முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஜேம்ஸ் வாட் (கி.பி.1736 - கி.பி.1819)
ஜேம்ஸ் வாட் (கி.பி.1736 - கி.பி.1819)
ஸ்காத்லாந்தைச் சேர்ந்த புத்தமைப்பாளரான ஜேம்ஸ் வாட், நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தொழிற்புரட்சியின் முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தவர்.
உண்மையில், நீராவி எஞ்சினைத் தயாரித்த முதல் மனிதர் ஜேம்ஸ் வாட் அன்று. இது போன்ற சாதனங்களை, முதல் நூற்றாண்டிலேயே அலெக்சாண்டிரியாவின் ஹீரோ விவரித்துக் கூறியிருந்தார். 1698 ஆம் ஆண்டில் தாமஸ் சாவரி என்பவர், நீர் இறைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை நீராவி எஞ்சினுக்குப் புத்தாக்க உரிமை (Patent) பெற்றிருந்தார். இந்த எஞ்சினிலிருந்து சற்றுச் சீர்திருந்திய ஒரு நீராவி எஞ்சினுக்கு 1712 ஆம் ஆண்டில் தாமஸ் நியூகாமன் என்ற ஆங்கிலேயர் புத்தாக்க உரிமை பெற்றார். நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து நீரை இறைப்பதற்கு நியூகாமனின் நீராவி எஞ்சின் பயன்பட்டது.
1764 ஆம் ஆண்டில், நியூகாமனின் நீராவி எஞ்சின் மாதிரியொன்றைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தான் நீராவி எஞ்சினில் ஜேம்ஸ் வாட்டுக்கு ஆர்வம் தோன்றியது. கருவிகள் செய்வதில் ஓராண்டுக் காலமே பயிற்சி பெற்றிருந்தார். நியூகாமனின் நீராவி எஞ்சினில் இவர் செய்த சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவை. எனவே, நடை முறையில் பயனுடைய முதலாவது நீராவி எஞ்சினைக் கண்டு பிடித்தவர் என ஜேம்ஸ் வாட்டைக் கருதுவது முற்றிலும் நியாயமே.
நீராவி எஞ்சினில் ஆவியை நீர்ப்பொருளாக மாற்றுவதற்கு ஒரு தனி அறையை இவர் அமைத்தார். இது இவர் செய்த முதலாவது முக்கிய சீர்திருத்தமாகும். இதற்கு இவர் 1769 ஆம் ஆண்டில் புத்தாக்க உரிமை பெற்றார். நீராவி உருளைக்கு வெப்பத் தொடர்பறுத்து பாதுகாப்புச் செய்தார். இருவகையில் செயற்படும் எஞ்சின் ஒன்றை இவர் 1782 இல் கண்டுபிடித்தார். இந்தப் புத்தமைப்புகளும், வேறு சில சிறிய சீர்திருத்தங்களும் ஒருங்கிணைந்து, நீராவி எஞ்சினை நான்கு மடங்குக்கு மேல் திறனுடையதாக ஆக்கின. நடைமுறையில், அதிகப் பயனுடையதாக இல்லாதிருந்த ஒரு சாதனத்தைத் தொழில் துறையில் பெரிதும் பயன்படக் கூடிய ஒரு மாபெரும் சாதனமாக இவருடைய சீர்திருத்தம் மாற்றியது.
எதிரிடை இயக்கத்தை (Reciprocal Motion) ஒரு சுழல் இயக்கமாக (Rotary Motion) மாற்றுவதற்கான பல்லிணைப்புத் தொகுதிகளையும் 1781 இல் வாட் கண்டுபிடித்தார். இந்தச் சாதனத்தின் மூலம் நீராவி எஞ்சினில் பயன்பாடுகள் வெகுவாகப் பெருகின. மேலும், மையம் விலகுவிசையுள்ள வேகங்காக்கும் அமைவு (Centrifugal Governor) ஒன்றை 1788 ஆம் ஆண்டில் வாட் கண்டுபிடித்தார். இதன் மூலம் எஞ்சினின் வேகத்தை தானாகவே கட்டுப்படுத்த முடியாது. 1790 இல் அழுத்த அளவி (Pressure Guage) ஒன்றைக் கண்டு பிடித்தார். கணக்கிடும் பொறி ஒன்றையும் செய்தார். பொருளளவு, விசை வேகம், தொலை முதலியவற்றினைப் பதிவு செய்து சுட்டிக் காட்டும் கருவி (Indicator) ஒன்றை அமைத்தார். நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ் (Throttle-Valve) ஒன்றையும் கண்டுபிடித்தார். இது தவிர, வேறுபல சீர்திருத்தங்களையும் வகுத்தமைத்தார்.
ஜேம்ஸ் வாட் வாணிகத்தில் திறமை வாய்ந்தவராக இருக்கவில்லை. எனினும் 1775 ஆம் ஆண்டில், ஒரு பொறியியல் வல்லுநராகவும், வாணிகத்தில் மிகுந்த திறமை சாலியாகவும் விளங்கிய மேத்யூ போல்ட்டன் என்பவருடன் சேர்ந்து ஒரு கூட்டாண்மை நிறுவனத்தை அமைத்தார். அடுத்த 25 ஆண்டுகளில், வாட் மற்றும் போல்ட்டன் நிர்வாகம் ஏராளமான நீராவி எஞ்சின்களைத் தயாரித்தது. இரு கூட்டாளிகளும் பெருஞ் செல்வந்தர்களானார்கள்.
