விஷ்ணு புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
இதன் பிறகு பாலகிருஷ்ணனும் பலராமனும் கோகுலத்தில் வளர்ந்த வரலாறும், பூதனை என்ற அரக்கி கிருஷ்ணனுக்குப் பாலூட்ட முயன்று இறந்ததும், சகடம் உதைத்ததும், கன்றால் விளாங்கனி அடித்ததும் ஆகிய கிருஷ்ண லீலைகள் விஷ்ணு புராணத்தில் இந்தப் பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யசோதை தாமு என்று வடமொழியில் பெயர் கூறப்படும் கயிற்றினால் கண்ணனைக் கட்டிப் போட்டதால் தாமோதரன்' என்ற பெயர் கிருஷ்ணனுக்கு வழங்கலாயிற்று.
காளிங்க நர்த்தனம்
காளிங்க நர்த்தனக் கதையை விஷ்ணு புராணம் வேறு வகையாகச் சொல்லிச் செல்கிறது. முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு கடலை விட்டுவிட்டு யமுனையில் குடிபுகுந்தது. ஒரு பகுதியில் காளிங்கனும், அதன் குடும்பமும், உறவினர்களும் ஒரு மடுவில் வசித்ததால் யமுனையின் அப்பகுதி நீர் முற்றிலும் விஷமாக மாறிவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான். காளிங்கனும் மற்ற பாம்புகளும் கிருஷ்ணன் உடலைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடிக்கத் துவங்கின. நந்தன், யசோதா, பலராமன் இதைப் பார்த்துக் கதறினர். எல்லோரும் துயரத்தின் எல்லையை அடைந்த பொழுது, பலராமன் கிருஷ்ணா! விளையாட்டு போதும், சீக்கிரம் அவற்றை அழித்துவிட்டு வா' என்றான். உடனே கிருஷ்ணன் எல்லாப் பாம்புகளையும் அழித்து, காளிங்கன் தலையில் ஏறி நடனமாடி அதன் உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டுவந்தான். காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொண்டதால் கிருஷ்ணன் அவர்களை மன்னித்து, யமுனையில் இனி நீங்கள் தங்கக் கூடாது; கடலுக்கு ஓடிவிடுங்கள்!” என்று ஆணையிட்டு விடுதலை செய்தான். கிருஷ்ணன் பாம்பின் படத்தின்மேல் ஆடியதால் அந்தப் பாதத்தின் சின்னம் எல்லா நாகங்களின் படத்திலும் அமைந்து விட்டதால் அதைப் பார்த்த கருடன் அவற்றை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.
பாகவதம் முதலியவற்றில் கன்றுக்குட்டி வடிவில் கண்ணனைக் கொல்ல வந்த அசுரனை அக்கன்றின் காலைப் பிடித்து சுழற்றி விளாமரத்தின் மேல் எறிந்து விளாங்காய் களை உதிர்த்தான் என்று பேசப்படுகிறது. அந்தக் கதை விஷ்ணு புராணத்தில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது. தேனுகா என்ற அசுரன் கழுதை வடிவு கொண்டு விளா மரங்களைக் காவல் செய்தான் என்ற வேறுபாட்டுடன் அதே கதை பேசப்படுகிறது.
கிருஷ்ணனும் பலராமனும் அவன் நண்பர்களும் ஒட்டப் பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தயத்தில் தோற்றவர் வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பந்தய ஏற்பாடு. பிரலம்பா என்ற அசுரன் கிருஷ்ணன், பலராமன் இருவரையும் கொல்ல வந்து ஆயர்பாடிச் சிறுவர்களைப் போல் அவர்களுடன் சேர்ந்து விளையாடினான். ஒட்டப்பந்தயத்தில் தோற்றதால் பலராமனை முதுகில் தாங்கிக் கொண்டு ஒடப் புறப்பட்டான். திடீரென்று அசுர வடிவத்தைப் பெற்று மலைபோன்று ஒரு மேனியைப் பெற்றுக் கொண்டான். என்ன செய்வதென்று அறியாத பலராமனைப் பார்த்துக் கிருஷ்ணன், 'உன் சக்தியை உபயோகித்து அவனைக் கொன்று விடு' என்றான். கிருஷ்ணனின் அறிவுரைப்படி உள்ளங்கையை மடக்கி அவன் தலையில் குத்தி அவனைச் சாகடித்தான் பலராமன்.
இதற்கு அடுத்தபடியாக கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த கதையை விஷ்ணு புராணம் பேசுகிறது. இப் பகுதியில் சில புதுமைகள் காணப்படுகின்றன. அவை வருமாறு: மழை ஒய்ந்த பிறகு கிருஷ்ணன் கோவர்த்தன கிரியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டான். கிருஷ்ணனை வந்து வணங்கிய இந்திரன், 'ஐயனே! கோக்களாகிய பசுக்களை ஏழு நாட்கள் நீ காத்தமையால் இன்றிலிருந்து கோவிந்தன்' என்ற பெயரும் உனக்கு ஏற்படுவதாகும். கிருஷ்ணா! என்னுடைய மகன் அர்ஜுனன் என்ற பெயரில் பூவுலகில் பிறந்துள்ளான். அவனைக் காக்க வேண்டியது உன் பொறுப்பாகும்” என்று கூற, கிருஷ்ணனும் அதை ஏற்றுக்கொண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 18 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், பலராமன், விஷ்ணு, கொண்டு, அவன், காளிங்கனும், அவனைக், பகுதியில்