மரியாதை இராமன் கதைகள் - நெல் மோசடி
மாக்கினாம்பட்டி என்னும் கிராமத்தில், சசிதரன் என்ற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்ய திட்டமிட்டார். அவருக்கு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அதிகம். திருமணத்தின் போது, அதிகம் பேருக்கு சாப்பாடு போட வேண்டி வருமாதலால், மொத்தமாக நெல்லை வாங்கி அரிசியாக்கிப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார் வியாபாரி.
அதே ஊரில் நிலம் வைத்து விவசாயம் செய்யும் பண்ணைக்காரர் ஒருவர் இருந்தார். அவரிடம் சென்ற வியாபாரி, ''ஐயா! என் மகன் திருமணத்திற்காக ஒரு மூட்டை நெல் வேண்டும். நல்ல நெல்லாகக் கொஞ்சம் மலிவான விலையில் கொடுங்கள்,'' எனக் கேட்டார்.
''நல்ல நெல்லாக தருகிறேன்,'' என்று கூறிய பண்ணைக்காரர், வீட்டுக்குள் சென்று, ஒரு கூடையில் கொஞ்சம் நெல்லை எடுத்து வந்து காண்பித்து, ''இந்த நெல் மிகவும் உயர்ந்த ரகம். இதையே வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றார்.
அது நல்ல நெல்லாகவே இருந்தது. ஆகவே வியாபாரி அதையே வாங்கிக் கொள்வது என தீர்மானித்து விலையைக் கேட்டார்.
பண்ணைக்காரர் கூடையிலிருந்த நெல்லைக் காண்பித்து, ''இந்த நெல்லின் விலை ஆயிரம் ரூபாய்,'' என்றார்.
வியாபாரி! உடனே ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, ''பண்ணையாரே! நெல் மூட்டையை உடனே வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்,'' என்று கூறி வீட்டுக்குச் சென்றார்.
சிறிது நேரம் சென்றபின் பண்ணையார் அனுப்பிய ஆள், விவசாயியின் வீட்டுக்கு வந்தான்.
சிறு கூடை நெல்லை வியாபாரியிடம் கொடுத்து, ''இதை நீங்கள் கொடுத்த பணத்துக்காக பண்ணையார் கொடுத்து அனுப்பினார்,'' என்று கூறினான்.
''நான் ஒரு மூட்டை நெல்லுக்கல்லவா பணம் கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு சிறு கூடை நெல்லை கொடுத்தனுப்பியிருக்கிறாரே,'' என்று வியப்போடு கேட்டார் வியாபாரி.
''அதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஏதாவது பேச வேண்டும் என்றால் பண்ணையாரிடம் நேரே வந்து பேசிக் கொள்ளுங்கள்,'' என்று கூறி, தான் கொண்டு வந்த கூடை நெல்லை வைத்துவிட்டு போய்விட்டான் வேலைக்காரன்.
வியாபாரி, பண்ணையார் வீட்டுக்கு விரைந்து சென்று அவரைச் சந்தித்தார்.
''நான் ஒரு மூட்டை நெல்லுக்கல்லவா ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு சென்றேன். நீங்கள் என்னிடம் மாதிரிக்காகக் காண்பித்த சிறு கூடை நெல்லையல்லவா கொடுத்து அனுப்பியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
''மூட்டையைப் பற்றி நான் ஏதும் பேசவில்லையே... கூடை நெல்லை உம்மிடம் காண்பித்து இந்த நெல்லின் விலை ஆயிரம் ரூபாய் என்று சொன்னேன். நீர் ஒப்புக்கொண்டு பணம் கொடுத்து விட்டுச் சென்றீர். அதன்படி ஒரு கூடை நெல்லைக் கொடுத்தனுப்பினேன்,'' என்றார் பண்ணையார்.
''நீங்கள் பேசுவது நியாயமல்ல. சிறு கூடை நெல் ஐம்பது ரூபாய் கூட பெறாது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொள்வது மோசடி அல்லவா?'' என்று கோபத்தோடு கேட்டார் வியாபாரி.
''நான் ஒரு சிறுகூடை நெல்லை உம்மிடம் காண்பித்து, இதன் விலை ஆயிரம் ரூபாய் என்று சொன்னேன். உமக்கு விலை ஒத்துவரவில்லை என்றால் வேண்டாம் என்று திரும்பிப் போயிருக்க வேண்டும். விலையை ஒப்புக்கொண்டு பணத்தை கொடுத்துச் சென்று விட்டு, இப்போது வந்து தகராறு செய்வது என்ன நியாயம்?'' என்று கேட்டார் பண்ணையார்.
இருவருக்குமிடையே சச்சரவு அதிகரித்தது.
பண்ணையார் தான் சொன்னதே சரியென விடாப்பிடியாகச் சாதித்தார்.
