முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » பாரதிதாசன் - எதிர் மதிப்பீடுகள் பற்றிய மதிப்பீடு
இலக்கியக் கட்டுரைகள் - பாரதிதாசன் - எதிர் மதிப்பீடுகள் பற்றிய மதிப்பீடு
- பிறைசூடி
பாரதிதாசன் சமூக மாற்றத்தை விரும்பிப்பாடிய கவிஞர். அவர் விரும்பிய சமூக மாற்றங்கள் மிக மெல்லவே இன்றும் அரும்பி வருகின்றன. ஆயினும், சமூக மாற்றத்திற்கு எதிராக சக்திகள் இன்னும் வலிமையாகவே உள்ளன. இந்திய மக்கள் தொகையில் 70 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே அன்மையில் அவர்களுக்கு மைய அரசு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தந்திருப்பதை எதிர்த்து வட இந்தியாவில் கலவரம் வெடிக்கிறது. ஆதிக்க சக்திகளும் அவர்களின் கையிலுள்ள தகவல் தொடர்பு சாதனங்களும் பதறுகின்றன, துடிக்கின்றன. கலவரத்தைத் தூண்டுகின்றன. இதன் மூலம் சமூக நீதியை நோக்கிய பயணம் எவ்வளவு கடுமையானது என்பதனை இன்று கூட நாம் நன்றாக உணருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில் பாரதிதாசனைப் பற்றி தமிழ்நாட்டில் நிலவிய, நிலவுகின்ற கருத்துக்களைத் தொகுத்துப்பார்ப்பது, பயனுள்ளதாக இருக்கும். தான் வாழ்ந்த காலத்திலேயே மிகப்பெரிய அளவு வரவேற்பையும் மிகப் பெரிய அளவு எதிர்ப்பையும் சந்திக்கின்ற வாய்ப்பு பாரதிதாசனைப் போல் வேறு எந்த கவிஞருக்கும் கிட்டவில்லை. ஏன் பாரதிக்குக்கூட கிட்டியதில்லை. தமிழ் என்பது இழிசாதியினரின் மொழி என்ற உணர்வு ஆழ வேரூன்றி நான்கைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தமிழ் மட்டுமே அறிந்த ஒரு கவிஞருக்கு உரிய மதிப்பினைப் பெற்றுத்தந்தவர் பாரதிதாசன்.
தமிழ்நாட்டில் பாரதிதாசனைப் பற்றி எதிர் மதிப்பீடு செய்தவர்களை மொத்தத்தில் மூன்று வகையாகப் பகுக்கலாம்.
1. நிகழ்காலத் தமிழர்களுக்கு கவிதை என்றால் என்னவென்று தெரியவில்லை. அவரது கவிதைகள் வெறும் சொல்லடுக்குகளே. எனவே பாரதிதாசன் கவிஞரல்லர். - இது முதல் வகை.
2. பாரதிதாசன் நன்றாகக்கவிதை எழுதுவர் தான், ஆனாலும் ஒரு கவிஞனுக்கு இருக்கக்கூடாத முரட்டுப் பண்புகளும், நாத்திகரும், அவரது கவிதைகளில் இருந்தன. எனவே அவர் முழுமையான கவிஞரல்லர். - இது இரண்டாவது வகை.
3. பாரதிதாசன் கொண்டிருந்த பிராமண வெறுப்பு கவிஞர் என்ற அவரது ஆறாமையைச் சிதைத்துவிட்டன. இன வெறுப்புக் கொள்கை காரணமாக வர்க்க உணர்வு அவரிடம் போதுமான அளவு இல்லை. - இது மூன்றாவது வகை.
பாரதிதாசனை மதிப்பீடுபவர்களில் முதல் வகையினரை எடுத்துக் கொள்வோம்.