நீராவி எஞ்சின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூறுவது கடினம். தொழிற்புரட்சியில் முக்கியப் பங்காற்றிய வேறுபல கண்டுபிடிப்புகளும் உண்டு. சுரங்கத் தொழில், உலோகவியல் தொழில், எந்திரத் துறை ஆகியவற்றிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஜான் கே என்பவர் 1733 இல் கண்டுபிடித்த பறக்கும் ஓடக்கட்டை (Fly Shuttle), 1764 இல் ஜேம்ஸ் ஹார்கிரீவ்ஸ் கண்டுபிடித்த நூற்புக் கதிர்ப்பொறி (Spinning Jenny) ஆகியவை வேறு கண்டுபிடிப்புகள். சிறிய சீர்திருத்தங்களாக அமைந்தன. அவற்றுள் தனிப்பட்ட எதுவும் தொழிற்புரட்சிக்கு முக்கியக் காரணமாக அமையவில்லை. ஆனால், அவற்றிலிருந்து நீராவி எஞ்சின் முற்றிலும் வேறுபட்டதாக விளங்கியது. அது மிக உயிர் நாடியானதொரு பணியைச் செய்தது. நீராவி எஞ்சின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமலிருந்தால், தொழிற்புரட்சி முற்றிலும் வேறானதாக அமைந்திருக்கும். அதற்கு முன்பு, விசை உற்பத்திக்கு காற்றாலைகளும், நீர்ச் சக்கரங்களும், ஓரளவுக்குப் பயன்பட்ட போதிலும், மனித உழைப்பு மூலமாகவே பெரும்பாலான விசை உற்பத்தி செயல்பட்டு வந்தது. இதனால், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தக் கட்டுப்பாடு நீங்கி விட்டது. நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்டதும், இந்தக் கட்டுப்பாடு நீங்கிவிட்டது. நீராவி எஞ்சினில் துணையால், இப்போது ஏராளமான அளவில் விசை உற்பத்தி செய்ய முடிந்தது. அதைத் தொடர்ந்து விசை உற்பத்தியும் பெருமளவில் பெருகியது. 1973 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட எண்ணெய்த் தடை, விசைப் பற்றாக்குறையினால், தொழில்துறை எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை நமக்கு உணர்த்தியது. இந்த அனுபவம், தொழிற்புரட்சியில் ஜேம்ஸ் வாட்டின் கண்டுபிடிப்புகள் எத்துணை முக்கியத்துவம் பெற்றதாக விளங்கியிருக்கும் என்பதை ஊகித்தறிய உதவுகிறது.
தொழிற்சாலைகளுக்கான எரியாற்றல் ஆதாரமாகப் பயன்பட்டது மட்டுமின்றி, நீராவி எஞ்சின் வேறுபல முக்கியமான பயன்பாடுகளையும் கொண்டிருந்தது. மார்குஸ் டி - ஜூஃப்ராய் டி - அப்பான்ஸ் என்பவர் 1783 இல் ஒரு படகினை இயக்குவதற்கு நீராவி எஞ்சினைப் பயன் படுத்துவதில் வெற்றி கண்டார். ரிச்சர்டு டிரிவிதிக் என்பவர் 1804 ஆம் ஆண்டில் முதலாவது நீராவி இரயில் எஞ்சினை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்புகள் தொடக்கத்தில் வாணிக முறையில் வெற்றி பெறவில்லை. எனினும், 20 அல்லது 36 ஆண்டுகளுக்குள்ளேயே, நீராவிப் படகும், இருப்பூர்தியும், நிலவழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்களில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.
வரலாற்றில் அமெரிக்கப் புரட்சியும், ஃபிரெஞ்சுப் புரட்சியும் அதே சமயத்தில் தொழிற்புரட்சியும் தோன்றியது. அந்தக் காலத்தில் தொழிற்புரட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றவில்லை யெனினும், அந்த முக்கியமான அரசியல் புரட்சிகளை விட மனிதரின் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இந்தத் தொழிற்புரட்சி தான் என்று இன்று நாம் உணர்கிறோம். எனவே தான், வரலாற்றின் மிகுந்த செல்வாக்கு வாய்ந்த பெரியார்களில் ஒருவராக ஜேம்ஸ் வாட் இடம் பெறுகிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 66 | 67 | 68 | 69 | 70 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜேம்ஸ் வாட் (கி.பி.1736 - கி.பி.1819), நீராவி, எஞ்சின், ஆண்டில், ஜேம்ஸ், வாட், விசை, இவர், எஞ்சினில், என்பவர், கண்டுபிடித்தார், கண்டுபிடித்த, தொழில், வேறுபல, கண்டுபிடிப்புகள், இந்தக், தொழிற்புரட்சி, அமைத்தார், தான், உரிமை, புத்தாக்க, முதலாவது, நியூகாமனின், முற்றிலும், ஒன்றை, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்