முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஷான் ஷாக் ரூசோ (கி.பி.1712 - கி.பி.1778)
ஷான் ஷாக் ரூசோ (கி.பி.1712 - கி.பி.1778)
புகழ் மிகு தத்துவ அறிஞரான ஷான் ஷாக் ரூசோ 1712 இல் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் பிறந்தார். அவர் பிறந்த பின் அவருடைய அன்னையார் இறந்தார். ரூசோவிற்கு 10 வயதாக இருக்கும்போது, அவருடைய தந்தையார் நாடு கடத்தப்பட்டதால், ஜெனீவாவை விட்டு வெளியேறினார். ரூசோ மட்டும் ஜெனீவாவில் இருந்தார். தமது 16 ஆம் வயதில் ரூசோ ஜெனீவாவை விட்டு வெளியேறினார். பல ஆண்டுகளாக அவர் இடம் விட்டு இடம் சென்று, தற்காலிகமாகப் பல தொழில்களைச் செய்து வந்தார். பல பெண்களிடம் காதல் கொண்டார். அவர்களுள் ஒருத்தியான தெரஸ் லெவாசர் வழியாக திருமண உதவியின்றி 5 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவர்கள் ஐவரையும் அவர் அனாதைப் பிள்ளைகளின் இல்லத்தில் சேர்த்தார். (தமது 56 ஆம் வயதில் தெரஸை மணந்து கொண்டார்).
1750 இல் ரூசோ 38 ஆம் வயதில் திடீரெனப் புகழ் பெற்றார். கலை, அறிவியல் துறைகளினால் மனித சமூகத்திற்கும் அறநெறிக்கம் நன்மையா? என்பது பற்றிய சிறந்த கட்டுரைக்குப் பரிசு வழங்குவதாக தி ஷோன் கழகம் அறிவித்தது. அறிவியல், கலை துறைகளின் வளர்ச்சியின் பயனாக மனுக்குலத்திற்கு நன்மை விளையாதா என்று ரூசோ எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றது. அதனால், அவர் புகழ் பெற்றார். 'தி டிஸ்கோர்ஸ் ஆன் தி ஆரிஜின் ஆஃப் இன்ஈக்குவாலிட்டி' (1755) "லா நுவல் ஹெல்லோஸ்" (1761) 'எமிலி' (1762), 'தி சோஷியஸ் கான்ராக்ட்' (1762), 'கன்ஃபெஷன்ஸ்' (1770) போன்ற நூல்களையும் அவர் பிறகு எழுதினார். அவையெல்லாம் அவருடைய புகழை உயர்த்தின. மேலும், இசையில் பேரார்வமுடைய ரூசோ "லேமியூசஸ்கேலன்யஸ்", "லே தெவான் த்யூ வில்லாஜ்" எனும் இரு இசை நாடகங்களையும் எழுதினார்.
தொடக்கத்தில் ரூசோ பிரெஞ்சு அறிவெழுச்சிக் கால முற்போக்கு எழுத்தாளர்களான தெனி திதோர, ஷான் தாலம்பெர் போன்ற பலரின் நண்பர்களாக இருந்த போதிலும், விரைவில் அவருடைய கருத்துகள் வேறு திசையில் திரும்பின. ஜெனீவாவில் ஓர் அரங்கு அமைக்க வேண்டுமெனக் கூறிய வால்ட்டேரை ரூசோ எதிர்த்தார். (அரங்கு என்பது தீ நெறிப் பள்ளியாகுமென்று ரூசோ கூறினார்). இதனால் ரூசோவை வால்ட்டேர் இறுதிவரை பகைத்தார். மேலும் ரூசோவை உணர்ச்சி வேகம் வால்ட்டேர், பல்துறை அறிவுவாதிகள் ஆகியோரின் பகுத்தறிவுவாதத்திற்கு முற்றிலும் முரணாக இருந்தது. ரூசோவிற்கு தமது அரசியல் நூல்களின் காரணமாக 1762 லிருந்து அரசாங்கத்தினிடமிருந்து தொல்லைகள் வரத் தொடங்கின. அவருடைய நண்பர்கள் சிலர் அவரை விட்டகன்றனர். அப்போது அவருக்கு மனக் கோட்டம் ஏற்படத் தொடங்கியது. பலர் அவருடன் நட்புறவு கொண்ட போதிலும், சந்தேகமும் வெறுப்புணர்ச்சியும் கொண்ட அவர் அவர்களுடன் சண்டையிட்டார். அவர் தம் வாழ்நாளின் இறுதி 20 ஆண்டுகள் மனக் கசப்புடனும் துயருடனும் வாழ்ந்து வந்தார். 1778 இல் அவர் பிரான்சிஸ் எர்மனோன்வில்லில் இறந்தார்.