மத்திய ஐரோப்பாவில் ஜிப்கா நாட்டின் 'டின்பன்' என்ற கவிஞன் ஒரு குப்பைத் தொட்டிக்கு அருகிலே ஓடிய பூரானோடு பேசிய கவிதை உலகின் தலைசிறந்த கவிதை என்பர். இந்த ஞான ஆரியன்கள். தமிழர்கள் திருந்துவதற்காக மிகச்சிறிய பத்திரிகைகளை நடத்துவர், அப்பொழுதும் இலக்கியத்தில் சிலவற்றைக் காப்பியடிப்பர். இனி மேலாவது டின்பன் கவிதையைத் தமிழர்களே படியுங்கள் என்று தமிழர்களுக்காக அதை மொழிபெயர்ப்பர். பாரதிதாசனின் "கொலை வாளினை எடடா" என்பது போன்ற வடுகளும், "உதையப்பர்" "கொடுந்தடியர்" முதலிய சொல்லாட்சிகளும், கவிதையின் மேன்மையைக் கெடுத்துவிட்டன. என்பது இவர்களின் வாதம். மார்க்சைக் கூடச்சிறுபிள்ளையாக மதிக்கும் இவர்களுக்குப் பதில் சொல்லி நமக்குப் பொழுது விடியாது. இவர்களின் மன "அவசங்கள்" தேசத்தையே நாள அடிக்கும் வல்லமை பெற்றவை.
பாரதிதாசனை மதிப்பிடுபவர்களில் இரண்டாவது வகையினரை எடுத்துக் கொள்வோம்.
இவர்கள் "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி" அதற்குத் தண்ணீர் விடவும் மறந்து மனம் கசிந்து போனவர்கள், வண்ணச்சரபம் தண்டபானி சுவாமிகள் என்பவர் புலமை இலக்கணம் என்ற தமது கவிதையில் இவர்களுக்காகவே ஒருதலைக் கோட்பாட்டை தந்திருக்கிறார். "நாத்திகள் என்பான் கவிஞன் ஆகன்" இதைப் பற்றிக் கொண்ட இவர்களுக்கு,
"கடவுள் என்ற நாமதேயம் சுழறிடாத நாளிலும் உலகும் முற்றும்
பொதுமையாக உலகு நன்கு வாழ்ந்தது
கடையர் செல்வர் என்றபேதம் கடவுள் பேர் இழைத்ததே"
என்ற பாரதிதாசனனின், கவிதை வரிகள் அவர்களால் மன்னிக்கப்படவே முடியாத ஒன்று.
ஆயினும் உண்மை என்ன?
கருணையில்லா ஆட்சி துடிது ஒழிக என்று இராமலிங்க அடிகளும்,
"ஜகத்தினை அழித்திடுவோம்"
"தண்டச்சோறு உண்ணம் பாரப்பு"
"பாயுங்கடி நாய்ப்போல்சுக்காரப்பார்ப்பான்"
என்று பாரதியாரும் தமிழ்க் கவிதை மரபு விலக்கிய சொற்களையெல்லாம் தங்கள் கவிதைகளில் புழங்கி இருக்கின்றனர்.
வாழ்க்கை வீதிப்புழுதியிலும் சாக்கடையிலும் கிடக்கும் பொழுது வாழ்க்கையின் வினை பொருளான கவிதை மென்மைச் சொற்களும் மேன்மைச் சொற்களும் கொண்டதாக இருக்க முடியாது. ஒரு அறத்தை நிறுவி அதை மீறியவர்கள் இழிவடையவர் எனும் கருத்தைச் சொல்ல வரும் பொழுது "இத்தருமத்துக்கு அகுதம் செய்வான் தன் தாய்க்கு மிணாளன் ஆன பாவத்தை அடைய கடவான்" என்ற வாசகத்தைத் தாங்கிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. அந்தக்காலச் சமுதாயம் நாகரிகமற்றது என்று இவர்கள் சொல்லுவார்களா? சொல் புனிதமானது அல்ல. ஒரு சமூகம் தன் அனுபவத்துக்கு ஏற்பவே தன்னுடைய சொற்களைத் தேர்ந்தெடுக்கிறது. எனவே சொல்லிலும், எழுத்திலும் இவர்கள் காட்ட விரும்புகின்ற பண்பாடு போலித் தனமானது. மேல் தட்டு மனப்பான்மை உள்ளது. அதைப் போலவே நாத்திக வாதம் தமிழிலக்கியத்திற்கு புதிய செய்தியன்று. கடவுளை மறுத்த சமயங்களான சமணமும், பௌத்தமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததும், தமிழிலக்கியத்தை வளப்படுத்தியதும் வரலாற்றுச் செய்திகளாகும்.
