முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 86
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 86
கண்ணகி சினத்தோடு சென்று தன் கணவன் கள்வன் அல்ல என்று வழக்காடினாள். தன் தவறு உணர்ந்த பாண்டியன் உடனே சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் நீத்தான். அவனுடைய தேவியும் உடனே மாண்டாள். கொதித்த மனத்தோடு அரண்மனையை விட்டு வெளிவந்த கண்ணகி அந்த நகரம் தீப்பற்றி எரியுமாறு சபித்தாள். மதுரை நகரம் பற்றி எரிந்தது. கண்ணகி சினம் தணிந்து துயரமே வடிவாய் மேற்கு நோக்கி நடந்து சேரநாட்டில் உள்ள ஒரு குன்றின்மேல் ஏறி ஒரு வேங்கை மரத்தின் அடியில் பதினான்கு நாள் இருந்தாள். பதினான்காம் நாள் தேவருலகம் சென்றாள்.
இதுவே சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றப்பட்டது. சிலம்புபற்றிய நூல் என்பதே சிலப்பதிகாரம். இந்தக் காப்பியம் முழுதும் இலக்கியச் சுவை உள்ளது. ஆசிரியர் பல கலைகளையும் அறிந்தவர்; துறவியாக இருந்தபோதிலும் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவையான சொல்லோவியங்களாகத் தீட்டியுள்ளார். அவலச் சுவையும் வீரச்சுவையும் மேலோங்கியுள்ளன. பல இடங்களில் பாத்திரங்களின் உரையாடல் நாடகப்போக்கில் அமைந்துள்ளது. அங்கங்கே வேடர், ஆயர், குன்றவர் முதலான மக்கள் பாடும் பாடல்களும் நாடகப்போக்கில் உள்ளன; அதனால் இந்நூல் நாடகக் காப்பியம் என்று கூறப்படுவது உண்டு.
நாட்டுப்பாடல் வடிவங்கள்
அதற்குமுன் எந்தப் புலவரும் செய்யாத அருஞ்செயலை இவர் செய்து முடித்தார். அவர்கள் மக்களின் ஆடல்பாடல்களில் இருந்த கலைச்செல்வங்களுக்கு எழுத்துவடிவம் தரவில்லை. என்ன காரணத்தாலோ, அவற்றைப் புறக்கணித்தார்கள். பழங்கால மக்கள் என்னென்ன வடிவம் உள்ள பாடல்களைப் பாடினார்கள். என்னென்ன கூத்துகள் ஆடினார்கள் என்பவற்றைச் சங்க நூல்களால் அறிய முடியவில்லை. இளங்கோவடிகள் மக்களின் கலைகளை மதித்தார். அவற்றில் உயிர் உள்ள கலைவடிவங்கள் விளங்குவதை உணர்ந்தார். அவற்றை எழுத்து வடிவில் தம் காப்பியத்தில் இடம்பெறச் செய்தார். கதையில் எங்கெங்கு இடம் கிடைக்குமோ அங்கெல்லாம் அந்தப் பாட்டுவடிவங்களை வாழவைத்தார். கடற்கரையில் செம்படவர் முதலானவர்கள் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றைப்பற்றி மக்கள் பாடிவந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடிய பாடல்கள், ஆயர்மகளிர் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடும்போது பாடிய பாடல்கள், அவர்கள் திருமாலை வழிபட்டுப் பாடியவை, மலையில் வாழ்ந்த மக்கள் முருகனை வழிபட்டுப் பாடியவை, சேர நாட்டில் பெண்கள் கூடி அம்மானை ஆடிப் பாடிய பாடல், நெல் குற்றும்போது பாடியது, ஊசலாடும்போது பாடியது, அரச வாழ்த்தாகப் பாடியது முதலான பழங்காலப்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 86 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - மக்கள், பாடல்கள், பாடியது, பாடிய, வழிபட்டுப், கண்ணகி, உள்ள