இராஷ்டிரகூடர்கள்
இராஷ்டிரகூட பேரரசு, ராஷ்டிரம் என்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை ராஷ்டிரபதிகள் நிர்வகித்தனர். ராஷ்டிரம் ஒவ்வொன்றும் பல விஷயங்களாக (மாவட்டங்களாக) பிரிக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகத்திற்கு விஷயபதி பொறுப்பாவார். அடுத்த ஆட்சிப் பிரிவு புக்தி எனப்பட்டது. இதில் 50 முதல் 70 கிராமங்கள் இருந்தன. புக்தியின் ஆட்சியாளர் போகபதி எனப்பட்டார். இந்த அதிகாரிகள் நேரடியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டனர். கிராம நிர்வாகம் கிராமத் தலைவரால் நடத்தப்பட்டது. கிராம நிர்வாகத்தில் கிராம சபைகள் பெரும்பங்கு வகித்தன.
சமூக பொருளாதார நிலைமைகள்
இந்து சமயப் பிரிவுகளான சைவமும் வைணவமும் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியில் செழித்து வளர்ந்தன. இருப்பினும், சமண சமயமும் அரசர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவைப் பெற்று வளர்ச்சி கண்டது. தக்காணத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சமணர்கள். கன்ஹேரி, ஷோலாபூர், தார்வார் போன்ற ஒரு சில இடங்களில் புத்தசமய குடியிருப்புகளும் தழைத்திருந்தன. பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கம் நிலவியதும் குறிப்பிடத்தக்கது. தற்கால பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள சாலடோகி என்ற இடத்தில் ஒரு கல்லூரியும் இக்காலத்தில் செயல்பட்டது. இந்த கல்விக் கூடத்தைப் பற்றி ஒரு கல்லெட்டு விரிவான தகவல்களைத் தருகிறது. செல்வந்தர்கள் அளித்த கொடை மற்றும் விழாக்களின் போதும் திருவிழாக்களின்போதும் கிராம மக்கள் வழங்கிய கொடை ஆகியவற்றின் உதவியோடு இக்கல்வி நிறுவனம் நடத்தப்பட்டது.
இராஷ்டிராகூடர் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரமும் தழைத்திருந்தது. தக்காணத்திற்கும் அராபியர்களுக்கும் இடையே வாணிபம் செழித்திருந்தது. அவர்களோடு நட்புறவு கொண்ட இராஷ்டிரகூட அரசர்கள் வாணிப வளர்ச்சிக்கும் ஊக்கமளித்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராஷ்டிரகூடர்கள் , வரலாறு, இந்திய, கிராம, இராஷ்டிரகூடர்கள், நடத்தப்பட்டது, கொடை, மக்கள், ராஷ்டிரம், இந்தியா, இராஷ்டிரகூட, அதிகாரிகள்