் காலம் ஆகும். இரண்டாம் படையும் தவறுமாயின் ஈற்றணிப்படை பின்னரே அனுப்பப்படும். இவற்றிற்கு இடைப்பட்ட காலமே பனம்பழம் பனங்கிழங்காக மாறும் காலம் என்ன அழகிய நுட்பமான கருத்து![11] இதனால் நலங்கிள்ளியின் போர்த்திறம் பற்றிய அறிவை நன்கறியலாம் அன்றோ? படைகளை முன்னரே கொண்டு குவித்து வீணாக்கும் வினரைப் போலன்றித் தேவை உண்டாயின், ஒவ்வொரு படையாக அனுப்புதல் நன்முறையே அன்றோ?
பேரரசன்: இவன் கடற்படை வைத்திருந்தான் என்பதாலும் எப்பொழுதும் போர்க்களமே இடமாகக் கொண்டவன் என்பதாலும் இவன் பேரரசன் என்பதும், பகைவரை அடக்குதலிலே கண்ணும் கருத்துமாக இருந்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன. இதனை,
“சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போலச் சேர, பாண்டியர் குடைகள் இரண்டும் நின் குடைக்குப் பின்னே தோன்றுகின்றன. நீ பாடி வீட்டின் கண்ணே இருத்தலையே விரும்புகின்றனை நகரின் கண் இருத்தலை உடம்படாய், பகைவர் கோட்டைக் கதவுகளைத் தம் கோட்டாற் குத்தும், நின் யானைகள் அடங்கி இரா. போர்’ என்றவுடன் குதுகலித்துத் துள்ளும் நின்மறவர் போர் இன்றி வாடியிரார். ஆதலின் கீழ்க்கடல் பின்னதாக மேல் கடலினது அலை நின் குதிரையின் குளம்பை அலைப்ப வலமாக முறையே நீ வருவையோ என்று வடநாட்டரசர் ஏங்குகின்றனர்.”[12]
என்று கோவூர்கிழார் பாடியுள்ளது கொண்டும் அறியலாம். கோவூர் கிழாரது கூற்றால், இவன் பேரரசன் என்பதும், வடநாட்டரசரும் அஞ்ச்த்தக்க நிலையில் இருந்தவன் என்பதும் தெளிவுறத் தெரிகின்றன அல்லவா? இச்சோழன், விறலியர் பூவிற்கு விலையாகப் பெறுக என்று மாடத்தையுடைய மதுரையையும் தருகுவன்,” என்று கோவூர் கிழார் கூறினார்.[13] எனின், நலங்கிள்ளி பேரரசன் என்பதில் ஐயமுண்டோ? ‘பகைவரை வென்ற மாறுபாட்டால் மிக்க செல்வத்தையுடைய தேர்வண் கிள்ளி’ என்று இவனைத் தாமப்பல் கண்ணனார்[14]பாராட்டியுள்ளமையும் இவன் பேரரசன் என்பதை உணர்த்துகிறதன்றோ? ‘நலங்கிள்ளியின் படைகள் இடமகன்ற உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து, மன்னரை வலிகெடுத்த மேம்பாட்டையுடையது. ‘அவன் உலகம் காக்கும் அரசன்’ என்று ஆலத்துார் கிழார் பாராட்டியிருத்தல் காண்க.[15]
- ↑ 6. இவனைக் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இளங்கிள்ளியோடு பொருதவன் எனச் சிலர் தவறாகக் கருதி எழுதியுள்ளனர். இதற்குக் காரியாற்றுப் போரைப் பற்றிய மணிமேகலை அடிகளிற் சான்றில்லை என்பது அறியற்பாலது.
- ↑ 7. புறம் 33.
- ↑ 8. புறம் 33.
- ↑ 9. புறம் 382.
- ↑ 10. புறம் 225.
- ↑ 11. புறம் 225.
- ↑ 12. புறம் 31.
- ↑ 13. புறம் 32.
- ↑ 14. புறம், 43.
- ↑ 15. புறம், 225.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழன் நலங்கிள்ளி - History of Chola - சோழர் வரலாறு - இவன், பேரரசன், நலங்கிள்ளி, என்பதும், நின், அனுப்பப்படும், தெரிகிறது, கோவூர், கிழார், வந்தவன்