சமதர்மம், தேசியம், புத்தெழுச்சி இயக்கம், வல்லாட்சி, பகுத்தறிவுவாத எதிர்ப்புக் கொள்கை ஆகியவை தோன்றுவதற்கு ரூசோவின் நூல்கள் முக்கிய காரணமாக இருந்தன எனச் சொல்லப்படுகின்றது. அவை பிரெஞ்சுப் புரட்சிக்கும் வழிவகுத்தன. மக்களாட்சி, சமத்துவம் எனும் தற்கால இலட்சியங்களின் வளர்ச்சிக்கும் அவை பெரிதும் உதவின. கல்விக் கொள்கையிலும் அவருடைய கருத்துகள் பெரும் விளைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களைச் சூழ்நிலையே உருவாக்குகின்றது. (ஆகவே அவர்கள் மாறக் கூடியவர்கள்) எனும் கொள்கை அவருடைய நூல்களிலிருந்து பெறப்பட்டதெனவும் கூறப்படுகின்றது. கற்காலத் தொழில் நுட்பமும் சமூகமும் தீயன என்று அவர் கூறியதாகவும், "உயர் தகைமையுள்ள காட்டுமிராண்டி" எனும் இலட்சியத்தை உருவாக்கியதாகவும் கருதப்படுகின்றது. உண்மையிலேயே அவர் இக்கருத்துகள் தோன்றக் காரணமாக இருந்திருப்பாரெனில், அப்பட்டியலில் இதை விட உயர்ந்த இடம் பெற்றிருப்பார். ஆயினும், இவற்றுள் பல மிகைப்படக் கூறப்பட்டவையே ஆகும்.
உயர் தகைமையுள்ள காட்டுமிராண்டி எனும் கருத்தை எடுத்துக் கொள்வோம். முதலாவது, ரூசோ இச் சொற்றொடரைப் பயன்படுத்தவேயில்லை. அவர் தென் கடல் தீவுகளின் பழங்குடிகளையோ, அமெரிக்க இந்தியரையோ புகழ்ந்து பாராட்டியதில்லை. மேலும் உயர் தகைமையுள்ள காட்டுமிராண்டி எனும் கருத்து ரூசோவின் காலத்திற்கு முன்பே நிலவி வந்தது. ரூசோ பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னே புகழ் மிகு ஆங்கிலக் கவிஞன் ஜான் ட்ரைடன் அதே சொற்றொடரைப் பயன்படுத்தியிருந்தார். சமூகம் தீயதென்று ரூசோ கருதவுமில்லை. அதற்கு மாறாக, அவர் சமூகம் மனிதனுக்குத் தேவையென்று வலியுறுத்தினார்.
"சமுதாய ஒப்பந்தம் எனும் கருத்தை ரூசோ முதன் முதலில் எடுத்துரைத்தார்" என்பது முற்றிலும் தவறு. ஜான் லாக் இக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருந்தார். லாக்கின் நூல்கள் ரூசோ பிறப்பதற்கும் முன்னே வெளிவந்தன. புகழ் மிகு ஆங்கிலேயத் தத்துவ அறிஞர் தாமஸ் ஹாப்ஸ் சமுதாய ஒப்பந்தம் எனும் கருத்தை லாக்கிற்கு முன்னே ஆராய்ந்திருந்தார்.
