இனி
- கே. ரமேஷ்
செங்கல் சுமந்து
சாலையைக் கடந்தான் சிறுவன்
சுவற்றைப் பார்த்து சிரித்தான் - சுவற்றில்
"இளமையில் கல்" வாசகம்.
- கபிலன் வைரமுத்து
சிவந்த வானம் விடியலை கரைத்துக் கொண்டிருந்தது. பசுமை மறந்து போன கிராமத்தில் கழுவிய நீரில் முளைத்துப் போன புற்களின் பனித்துளிகள் லேசாய் சினுங்கி மறைந்தன. பரபரப்பில் ஆட்பட்டு கிடந்தது கிராமம். தினமும் உண்டாகிற பரபரப்புகள். வேலைக்குப் போகிற அவசரம். ஏழு மணிக்கெல்லாம் பட்டாசுத் தொழிற்சாலை பஸ் வந்துடுமாம்.
சுந்தரம் டேய்! சுந்தரம் எழுந்திருடா! மணி ஆறரை ஆகப்போகுது இன்னும் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு. பாயில் புரண்டவனுக்கு போகிற போக்கில் ஒரு உதை விழுந்தது. அரக்கப் பரக்கப் எழுந்தவன் எப்போதும் போல முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு சாப்பாட்டுத் தட்டில் கண் விழித்தான். அரைகுறை கஞ்சியோடு, ஏழு மணி பஸ் வந்து நின்றதில் ஓடிப்போய் பஸ் பிடித்தான். இங்கிருந்து நாலு மைலாம் பட்டாசுத் தொழிற்சாலை, ஏழரை மணிக்கெல்லாம் பட்டாசு வாசனையை நுகர ஆரம்பித்தது பஸ்.
எப்போதும் சோர்வாய் இருப்பவனுக்குள் அன்று மட்டும் என்னவோ வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்பு. மனம் மகிழ்ச்சியில் குதூகலித்தது. ஒன்றும் தெரியாத வயசாக இருந்தாலும் ஏதோ தெரிந்து கொண்டது போல் சந்தோஷத்தால் திக்கு முக்காடியது. அன்று மட்டும் அரை நேரம் லீவு போட்டுவிட்டு ஜாலியாய் ஊர் சுற்றினான். பஸ்ஸிற்கு கூட காத்திருக்க மறுத்தவனுக்குள் புது வேகம். வீட்டிற்கு வர ஓட்டமும் நடையும் தான். கண்மாய் மேட்டுல மீன் பிடிச்சுகிட்டு இருந்த சக நண்பர்களோடு கொஞ்ச நேரம் கொண்டாட்டம். மகிழ்ச்சி தலைகால் புரியாமல் திரிஞ்சான் சுந்தரம். என்னடா! திடீர்னு இவ்வளவு கொண்டாட்டம். நண்பர்கள் சூழ்ந்து கொண்டு கேட்க. "அது ஒன்றுமில்லை போனவாரம் வந்து நம் ஊருக்கு "சிறுவர் சீர்திருத்த பள்ளி" கட்டிக் கொடுக்க வந்தாங்கல்ல அவுங்க இன்னிக்கு வந்து ஏதோ கம்பியெல்லாம் ஊனி அளவெடுத்துக்கிட்டு போனாங்க. நாளைல இருந்து வேலை ஆரம்பமாம். இன்னும் மூணு மாசத்துல வேலை முடிஞ்சிடும்னாங்க.
க்கூம்.... இதுதானா என்கிற முனுமுனுப்பும் சலிப்புமாய் எல்லோரும் திக்கு கண்ட பக்கம் ஓடினார்கள். ஒருவன் ஒளிந்து கொள்ள ஐஸ்1, ஐஸ்2 விளையாட தொடங்கினார்கள். சுந்தரம் நீ வரல? சுந்தரத்திற்கு மனம் லேசாய் கனத்தது. நான் விளையாட வரல. நீங்க வேணா விளையாடிட்டு வாங்க. மேட்டுலேயே உட்கார்ந்திருந்தான். தண்ணீர் என்னவோ வித்தியாசமாய் இருப்பதை போல அதையே உற்றுப் பார்த்தான். ஏன் இவங்களெல்லாம் ஆர்வமில்லாம இருக்காங்க என்பது போல மனம் கேள்வி கேட்க தோணியது.
நல்லா வயசுக்கேத்த உயரம். பன்னிரெண்டு வயசு. ஆறு வயசுல வேலைக்குப் போனவன் பனங்கொட்டை சூப்பிய தலை. எண்ணெய் செக்குல தலையை விட்டா எண்ணெய் மிச்சம் இருக்காது. வறண்ட முடி, பக்கத்து வீட்டு கோபியோட டவுசர், அரணாக் கயித்துல நிக்காம அடிக்கடி மீனைப்போல நழுவிக் கொண்டே இருக்கும். டவுசரில் தபால் பெட்டி வேற, நண்பர்களின் கேலிப் பேச்சுக்கு எப்போதும் தயாராய் காத்திருக்கும் டவுசர், சட்டை பட்டம் பார்த்து பல வருஷம் இருக்கும். உண்மை நிறமுன்னு எதையும் பார்க்க முடியாது.
ஆறு வயசுல இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் அம்மா சேர்த்து விட்டா, இன்னிக்கு வரைக்கும் அதே வேலைதான். வேலை மேல அவ்வளவு வெறுப்பு இருந்தாலும் விட முடியலையேங்கிற தவிப்பு. அம்மாவிடம் அடிக்கடி சொல்லி இருப்பான். அடி மட்டும் தான் மிஞ்சும். கை ஒருநாள் கூட வெள்ளையா இருந்ததே இல்ல. தினமும் ஜெலட்டினால் கருகிப் போன கை. கைல ஏதோ சின்ன காயம், போன வாரம் ஏதோ பெரிய பட்டாசு கட்டுறப்போ வெடிச்சதாம். இதெல்லாம் சகஜமா நடக்கும் வழக்கம் போல.