மற்றுமொரு செய்தி பாரதிதாசனின் நாத்திய உணர்வு சமூக நீதிக்கான தேடலில் விளைந்ததாகும். குமரகுருபரன் என்ற தமிழ்ப்புலவன் பாட்டுக்கு மீனாட்சியம்மை குழந்தையாக வந்து முத்துமாலை பரிசளித்தாள் என்பதை உணர்வுப் பூர்வமாகப் பாரதிதாசன் ஏற்றுக்கொண்டார். மீனாட்சிக் குழந்தை தமிழ்ப்புலவனுக்குப் பரிசளித்து மறைந்த காட்சியைப் பாடும் போது 'கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சீமாட்டி', என்றே அவர் பாடுகிறார். தன் தாய்மொழிக்கு சமூக நீதி மறுக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடிய யாரையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தார் பாரதிதாசன். இதை உணராத காரணத்தால் தான் இத்தகை திறனாய்வாளர்கள் 1960 வரை பாரதிதாசன் மீது நிகழ்ந்த பழி தூற்றுப்படலத்திற்கு இரையாகிப் போனார்கள். கிணற்றுத் தவளைகளான இவர்களையும் இவர்களின் விமர்சனைகளையும் பாரதிதாசனைப் பொருத்தவரை விலக்கியே வைக்க வேண்டும்.
இனி மூன்றாவது வகையினரைக் காண்போம். இவர்கள் பொதுமை உணர்வு உடையவர்கள். ஆனால் இவர்களுக்குக் கிடைத்த பொதுவுடைமைக் கல்வி கலப்படம் நிறைந்தது. பாரதிதாசனின் பிராமண்ய எதிர்ப்புணர்வினை இன்றளவும் இவர்களால் செரித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பாரதிதாசனின் பிராமண்ய எதிர்ப்புணர்வு சமூக நீதிக்காணப் போராட்டம்தான். அதை ஓரளவு பாரதியிடமிருந்தும், பேரளவு பெரியாரிடமிருந்தும் பாரதிதாசன் பெற்றுக் கொண்டார்.
மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் தொலைக்காட்சியில் ஆறு வாரகாலம் வேதம், சிரார்த்தம், தர்ப்பணம், ஆகியவற்றின் பெருமை, அவற்றை உடைய பிராமணர்களின் பெருமை ஆகியன தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. இவர்களும் இவர்களின் பொதுவுடைமை உணர்வும், இந்தக் கொடுமையை நோக்கிச் சுட்டுவிரலைக்கூட அசைத்ததில்லை.
இந்தியாவில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவை அறுதியிடுவதில் இடமும் வலமுமாக நின்று கடந்த 50 ஆண்டு காலமாக தோற்றுப் போனவர்கள் இவர்கள். பாரதிதாசனின் பிராமண எதிர்ப்பு இறுதிவரை இவர்களாலே புரிந்து கொள்ளப்படாமலே போயிற்று. பாரதிதாசனின் தலைவரான பெரியாரே தமிழ்நாட்டில் முதலில் "பொதுவுடமை அறிக்கையை"த் தமிழில் வெளியிட்டார். மயிலம் சிங்காரவேலைப்பாடி கவிதை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிதாசன் தமிழ்நாட்டின் பொதுவுடமை இயக்கத்தின் தலைவனான சிங்காரவேலர் குறித்தும் பாடி உள்ளார். தான் பொதுஉடமை உணர்வை சிங்காரவேலரிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு,
"கோலப் பொதுவுடமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல் அரசியல் அவனால்"
என்று கவிதையிலே சான்று தருகிறார். இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் நாட்டின் மீது ஹ’ட்லர் படை எடுத்த போது ஹ’ட்லரின் தோல்வியை முன் மொழிகிறார் பாரதிதாசன்.
"மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென
ஒக்க வாழும் உறுதி இதுவென
முதிய பெரிய முழு நிலத்திற்கும்
புதியதாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர், தீர்ந்தான் முற்றிற்று".
எனவே பாரதிதாசனின் பொது உடமை உணர்வு ஐயத்திற்கு இடமில்லாதது. இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தேசிய இன உணர்வுகள் கிளர்ந்து எழுந்து நிற்கின்றன. பல்வேறு தேசிய இனங்கள் வாழும் சோவியத் நாட்டில் ருஷிய மொழிபேசும் தேசிய இனம் மற்ற இனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.