அவரிடம் மேற்கொண்டு பேசுவதால் ஒரு பயனும் ஏற்படாது என்று உணர்ந்த வியாபாரி, மரியாதை இராமனிடம் சென்று முறையிட்டு தனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மரியாதை இராமன், பண்ணையாரை வரவழைத்து விசாரணை செய்தார்.
''நீதிபதி அவர்களே! நான் தவறு ஏதும் செய்யவில்லை. ஒரு கூடை நெல்லைக் காண்பித்து இதன் விலை ஆயிரம் ரூபாய் என்று சொன்னேன். ஒப்புக்கொண்டு வியாபாரி பணம் கொடுத்தார். இப்போது விலை ரொம்ப அதிகம் என்று கூறுகிறார். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்றார் பண்ணையார்.
''தருமப் பிரபு, நான் ஒரு மூட்டை நெல் தேவைப்படும் என்று கூறித்தான் விலை கேட்டேன். இவர் நெல்லின் மாதிரிக்காக சிறு கூடையில் கொஞ்சம் நெல்லைக் காண்பித்தார். இவர் கூறிய விலை, ஒரு மூட்டை நெல்லின் விலை என்றுதான் எண்ணிக் கொண்டேன்,'' என்றார் வியாபாரி.
''பண்ணையாரே! சாதாரணமாக தற்சமயம் ஒரு மூட்டை நெல்லின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. அப்படியிருக்க, ஒரு சிறுகூடை நெல்லுக்கு ஆயிரம் ரூபாய் என்று எவ்வாறு நிர்ணயம் செய்தீர்?'' என மரியாதை இராமன் கேட்டார்.
''நெல், வெளியே என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால், வியாபாரியிடம் ஒரு கூடை நெல்லைக் காண்பித்து இதன் விலை ஆயிரம் ரூபாய் என்று சொன்னேன். இவர் சரி என்று ஒப்புக் கொண்டு பணத்தைக் கொடுத்தார்.
''விலை பிடிக்கவில்லை. அதிகம் என்று தோன்றியிருந்தால் அப்போதே இவர் அதைச் சொல்லியிருக்க வேண்டும். விலை பிடிக்காவிட்டால் பணம் கொடுக்காமல் திரும்பிப் போயிருக்கலாம். இப்போது வியாபாரி ஆட்சேபணை செய்வதில் என்ன பிரயோசனம்?'' என்று பண்ணையார் சாமர்த்தியமாகப் பதில் சொன்னார்.
பண்ணையார் வெறும் வார்த்தை ஜாலங்களைச் செய்து, அந்த அடிப்படையில் வியாபாரியை வஞ்சிக்க நினைக்கிறார் என்பதை மரியாதை இராமன் புரிந்து கொண்டார்.
பண்ணையார் செய்வது போலவே வார்த்தை ஜாலம் செய்து அவரை மடக்க வேண்டும் என்று மரியாதை இராமன் தீர்மானித்துக் கொண்டார்.
பிறகு இருவரையும் நோக்கி, ''இந்த வழக்கைப் பற்றி நான் முழுவதுமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதுவரை நீங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும்.
''பண்ணையாரே, இந்த ஒரு மாதத்திற்கு உமக்கு வியாபாரி தம்முடைய செலவில் சாப்பாடு போட வேண்டும். சாப்பாடு விஷயத்தில் வியாபாரி எந்த அளவு சாப்பிடுகிறாரோ அதே அளவு சாப்பாட்டை உமக்கு அவர் அளிக்க வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் வெளியே வேறு எங்கும் சாப்பிடக் கூடாது,'' என்று கூறினார்.
நிபந்தனையை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
மரியாதை இராமன் வியாபாரியைத் தனியாக அழைத்து, ''பண்ணையாருடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு முன்னதாக சமையலறையில் வயிறு நிறைய சாப்பிட்டுவிடும். பண்ணையாருடன் சாப்பிட அமரும் போது உமது இலையில் ஒரே ஒரு சோற்றுப் பருக்கையை மட்டும் போட்டுக் கொள்ளும். இதே போல சோற்றை பண்ணையார் இலையில் போட்டுவிடும். நான் சாப்பிடுகிற அளவு ஒரு பருக்கைச் சோறுதான்... இதையே உமக்கும் போட்டிருக்கிறேன்,' என்று கூறிவிடும்,'' எனச் சொல்லி அனுப்பினார்.
இரண்டாவது நாளே பண்ணையார் மரியாதை இராமனைத் தேடி வந்தார்.
''ஐயா, வியாபாரி ஒவ்வொரு வேளையிலும் ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைத்தான் எனக்குப் பரிமாறுகிறார். ஒரு சோற்றுப் பருக்கையை உண்டு ஒரு மனிதனால் உயிர் வாழ முடியுமா? பசிதான் அடங்குமா? பசியும் பட்டினியுமாக இரண்டு நாட்களாக நான் அவதிப்படுகிறேன். தயவு செய்து வேறு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள். வியாபாரியை வயிறு நிறையச் சோறு போடச் சொல்லுங்கள்,'' என்றார்.
