முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » சிறுவர் கதைகள் » பஞ்ச தந்திரக் கதைகள் » 1. நான்கு நண்பர்கள் - 4
பஞ்ச தந்திரக் கதைகள் - 1. நான்கு நண்பர்கள் - 4
‘நல்லது. நீ யார், எங்குள்ளவன் என்றெல்லாம்
சொல்லு’ என்று அவை கேட்டன.
எனக்குத் தாய் தந்தையர் யாரும் கிடையாது. சுற்றத்தாரும் ஒருவரும் இல்லை. காடுதான் எனக்கு வீடு. என் மீது அன்பு கொண்டு என்னைக் காப்பாற்றினிர்களானால், உங்களையே தாய் தந்தையராகவும், உற்ற சுற்றத்தாராகவும் கொண்டு, என்றும் உங்களைப் பிரியாமல் வாழ்வேன்’ என்று அந்த மான் கூறியது.
அந்த மானின் சொற்களில் உண்மையிருந்தது. எனவே அவை மூன்றும் அதை நம்பின.
‘நல்லது. நீ இங்கேயே எங்களுடன் இரு. இனி நாம் நால்வரும் நண்பர்களாக வாழ்வோம்’ என்று கூறி மானைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டன.
புதிதாக வந்த அந்த மான் வகை தெரியாமல் ஒரு வேடன் விரித்திருந்த வலையில் மாட்டிக் கொண்டது. அது துயரத்தோடு கத்தியதைக் கேட்டுக் காகம், மற்ற நண்பர்கள் இருவரையும் கரைந்து அழைத்தது. காகத்தின் குரல் கேட்டு ஏதோ ஆபத்து வந்து விட்டது என்று எண்ணிக் கொண்டே, ஆமையும், எலியும் அந்தத் திசை நோக்கி விரைந்து சென் றன, அப்போது கரைந்து கொண்டே எதிரில் வந்த காகம், அந்த மான் குட்டி ஒரு கொடிய வேடனுடைய வலையில் சிக்கிக் கொண்டு விட்டது. இப் போதே நாம் அதை விடுவிக்க வேண்டும்” என்று கூறியது.
மூன்றும் விரைந்து மான் வலைப்பட்டிருந்த இடத்தை அடைந்தன. சிறந்த அறிவுடைய நீ எப்படி இந்த வலையில் மாட்டிக் கொண்டாய்? என்று அவை கேட்டன,
‘எல்லா விளக்கமும் பின்னால் சொல்லுகிறேன். வேடன் வந்து என்னைக் கொல்வதற்கு முன்னால் விடுவித்து விடுங்கள்’ என்று மான் பதறியது.
வலையில் அகப்பட்டு விட்டதற்காக ஏன் இப்படிப் பதறித் துடிக்கிறாய்? ஏன் இப்படிப் பயப்படுகிறாய்?” என்று எலி கேட்டது.
முன் ஒரு நாள், நான் என் அம்மாவுடன் இருக்கும் போது ஒரு வேடன் வலை விரித்திருந்தான். அதைத் தாண்டிப்போய் நான் ஒரு சோலைக்குள் புகுந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாவி வேடன், என்னைத் தொடர்ந்தோடி வந்து உயிரோடு பிடித்துக் கொண்டான். என்னை அவன் அந்த நாட்டு அரசருக்குக் காணிக்கையாகக் கொண்டு போய்க் கொடுத்தான். அவர் தம் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார். அவர்கள் என்னோடு விளையாடி மகிழ்ந்தார்கள். நான் ஓடி விடாதபடி அவர்கள் என்னைக் கட்டி வைத்திருந்தார்கள். ஒரு நாள் பகல் நேரத்தில் இடி முழக்கத்துடன் மழை பெய்தது. அப்போது மற்ற மான் குட்டிகளோடு கூடிச் சுதந்திரமாக ஓடி ஆடித் திரிந்து, விரும்பிய தழைகளை ஒடித்துத் தின்பது எப்போது, அந்தக் காலம் எப்போது வரும்?’ என்று நான் அழுது கொண்டிருந்தேன்.
நான் வருந்தி அழுது கொண்டிருப்பதைக் கண்ட இளவரசர்கள், பாவம், ஏனோ இது வருத்தமாக இருக்கிறது. இதை நாம் கட்டிப் போட்டு வைத்திருப்பது நல்லதல்ல என்று இரக்கப்பட்டு என்னை விடு வித்து விட்டார்கள். அதன் பிறகுதான் நான் இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தேன். இப்போது மீண்டும் வேடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் என்ன தீமை செய்வார்களோ, தெரியவில்லையே! அதுதான் எனக்கும் பயமாக இருக்கிறது! சீக்கிரம் என்னை விடுவியுங்கள்!” என்று மான் குட்டி கூறியது.
எலி சிறிதும் காலந் தாழ்த்தாமல், அந்த வலையைத் தன் பற்களால் கொறித்து அறுத்து விட்டது. வலை அறுந்தவுடன் மான் வெளிப்பட்டுத் தங்கள் இடத்தை நோக்கி நடந்தது. அப்போது, அந்தக் கொடிய வேடன் அங்கு வந்து சேர்ந்து விட்டான். வேடனைக் கண்டவுடன் மான் குட்டி துள்ளி ஓடியது. எலி அங்கிருந்த வளைக்குள் ஓடி மறைந்து கொண்டது. ஆமையால்தான் வேகமாக நடக்க முடிய வில்லை. மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. மானைத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த வேடன், வழியில் ஆமையைக் கண்டதும், அதைப் பிடித்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டு ஓடினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காகம், எலியிடம் வந்து அந்த வேடன் ஆமையைத் தூக்கிக் கொண்டு மானை விரட்டிப் போகிறான். மான் ஓடித் தப்பிவிட முடியும். ஆனால், ஆமை சிக்கிக் கொண்டு விட்டதே. போய் மானைக் கண்டு இதற்கு ஒரு வழி பார்க்க வேண்டும் வா!’ என்று கூறியது.
