முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 222
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 222
இவ்வாறு பலவற்றைத் தொகுத்துக் கூறுவதின் வாயிலாக, பல நீதிகளும் வாழ்க்கை அனுபவங்களும் மிகத் தௌ¤வாக விளங்கச் செய்கிறார்.
கலைக்களஞ்சியம் போன்றவை இல்லாத அக்காலத்தில், கற்பவர்க்குத் தேவையான பல குறிப்புகளையும் செய்யுளில் தருவது நல்லது என்று புலவர்கள் கருதினார்கள். திருமாலின் அவதாரங்களைக் குறித்து ஒரு செய்யுளில் கூறுவது, புராணங்களைப்பற்றி ஒரு செய்யுளில் உரைப்பது, அறங்கள் முப்பத்திரண்டு என்னென்ன என்று ஒரு செய்யுளில் தொகுப்பது இவ்வாறு பலவற்றைக் கூறுவதற்குச் சதகச் செய்யுள்கள் பயன்பட்டன.
குமரேச சதகத்தில், சிலவகை மனிதர்களைப் பேய்கள் என்று குறிப்பிட்டு, அவர்களின் குற்றங்களை எடுத்துக்காட்டுகிறார். கடன் தந்தவர் வந்து திருப்பிக் கேட்கும்போது முகம் கடுகடுப்பவர் பேயாம். பெரிய பதவி வந்தபோது செருக்கோடு நடப்பவர் பேய். பகைவரின் சொல்லை மதித்து அதில் மயங்கி அகப்படுவோர் பேய். நல்லவர்களையும் பெரியவர்களையும் மதியாதவர் பேய். லஞ்சம் வாங்கும் ஆசையால் பிறர்க்குத் துன்பம் செய்பவர் பேய். மனைவி வீட்டில் இருக்கப் பரத்தையரை நாடிச் செல்வோர் பேய். இவ்வாறு நீதிகள் வெவ்வேறு வகையாக உணர்த்தப்படுதல் காணலாம்.
நூறு பழமொழிகளை நூறு செய்யுளில் அமைத்து இயற்றிய நூல் தண்டலையார் சதகம். சென்ற தலைமுறை வரையில் அது மக்களிடையே நன்கு பரவி விளங்கியது.
திருவண்ணாமலை, திருப்பதி முதலான தலங்களின் தெய்வங்களை வழிபடும் முறையில் அமைந்த சதகங்கள் பல உண்டு. இஸ்லாமிய மதத்தவர் பாடிய சதகங்கள், அகத்தீசர் சதகம், அரபிச்சதகம் முதலியன. இயேசுநாதர் திருச்சதகம் என்பது யாழ்ப்பாணத்தாராகிய சதாசிவப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டினர்) ஏசுநாதரைப் போற்றி எழுதிய சதகம். இவ்வாறு பல காரணம்பற்றியும் பல தலங்களைப் புகழ்ந்தும் பலவகைப் புலவர்கள் சதக இலக்கியம் இயற்றினார்கள்.
படிக்காசுப் புலவர்
தொண்டைமண்டல சதகத்தைப் பாடிய படிக்காசுப் புலவர் புகழ்பெற்ற கவிஞர், சந்தப் பாட்டு இயற்றுவதிலும் வல்லவர். சீதக்காதி என்னும் முஸ்லிம் வள்ளலின் காலத்தில் வாழ்ந்து அவருடைய அன்புக்கு உரியவராக விளங்கினார். வள்ளல் இறந்தபோது அவர் பாடிய பாட்டில், கொடிய பஞ்ச காலத்திலும் அந்த வள்ளல் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்து காப்பாற்றிய பேருதவியைப் பாராட்டியுள்ளார்;
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 220 | 221 | 222 | 223 | 224 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 222 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - செய்யுளில், பேய், இவ்வாறு, பாடிய, சதகம்