முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » இலக்கியக் கட்டுரைகள் » தத்துவங்களுக்கேற்ற சின்னங்கள்
இலக்கியக் கட்டுரைகள் - தத்துவங்களுக்கேற்ற சின்னங்கள்
- சுவாமி ஆத்மானந்தா
ஒவ்வொரு சமயத்துள்ளும் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. அம் மூன்றினுள் தலையாயது தர்சனம் அல்லது தத்துவம். அதற்கு அடுத்தபடியில் இருப்பது புராணம். அதற்கடுத்ததாக இருப்பது கிரியைகள். இம்மூன்றினுள் ஒரு மதத்தின் சாராம்சத்தை உள்ளது உள்ளபடி விளக்கவல்லது தத்துவமேயாம்.
உயர்ந்த உண்மைகளை நேரடியாக அறிந்து கொள்ளுதல் எல்லோருக்கும் இயலுவதில்லை. அத்தகையவர்களுக்கு புராணங்கள் மூலமாகத் தத்துவக் கருத்துகள் விளக்கப்படுகின்றன. புராணங்கள் பெரும்பாலும் புனையப்பட்டவையாகவும், பழைய சரிதங்களை மையமாக வைத்து எழுதப்பட்டவையாகவும் இருக்கலாம். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் இதனுள் அடக்கலாம். தத்துவங்களை நேரே அறிந்து கொள்ள இயலாதவர்கள் இதிகாசங்கள் மூலமாகவும், புராணங்கள் மூலமாகவும் பல பேருண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, சத்தியத்தையே பேசு; தர்மத்தைக் கடைப்பிடி என்பது தத்துவக் கருத்துகள். அரிச்சந்திரன் கதை மூலமாக இதை விளக்குவது புராணம். கடவுள் எங்கும் நிறைந்துள்ளார்; எல்லா உயிர்களிலும் உயிர்க்குயிராய் இருக்கிறார் என்பது தத்துவம். திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், வந்திப்பாட்டிக்குப் கூலியாளாக வந்த சிவபெருமான் முதுகில் பட்ட பிரம்படி, எல்லா உயிர்களிலும் பட்டது என்பது புராணம். இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான் என்பதை இது விளக்குகிறது.
புராணங்கள் புகட்டுகிற தத்துவார்த்த உண்மைகளைக் கிரியைகள் இன்னும் எளிதாகப் புலப்படுத்துகின்றன. உயிர்க்கு ஒப்பாய் இருப்பது தத்துவம். உயிர் எடுத்துள்ள உடலுக்கு ஒப்பாய் இருப்பது கிரியைகள். உடலின் மூலம் உயிர் விளக்கமுறுவது போன்று, கிரியைகள் மூலம் தத்துவம் விளக்கமுறுகிறது. கடவுளாகிய ஒரு பொருளே பலப்பல உயிர்களாகவும் பஞ்சபூதங்களாகவும் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த உண்மை, கோயில் வழிப்பாட்டில் கிரியைகள் மூலம் விளக்கப்படுகிறது. இறைவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் கர்ப்பகிரகத்தில், தெய்வத்தின் விக்கிரகத்திற்குப் பின்னால் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, அதைப் பல தீபங்களாகத் தெரியும்படி பல கண்ணாடிகளைப் பதித்து, பிரதிபலிக்கச் செய்கிறார்கள். ஸ்ரீரங்கத்திலுள்ள கண்ணாடி அறை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஏற்றிவைத்துள்ள ஒரு தீபம் எங்கு திரும்பிப் பார்த்தாலும் எண்ணற்ற தீபங்களாகத் தெரிகின்றன. இங்ஙனம் உயர்ந்த உண்மைகளை விளக்குவதற்குப் புராணங்களும், கிரியைகளும் உதவியாக இருக்கின்றன.
பாரமார்த்திக வாழ்வில் பெருநிலை அடைந்த பண்பட்ட மக்களுக்குத் தத்துவம் அல்லது தர்சனம் நேரடியாக விளங்கிவிடுகிறது. மற்றவர்களுக்கு அவரவர் அடைந்துள்ள பக்குவத்திற்கு ஏற்பப் புராணங்களும், கிரியைகளும் இன்றியமையாதவை ஆகின்றன. இதனை முன்னிட்டே சமயங்கள் அனைத்தும் தத்துவம், புராணம், கிரியைகள், ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு திகழுகின்றன.
சாஸ்திரங்கள் புகட்டுகின்ற தத்துவங்களை எல்லோரும் எளிதில் அறிந்து கொள்ள இயலாது. அதனால் சின்னங்கள் நமக்கு முற்றிலும் தேவையாய் இருக்கின்றன. கடவுள் உறுப்புகள் உடையவராகவும், உறுப்புகள் அற்றவராகவும் இருக்கிறார் என்பது தத்துவம். இறைவன் உறுப்புகள் அற்றவர் என்பதை சிவலிங்கம், சாளக்கிராம் ஆகிய சின்னங்கள் நமக்கு விளக்கிக் காட்டுகின்றன. கடவுள் உருவம் உடையவர் என்பதை நடராஜ வடிவமும், அரங்கநாத வடிவமும், ராமன், கிருஷ்ணன், அம்பிகை போன்ற எண்ணற்ற வடிவங்களும் நமக்குக் காட்டித் தருகின்றன. உருவமும் வடிவமும் அற்ற பரம்பொருளுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களையும் வடிவங்களையும் அமைத்து நமது முன்னோர் வழிபாடு செய்திருக்கின்றனர்.
ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்பது திருவாசகம்.
ஆலயங்களில் வைத்து வணங்கப்படும் விக்கிரகங்களே சின்னங்கள் எனப்படுகின்றன. இத்தகைய சின்னங்களின் துணையின்றி பெரும்பாலான மக்கள் சமயத்தைப் புரிந்து கொள்ளுதலும், அதனை நடைமுறைப்படுத்துதலும் இயலாத காரியமாகும். நமது மன அமைப்பையே நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சின்னங்களின் துணையின்றி நாம் சிந்தித்தலே இயலாத காரியமாகும். சொற்கள் என்பவை சிந்தனைகளின் சின்னங்களே தவிர வேறில்லை. உள்ளத்து உணர்வுகளை எல்லாம் சொல்லின் மூலம்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். சொல் என்னும் சின்னம் இல்லாது போய்விட்டால் சிந்தனைக்கு விளக்கம் தரமுடியாது.
பிரபஞ்சம் முழுவதுமே ஒரு சின்னம்தான். இதன் மூலம் கடவுள் தம்மை விளக்கிக் கொண்டிருகின்றார். உடல் என்னும் சின்னத்தின் மூலம் உயிர் தன்னை விளக்கிக் கொண்டிருப்பதுபோன்று, பிரபஞ்சம் என்னும் சின்னத்தின் மூலம் இறைவன் தன்னை விளக்கிக் கொண்டிருக்கின்றார். அண்ட சராசரங்கள் அனைத்தும் இறைவனை நினைவுபடுத்தும் சின்னங்களேயாம். படைப்பின் துணை கொண்டுதான் நாம் படைத்தவனை அறிந்து கொள்ளமுடியும். திருக்குறளின் மூலமாகவும், சிலம்பின் மூலமாகவும்தான் நாம் திருவள்ளுவரையும் இளங்கோவடிகளையும் அறிந்து கொள்ளுகிறோம். பிரபஞ்சத்தின் மூலமாகத்தான் நாம் பரமனை அறிந்து கொள்ளவேண்டும்.
சமயச் சின்னங்களெல்லாம் யாரோ ஒரு சிலருடைய கற்பனைகள் என்று எண்ணிவிடலாகாது. இவையெல்லாம் நிறைமொழி மாந்தரது மனத்தகத்து இயல்பாகத் தோன்றியவை. உயிருக்கேற்ற உடல் என்பதைப்போல, தத்துவங்களுக்கேற்ற சின்னங்களும் இயல்பாக அமைந்தவையே. உலகிலுள்ள பல்வேறு மதங்களுக்குப் பல்வேறு சின்னங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவர்கள் அனைவரும் சிலுவையைத் தங்கள் சின்னமாகக் கொண்டிருக்கின்றனர்.
இந்துக்களாகிய நாம் பலப்பல சின்னங்களை வைத்திருக்கின்றோம். ஆறு சமயங்களையும், வழிபாட்டுமுறைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பது இந்து சமயம். சூலாயுதம், வேலாயுதம், ஸ்வஸ்திக், கருடன், காளைமாடு, சிங்கம், மயில், சேவல், விபூதி, திருமண், குங்குமம் இவையாவும் சமயச்சின்னங்கள்தான்.
இயற்கையின் இயக்கத்தை வைத்தே சொற்களும் சமயச் சின்னங்களும் வடிவெடுத்திருக்கின்றன. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் கூற்று. இறைவழிபாடு என்பது இன்று நேற்றுத் தோன்றியது அன்று. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நமது பண்பட்ட மக்களுக்கிடையில் அது நடைமுறைக்கு வந்துவிட்டது.
சமய சாதனங்களையும் வழிபாட்டு முறைகளையும், சின்னங்களையும் யாரும் குறைகூறுதல் கூடாது. ஆலயங்களில் நடைபெறுகின்ற தேர்த்திருவிழாக்களையும், கிரியைகளையும் இழிவுபடுத்திப் பேசலாகாது.
ஆலய வழிபாடும் சமயச்சின்னங்களை அணிதலும் நெற்றியில் திருநீறு, திருமண் இடுதலும் வெறும் அலங்காரத்திற்கல்ல. உயர்ந்த உண்மைகள் அவற்றில் பொதிந்து கிடக்கின்றன. அதிகாலையில் ஆலயத்துக்குச் சென்று கூட்டுதல், மெழுகுதல், விளக்கிடல், பூமாலை புனைந்து ஏத்துதல், தேவார திருவாசகப் பதிகங்களைப் பாடிப் பரவுதலை முறையாகச் செய்துவரின் அதனால் பெறுகின்ற பலன் அளப்பரியனவாம்.
அதனால் சமயச் சின்னங்களும், வழிபாட்டு முறைகளும் மனிதவர்க்கத்தை மேலோர்களாக்கும் என்பதில் ஐயமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தத்துவங்களுக்கேற்ற சின்னங்கள் - இலக்கியக் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - நாம், என்பது, தத்துவம், அறிந்து, கிரியைகள், மூலம், இருக்கின்றன, விளக்கிக், சின்னங்கள், இருப்பது, கடவுள், புராணங்கள், புராணம், வடிவமும், சின்னங்களும், நமது, உறுப்புகள், சமயச், என்னும், இறைவன், மூலமாகவும், உயர்ந்த, எல்லா, உயிர்களிலும், உயிர், என்பதை, அதனால்