ரூசோ தொழில் நுட்பத்தை எதிர்த்தார் என்பது உண்மையா? ரூசோ இறந்த பின் இரு நூற்றாண்டுகளாகத் தொழில் நுட்பம் விரைவாக வளர்ந்துள்ளதென்பது உண்மை. அவர் தொழில் நுட்பத்தை எதிர்த்திருந்தாரென்றால் அதனால் எந்த வகையான விளைவும் ஏற்படவில்லை. மேலும் தொழில் நுட்பத்திற்கெதிரான இன்றைய கருத்துகள் ரூசோவின் நூல்களிலிருந்து பெறப்பட்டவையல்ல. அவை கடந்த நூற்றாண்டில் கட்டுப்பாடற்ற தொழில் நுட்ப வளர்ச்சியினால் ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகளினால் ஏற்பட்டவையாகும்.
மனிதனின் குணநலன்களைச் சூழ்நிலை மிகுதியாகப் பாதிக்கிறதென்பதை வேறுபல சிந்தனையாளர்கள் கூறியிருக்கின்றனர். இப்பொதுவான கருத்தை ரூசோவின் கருத்தெனக் குறிப்பிடுவது தவறெனக் கருதுகிறேன். அது போலவே தேசியமும் இப்பிரெஞ்சு தத்துவ அறிஞரின் காலத்திற்கு முன்னே முக்கிய ஆற்றலாக இருந்துள்ளது. அது தோன்றுவதற்கு அவர் காரணமல்லர்.
ரூசோவின் நூல்கள் பிரெஞ்சுப் புரட்சி தோன்றக் காரணமாக இருந்தனவா? ஓரளவு அவை காரணமாக இருந்தன என்பது உண்மை. திதரோ, தாலம்பெர் ஆகியோரின் கருத்துகளை விட ரூசோவின் கருத்துகள் மிக முக்கிய காரணமாக இருந்தன எனலாம். ஆயினும் ரூசோவுக்கு முன்னர் வால்ட்டேர் எழுதிய நூல்கள் பலவாக இருந்ததாலும், மிகத் தெளிவாக எழுதப்பட்டிருந்ததாலும், அவை ரூசோவின் நூல்களைவிட மிக அதிகமான விளைவுகளை ஏற்படுத்தின.
ரூசோ அக்காலப் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர்களைப் போலல்லாமல், பகுத்தறிவு வாதத்தை எதிர்த்தார் என்பது உண்மை. ஆனால், பகுத்தறிவுவாத எதிர்ப்பு புதிதன்று. நமது அரசியல், சமூக நம்பிக்கைகள் பொதுவாக உணர்ச்சியின் அடிப்படையிலும் ஒரு சார்புள்ள எண்ணங்களின் அடிப்படையிலும் எழுபவை. அவை சரியானவை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நாம் அடிக்கடி பகுத்தறிவுக்கேற்றாற்போல் தோன்றும் ஆதாரங்களைப் புனைகிறோம்.
ரூசோவினால் வரலாற்றில் ஏற்பட்ட விளைவுகள் அவருடைய ஆர்வலர் நினைப்பது போல் அத்துணை பெரிதாக இல்லையெனினும், அவை முக்கியமானவை. புத்தெழுச்சிக்கால இலக்கிய வளர்ச்சியில் ரூசோ முக்கிய பங்கு பெற்றார் என்பது முற்றிலும் உண்மை. கல்விக் கொள்கையையும் நடைமுறையையும் அவருடைய கருத்துகள் பெரிதும் பாதித்தன என்பதும் உண்மை. அவர் குழந்தைக் கல்வியில் நூல்களைக் கற்றல் அத்துணை முக்கியமல்ல என்றார். குழந்தையின் பகுத்தறிவைப் பக்குவகப்படுத்துமுன் அதன் உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அனுபவ வாயிலாக குழந்தைகள் கற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். (தாய் குழந்தைக்குப் பாலூட்டுவதன் நன்மைகளை அவர் அக்காலத்திலே எடுத்துரைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). தமது குழந்தைகளையே கைவிட்டவர், பிறர் தம் குழந்தைகளை வளர்க்க வேண்டுமெனக் கூறத் துணிந்தது வியப்பாக இருக்கின்றது. ஆயினும், ரூசோவின் கருத்துகள் தற்காலக் கல்விக் கொள்கையை மிகவும் பாதித்துள்ளன என்பதில் ஐயமில்லை.