சிங்களப் பெருந்தேசியஇனவாதத்தைப் போல ரஷ்ய பெருந்தேசிய இனவாதம் ஒன்று சோவியத் நாட்டில் உருவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. தேசிய இனங்களுக்கு இடையில் பகை உணர்வுகள் அரும்பிக் கலவரங்கள் வெடிக்கின்றன. இந்தப் பின்னணியை மனத்தில் கொண்டு பாரதிதாசனின் இன உணர்வுக் கவிதைகளை நாம் அணுகவேண்டும்.
பாரதிதாசனின் பிராமய எதிர்ப்பு உணர்வு கண் மூடித்தனமானதல்ல. பாரதி பரிதிமாற்கலைஞர், ஆகியோரையும் பின்னர் விவாதத்திற்குள்ளாகிய வ.வே.க. ஐயரையும்கூடப் பாரதிதாசன் கவிதையில் பாராட்டினார்.
'பிராமண்யம் என்பது உடல் உழைப்பில் இருந்து அந்நியப்படுவது', சமுதாயத்தின் மேல், கீழ் என்ற பிரிவுகளையும் பண்பாட்டு நீதியாக நியாயப்படுத்துவது என்கிற உண்மையைத் தமிழ்நாட்டில் வாக்குக் கேட்க வந்த மார்க்சீயர்கள் மறந்து போய் விட்டார்கள். வார்க்க வேறுபாடுகளைப் பிராமண்யம் நியாயப்படுத்துவதால் தான் இன்று சில மேல்தட்டுத் தமிழர்கள் 'புதிய பிராமணர்களாக' உருவெடுத்து வருகின்றனர். எனவே இன்றும்கூடப் பிராமண்யம் ஒரு வாழ்நெறியே. பொதுமை உணர்வு கொண்டோறால் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த உண்மையை மறந்தும், மறுத்தும் நின்றதால்தான் மார்க்சீயர்களின் உழைப்பு தமிழ் நாட்டில் விழலுக்கு இறைந்த நீராகப்போயிற்று. பாரதிதாசனைப் பற்றி அவர்களது மதிப்பீடுகள் தவறாகி நின்றன.
வாழ்வின் மிகப்பெரிய பரிமானம் ஆகிய காலம் இன்று நமக்குச் சில உண்மைகளை உணர்த்துகின்றது. ஒரு படைப்பாளியைப் பற்றிய சம காலத்து மதிப்பீடுகள் பொதுவாக அவனுக்கு நியாயம் செய்வதில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் இது தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஒன்றுதான். இன்றைக்கும் பசி வந்துவிடுமோ என்று அஞ்சிய திருவள்ளுவர் முதல் பசிக்கும் நோய்க்கும் பலியான நம் காலத்துப் புதுமைப்பித்தன் வரையில் இதுதான் நடந்தது... எனவே பாரதிதாசனை மதிப்பிடுவதிலும் அப்படியொரு தவறு நடந்தது வியப்புக்குரிய செய்தியன்று.
பாரதிதாசன் கவிதை எழுதிய காலத்திலும் அவர் வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் பாரதிதாசன் பற்றிய மதிப்பீடுகளில் நூற்றுக்கு தொன்னூறு எதிர் மறையானவை. இன்று 20ம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் நின்று கொண்டு ஐரோப்பாவையும் ஆசியாவையும் அரசியல் ரீதியாக உணர்ந்து கொள்கிற யாரும் பாரதிதாசன் பற்றிய புதிய மதிப்பீட்டைக் கட்டாயம் செய்வார்கள். செய்ய மறுப்பவர்களையும், மனமில்லாதவர்களையும் காலவெள்ளம் புரட்டி இழுத்துக் கொண்டு போய்விடும் என்பதில் ஐயமில்லை
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாரதிதாசன் - எதிர் மதிப்பீடுகள் பற்றிய மதிப்பீடு - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - பாரதிதாசன், ", பாரதிதாசனின், கவிதை, உணர்வு, சமூக, தமிழ்நாட்டில், இவர்கள், தான், பாரதிதாசனைப், இவர்களின், போது, நாட்டில், தேசிய, என்பது, அவர், இன்று, தமிழ், வாழ்வின், சோவியத், பற்றிய, பிராமண்யம், பொதுவுடமை, கொண்டு, பாரதிதாசனை, பற்றி, மக்கள், அளவு, அவரது, வந்த, பொழுது, மீது