விஷ்ணு புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட கிருஷ்ணன் தானே பிரசேனனைத் தேடிக் காட்டிற்குச் சென்றான். இறந்து கிடந்த பிரசேனன், சிங்கம் ஆகிய இரு உடல்களையும் பார்த்தான். நடந்ததை ஒருவாறு ஊகித்துக் கொண்ட கிருஷ்ணன் கால் தடங்கள் பற்றிச் சென்று ஜாம்பவான் இருப்பிடத்தை அடைந்தான். ஜாம்பவானின் குழந்தை மணியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனைக் கண்டு குழந்தை அலறவே, ஜாம்பவான் வந்தது. இருவருக்கும் பெரும் போர் நடந்தது. அப்போர் இருபத்தியோரு நாட்கள் நீடித்தது. கிருஷ்ணன் வராமையால் அவனைத் தேடி வந்த யாதவர்கள் ஜாம்பவான் வீடுவரை கிருஷ்ணன் சுவடு இருப்பதையும் அதன்பிறகு அது காணாமல் போனதையும் பார்த்தார்கள். இதற்குள் கிருஷ்ணன் சென்று ஒருவாரம் ஆகிவிட்டபடியால் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து யாதவர்கள் பலரும் கூடி கிருஷ்ணனுக்கு சிரத்தி சடங்கு செய்தார்கள். சிரத்தையில் ஏற்படுகின்ற புண்ணியம் கிருஷ்ணனைச் சென்று அடைந்ததால் அவன் மிக்க பலத்துடன் போர் செய்து ஜாம்பவானைத் தோற்கடித்தான். இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ஜாம்பவான் கிருஷ்ணன் வீரத்தை மெச்சித் தன் பெண் சாம்பவதியை அவனுக்கு மணம் செய்து கொடுத்து அந்த மணியையும் பரிசளித்தான். கிருஷ்ணன் தன் மனைவியோடு துவாரகைக்கு வந்தான்.
கிருஷ்ணனின் மீட்சியைக் கண்ட யாதவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நடந்தவற்றை அறிந்த சத்ரஜித் கிருஷ்ணனை சந்தேகித்ததற்காக வருந்தினான். அதற்காகத் தன் மகள் சத்யபாமையை மணம் செய்து கொடுத்தான். சயமந்தக மணி மீண்டும் சத்ரஜித்தை அடைந்தது. சத்தியபாமையைத் தாங்கள் அடைய வேண்டும் என்று கருதி இருந்த அக்ருவர், கிருதவர்மா மற்றும் சடதன்வா ஆகியோர் கிருஷ்ணன் மேல் பொறாமையும் வெறுப்பும் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாண்டவர்கள் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிந்து போனார்கள் என்பதைக் கேள்விப்பட்டுக் கிருஷ்ணன் அங்கே சென்றான். கிருஷ்ணன் இல்லாத அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சடதன்வா சத்ரஜித்தைக் கொன்று மணியைக் களவாடி விட்டான்.
தன் தகப்பன் கொல்லப்பட்டதை அறிந்த சத்தியபாமா கடுஞ்சினம் கொண்டு ஒரு ரதத்தில் ஏறி வாரணாவதம் சென்று கிருஷ்ணனிடம் நடந்தவற்றைக் கூறினாள். மீண்டுவந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமனிடம் நடந்தவற்றைக் கூறி நாம் இருவரும் ஒன்று சேர்ந்து சடதன்வாவைக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இருவரும் சடதன்வாவை எதிர்த்தனர். இவர்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாத சடதன்வா அக்ருவரிடம் மணியைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். தன்னிடம் மணி இருப்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்ட அக்ருவர் மணியை வைத்துக் கொண்டான். சடதன்வா கிருஷ்ணனுக்கு அஞ்சி குதிரையில் ஏறி ஓடினான். கிருஷ்ணனும், பலராமனும் பின் தொடர்ந்தனர். காட்டின் எல்லையில் குதிரை இறந்து விடவே அவன் இறங்கி ஓடினான். காட்டிற்குள் ரதம் செல்லாது ஆதலால் பலராமனை ரதத்தோடு இருக்கச் சொல்லி கிருஷ்ணன் தான் மட்டும் ஓடினான். இறுதியில் சடதன்வாவைக் கண்டு அவன் தலையை சீவி விட்டான். அவன் உடல் முழுதும் தேடிப் பார்த்தும் மணி அங்கு இல்லை என்று கண்டு கொண்டான். பலராமனிடம் மீண்டுவந்த கிருஷ்ணன் நடந்தவற்றைக் கூறினான். கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பலராமன், 'உன் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. இன்றிலிருந்து நீ யாரோ, நான் யாரோ! நீ உன் வழியில் செல், நான் என் வழியில் செல்கிறேன் என்று கூறிவிட்டு விதேக நாட்டிற்குச் சென்று மன்னன் ஜனகனிடம் விருந்தினனாக இருந்தான். அங்கு வந்த துரியோதனன் பலராமனிடம் கதாயுதப்போர் முறையைக் கற்றுக் கொண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 15 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், அவன், கொண்டான், சென்று, ஜாம்பவான், சடதன்வா, செய்து, நடந்தவற்றைக், பலராமனிடம், ஓடினான், கண்டு, கொண்ட, மணியை, யாதவர்கள்