ரூசோவின் அரசியல் நூல்களில் பல சுவையான, தனி முதல் கருத்துகள் இருக்கின்றன. ஆயினும், அவற்றையெல்லாம் விஞ்சி நிற்பது சமத்துவ விழைவு; அக்கால சமூக அமைப்பு தாங்க முடியாத அளவிற்கு அநீதியானது எனும் விழைவும் அதற்குச் சமமாகும் ("மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான்; ஆனால், எங்கும் தளைகளால் பிணிக்கப்பட்டிருக்கிறான்") ரூசோ ஒரு வேளை வன்முறைப் புரட்சியை ஆதரித்திருக்க மாட்டார். ஆனால், அவருடைய கருத்துகள் பிறர் படிப்படியான சீர்திருத்தங்களுக்குப் பதிலாக வன் முறைப் புரட்சியை விரும்புவதற்கு காரணமாக இருந்தன.
தனிச் சொத்துடைமை பற்றி ரூசோ கூறிய கருத்துகள் (மற்றவை பல பற்றிய கருத்துகளைப் போல்) முரணானவையாக இருந்தன. ஒருமுறை அவர் சொத்துடைமையை "குடிகளின் மிகப் புனிதமான உரிமை" என்று விளக்கினார். ஆயினும், அவர் தனிச் சொத்துடைமையைத் தாக்கிய கருத்துகள் அதை ஆதரித்த கருத்துகளை விட அவருடைய வாசகர்கள் மிகுதியாகக் கவர்ந்தன. தனிச் சொத்துடைமையை முதன் முதலாக வன்மையாகத் தாக்கிய தற்கால எழுத்தாளர்களுள் ரூசோ ஒருவராவார். ஆகவே தற்காலச் சமதர்ம பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு அவர் ஒரு முன்னோடியாக இருந்தாரெனக் கருதலாம்.
இறுதியாக, ரூசோவின் அரசியல் கொள்கைகளை நாம் மறந்துவிடலாகாது. ரூசோ கூறுவது போல் "ஒவ்வொருவரும் தம்மையும் தம் எல்லா உரிமைகளையும் சமுதாயத்திற்குக் கையளித்தல்" என்பதே "சோஷியஸ் கான்ட்ராக்ட்" எனும் நூலின் மையக் கருத்து. அக்கருத்தில் குடிகளின் உரிமைகளுக்கோ, அடிப்படை உரிமைகளுக்கோ இடமில்லை. ரூசோ அதிகாரத்தை எதிர்த்தார். ஆனால், அவருடைய நூல் பிற்காலத்தில் தோன்றிய வல்லாட்சிகளை ஆதரிப்பதற்குப் பெரிதும் பயன்பட்டது.
ரூசோ இயல்பு மீறிய உணர்ச்சி வேகமுள்ளவர் (மனக் கோட்டமுள்ளவர்கூட) எனவும், மட்டு மீறிய ஆண் பற்றுள்ளவர் எனவும், நடைமுறைக்கொவ்வாத கருத்துகளுடைய குழம்பிய சிந்தனையாளர் எனவும் சிலர் அவரைக் குறை கூறுகின்றனர். இக்குறை பெரிதும் உண்மையானவை. ஆயினும், அவருடைய குறைபாடுகளைவிட, கூரறிவுத் திறமும் திறமை மிகு தனித் தன்மையும் முக்கியமானவை. அவை கடந்த இரு நூற்றாண்டுகளாகத் தற்காலச் சிந்தையைப் பாதித்து வந்துள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஷான் ஷாக் ரூசோ (கி.பி.1712 - கி.பி.1778), ரூசோ, அவர், அவருடைய, எனும், ரூசோவின், கருத்துகள், ", என்பது, காரணமாக, தொழில், ஆயினும், புகழ், கருத்தை, இருந்தன, உண்மை, எதிர்த்தார், அரசியல், நூல்கள், மேலும், முன்னே, மிகு, முக்கிய, தமது, எனவும், போல், தனிச், தகைமையுள்ள, உயர், வால்ட்டேர், வயதில், விட்டு, ஜெனீவாவில், தத்துவ, இடம், கொண்டார், மனக், முற்றிலும், பெற்றார், கல்விக், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்