இந்த முறை உறுதியான தீர்மானம், எப்படியும் வேலைய விட்டுட்டு பள்ளிக்கூடம் போகப் போறோம்ங்கிற எண்ணம். அதுதான் பட்டாசுத் தொழிற்சாலையையே எடுக்கப் போறாங்கல்ல அப்புறம் எங்க வேலை இருக்கும் என்கிற நினைப்பு, மேலோங்கிய உயர்வோடு மனசுக்குள் என்னவோ புதுசு புதுசா கனவுக் கோட்டை. இதுவரைக்கும் ஜெலட்டின் குச்சி புடிச்ச கை இனி சிலேட்டுப் பென்சில பிடிக்கப் போகுதுங்கற சந்தோஷம்.
அப்பா விட்ட வேலையாம் ஐந்து வயசு இருக்கறப்போ ஒருநாள் இரத்தங் கக்கிக்கிட்டே வீட்டுக்கு வந்தாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாங்க. ஏதோ டி.பி. நோயாம். அடிக்கடி இருமுவாரு. பார்க்கவே பாவமா இருக்கும். சிலசமயம் நான்கூட கைத்தாங்கலா புடிச்சிருக்கேன். ஒருவாரம் ஆஸ்பத்திரி போனாரு சரியாய்ப் போச்சுனு சொல்லிட்டு மறுபடியும் வேலைக்குப் போனாரு வேலை நேரத்துல அடிக்கடி பீடி குடிப்பாறாம். இது வேற சைடுல பீடி தயாரிக்கிற தொழிற்சாலை. இலவசமா பீடி கிடைக்கும். மதியத்துக்கு சாப்பாடே கொண்டு போகமாட்டடாரு. ஒருநாள் திடீர்னு மறுபடியும் இரத்தம் கக்கினாராம். அப்படியே கண் சொருகி கீழே விழுந்தவரு "என் மகனை காப்பாத்தீருங்கன்னு" சொல்லிக்கிட்டே செத்துப் போயிட்டாராம். அம்மா அழுது புலம்பினா, பிஞ்ச கைல கொடுத்துட்டு மகராசனா போயிட்டியே! அடப்பாவி! மனசுக்குள்ள சோகம். அதைவிட அம்மா அழறதப் பார்க்கறப்போ அழனும்போல தோணிச்சு. லேசா ஊளை மூக்கை ஒழுக்கிக்கிட்டே அழுதவன்.
அப்பா செத்ததுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு என்னை அனுப்பிச்சா இந்த வேலைக்கு. இன்னிக்கு வரைக்கும் வேலை பிடிச்சுப் போகல. எப்படா விடுவோம்னு ஆகிப்போச்சு அப்பாடா! விட்டுடோம்குற அளவுக்கு நிம்மதி. குடும்ப வறுமைன்னு வேற வேலை பார்க்க வேண்டியதா இருந்தது. இனிமே நல்லா படிக்கலாம். நல்ல உத்தியோகத்துக்கும் போலாங்கிற கனவு. ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்த இந்த நிறைவேறா கனவு நிறைவேறுதேங்கிற சந்தோஷம்.
யார்க்கிட்டயும் சொல்லவே இல்லை. எழுந்து வேகமாய் ஓடினான் வீட்டிற்கு. ஓடினவன் வீட்டிற்குள் கேரளத்திலிருக்கும் மாமா வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாய் துள்ளினான். மாமா கொண்டு வந்த புதுச் சட்டையை மாட்டி மாட்டிப்பார்த்தான். மிட்டாய், கேக் எல்லாம் ஆவலாய் ஒரு பிடி பிடித்தான்.
எலே! சுந்தரம் நல்லா குளிச்சுக்கிட்டு ரெடியா இரு. இன்னிக்கு நைட்டு நீ கேரளாப் போற. அங்க ஒரு நாயர் கடையில் டீ டம்ளரு கழுவுற வேலையாம். மாசம் சாப்பாட்டோட ஆயிரம் ரூபா சம்பளமாம். போனவாரமே நம்ம பட்டாசு தொழிற்சாலைய எடுக்கறதா பேசிக்கிட்டாங்கல்ல இன்னும் மூணு மாசத்துல காலியாம். மனம் வெயில் பட்ட புழுபோல் துடித்தது. முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஏதோ! இடிவந்து விழுந்ததுபோல் சலனமில்லாமல் நிசப்தமானான். இதயம் சுக்கு நூறாய் சிதைந்தது. ஏலேய்! என்று அம்மா அதட்ட அவ்வளவுதான் சீக்கிரமாய் ஓடி புறப்பட்டான் கண்களில் கண்ணீரோடு. இனி, இந்த பிஞ்சுக் கண்கள் வெளிச்சத்தை தேடிக் கொண்டே இருக்கும். அது என்றுமே எட்டாத தூரத்தில்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனி, வேலை, சுந்தரம், இருக்கும், ", மனம், இன்னிக்கு, அடிக்கடி, கொண்டு, பட்டாசுத், மட்டும், அம்மா, பீடி, ஒருநாள், நல்லா, பட்டாசு, தொழிற்சாலை, வேலைக்குப், இன்னும், எப்போதும், வந்து, என்னவோ, Short Stories - சிறுகதைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்