முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » ஈசாப் நீதிக் கதைகள் » இளம் நண்டும் அதன் தாய் நண்டும்
ஈசாப் நீதிக் கதைகள் - இளம் நண்டும் அதன் தாய் நண்டும்
ஒருநாள் ஆற்றங்கரையில் இருந்த சிறிய நண்டு ஒன்று ஆற்றை நோக்கி மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அதனுடைய நடையே நேராக இல்லாமல் கோணலும் மாணலுமாய் இருந்தது. இதைக் கவனித்த ஒரு பெரிய நண்டு ஒன்று, சிறிய நண்டின் அருகே சென்று, “யப்பா மகனே! எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த சிறிய நண்டு, “நானா! நான் இந்த ஆற்றில் போய் நீந்திக் குளிக்கப்போகிறேன்” என்றது. உடனே அந்தப் பெரிய நண்டு, “நீ இப்படி கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக நடந்து போய்க்கொண்டிருந்தால், ஒருபோதும் ஆற்றை அடைய முடியாது” என்றது.
“அப்படியானால், நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்றது சிறிய நண்டு. “அப்படிக் கேள் என் செல்லம், இதோ பார் நான் நடந்து காட்டுகிறேன். அதன்பின்னர் என்னைப் பின்பற்றி நட” என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்து சென்றது. பெரிய நண்டு நடந்துபோன விதத்தைப் பார்த்துவிட்டு, சிறிய நண்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த நண்டும் கோணலும் மாணலுமாய் நடந்து போனது. அப்போது அந்தச் சிறிய நண்டு பெரிய நண்டைப் பார்த்து, “அம்மா! நம்முடைய இனத்தில் உங்களால் மட்டுமல்ல, யாராலும் சரியாக நடக்கத் தெரியாது போலும்” என்றது. இதைக் கேட்ட பெரிய நண்டால், எதுவும் பேச முடியவில்லை.
நீதி: ஆம், சொல்வது அல்லது போதிப்பது யாருக்கும் எளியது. ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக்கடினம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இளம் நண்டும் அதன் தாய் நண்டும் - ஈசாப் நீதிக் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - நண்டு, சிறிய, பெரிய, நடந்து, என்றது, நான்