வேடனிடமிருந்து நம் நண்பனான ஆமையை விடுவிக்காமல் நாம் உயிருடன் வாழ்வது சரியல்ல. வா, வா, விரைவில் போவோம்’ என்று எலி துள்ளிக் குதித்தோடியது.
காகம் வேகமாகப் பறந்து சென்று ஓடிக் கொண்டிருந்த மானைக் கண்டது.
“மான் குட்டி, மான் குட்டி, உன்னை விரட்டிக் கொண்டு வந்த வேடன், வழியில் தென்பட்ட ஆமை யாரைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறான். இப்போது அவரை நாம் காப்பாற்ற வேண்டும். நான் ஒரு வழி சொல்கிறேன். கேட்கிறாயா? என்று கேட்டது.
‘காக்கையண்ணா, சீக்கிரம் சொல்லுங்கள்!” என்று மான் குட்டி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கூறியது.
“அதோ, நமது குளம் அருகில்தான் இருக்கிறது. குளத்தை நெருங்கியவுடன் அதன் கரையில் நீ செத்ததுபோல் விழுந்து கிட, செத்த பிணத்தைக் கொத்து வதுபோல் நான் உன் மேல் நின்று கொத்திக் கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியைக் கண்டதும் வேடன் உன்னைத் தூக்கிக் கொண்டு போக வருவான்.
அவன் வருமுன் ஆமையிருக்கும் தோள் பையைக் கீழே வைத்துவிட்டுத்தான் உன்னைத் தூக்க வருவான். அவன் தரையில் பையை வைத்தவுடன் நமது எலியார் அதன் வாயைக் கத்தரித்து விடுவார். உடனே ஆமையார் பக்கத்தில் இருக்கும் குளத்திற்குள் நழுவி விடுவார். வேடன் உன்னைத் தொடுமுன் நீ அம்புபோல் பாய்ந்து சென்று அருகில் எங்காவது ஒளிந்து விடு. நானும் வானில் பறந்து மரங்களுக்குள் மறைந்து விடுகிறேன்’ என்றது காகம்.
“அருமையான திட்டம். அப்படியே செய்வோம்’ என்று சொல்லி மான் குளக்கரையில் போய் விழுந்து கிடந்தது. காகம் பின்னால் வந்து கொண்டிருக்கும் எலியிடம் பறந்து சென்று தன் திட்டத்தைக் கூறியது. பின் திரும்பிவந்து, விழுந்து கிடந்த மானின்மேல் உட்கார்ந்து அதைக் கொத்தித் தின்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தது.
மானை விரட்டிக் கொண்டு வந்த வேடன், “இதோ அந்த மான் செத்து விழுந்து கிடக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போகலாம் என்று நினைத்தான். தன் தோளில் ஆமை போட்டுக் கட்டியிருந்த பையைக் குளக்கரையில் இறக்கி வைத்து விட்டு, மானைத் தூக்க ஓடினான்.
உடனே எலி பாய்ந்தோடி வந்து அந்தப் பையை கடித்துக் குதறி எறிந்தது. வேடன் மானை நெருங்கிச் சென்றவுடன், இலேசாகக் கண்ணைத் திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்த மான், வெடுக்கென்று துள்ளி எழுந்து ஓடியது. அதை விட மனமில்லாமல் வேடன் துரத்திக் கொண்டு ஓடினான். மானோ காட்டு மரங்களுக்கிடையே, வளைந்து வளைந்து ஒடி ஒரு புதரில் போய், வேடன் கண்ணுக் குத் தெரியாமல் மறைந்து விட்டது. அதற்குள் ஆமை குளத்திற்குள் இறங்கி விட்டது. எலி வளைக்குள் பதுங்கி விட்டது. காகம் மரத்தின் மேல் ஏறியமர்ந்து கொண்டது. - வேடன், ஒடி இளைத்து ஒன்றுமில்லாமல் ஏமாந்து திரும்பினான்.
வேடன் அங்கிருந்து போனபின், காகம், வேடன் போய்விட்டான்!” என்று அறிவித்துக் கரைந்தது.
அந்தக் குரல் கேட்டதும் ஒளிந்திருந்த எலி ஒடி வந்தது. மறைந்திருந்த மான் பாய்ந்து வந்தது. குளத்திலிருந்த ஆமை கரைக்கு வந்தது. நான்கும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தன. அந்த நான்கும் ஒன்றுக் கொன்று உற்ற உதவியாக இருந்து பெற்ற இன்பம் பெரிது. அவை வாழ்நாள் முழுவதும் ஒற்றுமையாக இருந்து மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தின.
நல்லவர்கள் நட்புப்போல் இலாபமானது வேறு எதுவும் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. நான்கு நண்பர்கள் - 4 - பஞ்ச தந்திரக் கதைகள் - Children Stories - சிறுவர் கதைகள் - வேடன், மான், கொண்டு, அந்த, காகம், வந்து, நான், குட்டி, விட்டது, கூறியது, நாம், வந்த, கொண்டிருந்த, விழுந்து, வலையில், போய், வந்தது, மானை, பறந்து, உன்னைத், மேல், சென்று, தூக்கிக், அந்தக், அப்போது, கொண்டது, மானைத், என்னைக், என்னை, மறைந்து, இருக்கிறது, அவன், ஓடினான்