''நீர் சொல்வது மாதிரி எவ்வாறு செய்ய முடியும்? வியாபாரி உமக்குச் சோறு போட வேண்டும் என்பதை மட்டும்தான் நீர் ஒப்புக் கொண்டீர். வயிறு நிறையச் சோறு போட வேண்டும் என்று நீர் கேட்கவில்லை. அதனால் மிச்சமிருக்கும் நாட்களை அந்த ஒரே ஒரு சோற்றுப் பருக்கையை உண்டுதான் ஆக வேண்டும்,'' என்று கூறினான் மரியாதை இராமன்.
''ஐயா, சோறு என்று சொன்னாலே வயிறு நிறையச் சோறு என்றுதானே அர்த்தம். ஒரு பருக்கை சோற்றைப் போட்டு விட்டு, முன்பே சொல்லவில்லையே என்று கேட்பது நியாயமா?'' என்று பரிதாபமான குரலில் கேட்டார் பண்ணையார்.
''ஐயா, பண்ணையாரே, வியாபாரி தமக்கு ஒரு மூட்டை நெல் வேண்டுமென்று கேட்டு விலையை விசாரித்தார். நீர் விலையைச் சொன்னீர். ஆனால், ஒரு சிறு கூடை நெல்லை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு மூட்டை நெல்லின் விலையை வாங்கிக் கொண்டீர்.
''இதைக் கேட்டால் விதண்டாவாதம் பேசுகிறீர். வியாபாரி விஷயத்தில் நீர் நடந்து கொண்டது நியாயம் என்றால், சாப்பாட்டு விஷயத்தில் அவர் நடந்து கொள்வதும் நியாயம்தான். நீரே ஒப்புக் கொண்டவாறு ஒருமாத காலத்துக்கு ஒரு பருக்கைச் சோற்றை உண்டுதான் நீர் நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்,'' என்று கண்டிப்பான குரலில் கூறினார் மரியாதை இராமன்.
பண்ணையார் தான் செய்த தவறை உணர்ந்து, ''நீதிபதி அவர்களே! வியாபாரியின் விஷயத்தில் நான் நடந்து கொண்டது தவறுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அருள் கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டார்.
''பண்ணையாரே! உம்மைப் போன்றவர்களை மன்னிப்பது சரியல்ல. வசதி வாய்ப்பு படைத்த நீர் ஒரு அப்பாவி வியாபாரியை ஏமாற்றி மோசடி செய்யத் துணிந்தது ஒரு பெரிய குற்றம். அறியாமல் செய்த குற்றத்தை மன்னிக்கலாம்.
''தெரிந்து வேண்டுமென்றே ஒருவரை மோசடி செய்யும் நோக்கில் திட்டமிட்டு குற்றமிழைப்பதற்குக் கடுமையான தண்டனையைத் தான் அளிக்க வேண்டும். என்றாலும் நீர் முதல் முறையாக இந்தக் குற்றத்தைச் செய்திருப்பதால் உமக்குக் கடுமையான தண்டனை கொடுக்காமல் விடுகிறேன். வியாபாரிக்கு நீர் ஒரு மூட்டை நெல்லுக்குப் பதிலாக இரண்டு மூட்டை நெல்லைக் கொடுக்க வேண்டும்,'' என்று தீர்ப்பளித்தார்.
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பண்ணையார் நிம்மதி அடைந்து, மரியாதை இராமன் உத்தரவுப்படி வியாபாரிக்கு இரண்டு மூட்டை நெல்லைக் கொடுத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெல் மோசடி - மரியாதை இராமன் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - வியாபாரி, வேண்டும், பண்ணையார், விலை, மூட்டை, நான், ஆயிரம், ரூபாய், நீர், கூடை, மரியாதை, இராமன், நெல்லை, கேட்டார், நெல், நெல்லைக், நெல்லின், சிறு, என்றார், காண்பித்து, சோறு, பண்ணையாரே, ஒப்புக், நீங்கள், பணம், கொடுத்து, செய்ய, விஷயத்தில், இரண்டு, என்ன, இவர், அதிகம், கொண்டார், சொன்னேன், வயிறு, சென்று, தான், சோற்றுப், வாங்கிக், அவர், நடந்து, நிறையச், வியாபாரியை, கொடுத்தார், அளவு, பருக்கையை, என்பதை, செய்து, இப்போது, என்றால், பண்ணைக்காரர், கொடுத்துவிட்டு, நல்ல, வந்து, கொஞ்சம், ஒப்புக்கொண்டு, அந்த, விலையை, வீட்டுக்கு, உமக்கு, இதன், மோசடி, சாப்பாடு